21/1/14

ஹிட் கணக்கு

தமிழில் எழுதுபவர்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் விஷயம் இந்த ஹிட் கணக்குதான். ரொம்ப கஷ்டப்பட்டு எழுதினாலும் பெரிய கவனம் இருக்காது - என்னென்னவோ சமாதானம் சொல்லிக்கொண்டு காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. 

இன்றைக்கு ஒரு ஆச்சரியமான செய்தி படித்தேன். Thestoryprize.org என்ற தளம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த சிறுகதைத் தொகுப்புகளைத் தேர்ந்தெடுத்து பரிசளிக்கிறது. அவர்களும் ஒரு வலைதளம் வைத்திருக்கிறார்கள். அங்கு இன்றைக்கு இப்படி ஒரு இடுகை இட்டிருக்கிறார்கள் : 

 For the fourth straight year, in 2013 The Story Prize invited each author of a collection we received as an entry to contribute a guest post to our blog. Out of 94 authors, 62 chose to participate. We thank them for their thoughtful , interesting contributions. Since 2010, when we began doing this, TSP has featured 266 guest posts from 263 writers. 

According to Blogger's statistics, every author post received at least 100 page views, with most getting 300 or more and the most active page (Jess Walter's) so far drawing more than 1,200 hits. The posts with the second and third most hits this year were Edwidge Danticat's and George Saunders'. The links, in alphabetical order by the author's last name, are to each guest post. 

இதைப் படித்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதிக அளவில் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் வாய்ப்புகளை அளிக்காத, கனமான விஷயங்களுக்கு குறைவான வாசகர்கள்தான் இருப்பார்கள் என்ற என் எண்ணத்தை உறுதிபடுத்துகிறது இது. தமிழாவது பரவாயில்லை, உலகில் எத்தனை பேர் ஆங்கிலம் படிக்கிறார்கள், George Saunders எழுதிய பதிவுகூட 1200 தாண்டவில்லை என்றால் எத்தனை சந்தோஷமாக இருக்கிறது. 


இவர்கள் சராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் நூறு நோக்கர்கள், பலவற்றுக்கும் முன்னூறு நோக்கர்கள் என்ற கணக்கு சொல்கிறார்கள். ஒப்பீட்டில் எனக்கு தெரிந்த மூன்று தமிழ் தளங்களில் எதுவும் இதை ஒப்பு நோக்கும்போது பெரிய அளவில் சோடை போகவில்லை என்று நினைக்கிறேன். 

பதினொன்றாம் பரிமாணத்தைப் பொருத்தவரை சராசரியாக இருபது முதல் முப்பது நோக்கர்களுக்கும், சில பதிவுகள் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கும் சென்று சேர்ந்திருக்கின்றன என்பதையும் இளம் இலக்கிய விமரிசகர் கோபி ராமமூர்த்தி வாசித்தேயாக வேண்டிய வலைதளம் என்று வலைச்சரத்தில் பரிந்துரைத்திருக்கிறார் என்பதையும் தகவல்களாக தெரிவித்துக் கொள்கிறேன்.

18/1/14

ஒரு புத்தகத்தின் ஆற்றல் - அங்கே

ஒரு நாவலில் இடம் பெற்ற ஓவியம். அந்த ஓவியத்தை இரவல் வாங்கி ஒரு ம்யூசியம் பார்வையாளர்களின் கண்காட்சிக்கு வைக்கிறது - சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில், நாவல் பற்றியெல்லாம் எதுவும் தெரியாமலேயே. அந்த ஓவியமும் புகழ் பெற்ற ஓவியமோ ஓவியர் வரைந்ததோ அல்ல.


அக்டோபரில் துவங்கிய கண்காட்சி. இன்றும் ஓவியத்தைக் காண ஜீரோ டிகிரிக்கும் குறைவான குளிரில் மணிக்கணக்காக மியூசியத்துக்கு வெளியே வரிசையாக நின்று கொண்டிருக்கிறார்கள் வாசகர்கள். இதுவரை இரண்டு லட்சம் பேர் வருகை தந்திருக்கிறார்களாம், சொல்கிறது செய்தி. 


இதை எழுதிய டோனா டார்ட் பற்றி தமிழில் யாருக்காவது தெரிந்திருக்குமா என்னவோ, அஜய் புண்ணியத்தில் ஆம்னிபஸ் வாசகர்கள் மட்டுமாவது இவரை அறிந்திருப்பார்கள் என்பது நிச்சயம்.

12/9/12

விமரிசன சுதந்திரம்

ஒரு விமரிசகனுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது என்பதை வெவ்வேறு கோணங்களில் பேசினாலும், இந்தக் கட்டுரையில் எனக்குப் பிடித்த பத்தி இது. யதார்த்த உண்மையைப் பேசுகிறது, நாம் இதை ஏறத்தாழ மறந்தே போய் விட்டோம்:
"விமரிசகனின் எழுத்தைப் பதிப்பிக்கும் இதழ், செய்தித்தாள் அல்லது இணையதளத்துக்கு என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அங்கு பதிப்பிக்கப்படும் விஷயங்களுக்கு ஒத்திசைந்தும் முரண்பட்டும் பல்வேறு தராதரங்களின் அடிப்படையில் அது தன் தீர்ப்புகளை மறுவினையாகத் தருகிறது. அங்கிருக்கும் தர அளவுகோல்களைக் கண்டுகொள்ள மாட்டேன் என்று விமரிசகன் சொல்லிவிட முடியாது. களையைக் களையல்ல என்று சொல்லும் சுதந்திரம் அவனுக்குக் கிடையாது. ஆனால், இந்தத் தர விழுமியங்களைக் கையாண்டு அவன் அவற்றைத் திருத்தி எழுத முடியும். அந்தப் பத்திரிகையில் எழுதும் ஏனைய விமரிசகர்களுடனான உரையாடலால் இது சாத்தியப்படுகிறது. ஒரு புத்தகம் ஏன் உருப்படியாக இருக்கிறது, அல்லது இல்லை என்று சொல்வதற்குத் தேவையான தர அளவீடுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை அவனுக்கு இருக்கிறது. இங்கு அவன் மதிப்பீட்டுக்கான விழுமியங்களைத் தரம்பிரித்துப் பார்க்கிறான் என்று சொல்லலாம். தேவைப்பட்டால் அவன் புதிய மதிப்பீடுகளைக்கூட தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவன் எதையெல்லாம் தரம் என்று தேர்ந்தேடுக்கிறானோ, அதுவெல்லாம் அவன் எழுதும் பத்திரிகையின் வாசகர் தரத்தை வரையறுக்க உதவுகின்றன - அவனது தர அளவீடுகள் சில வாசகர்களை ஈர்க்கின்றன, சிலருக்கு விலக்கம் தருகின்றன"
யாருக்குதான் தரம் குறித்த அக்கறை இல்லை? அதைத் தீர்மானிக்கும் அடிப்படை விழுமியங்கள் இல்லை? ஆனால் அவை வெளியே சொல்லப்படுவதில்லை, சொன்னால் அது ஒரு மனச்சாய்வு, கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நிலைப்பாடு என்றெல்லாம் திட்டுவார்கள் என்ற அச்சம் இருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை, யாரானாலும் ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு, அதை அறிந்துகொண்டேதான் அங்கு எழுதுபவர்கள் எழுதுகிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது மேற்கண்ட கட்டுரை.



10/9/12

ரசனைக் குறிப்புகள்

ஒரு புத்தக மதிப்புரை. இதில் நிக் ஹார்ன்பி பற்றி சில சுவையான குறிப்புகள். "நான் படிக்கும் சமாசாரங்கள்" என்ற தொடரின் துவக்க பத்தியில் அவர் எழுதினாராம், "எப்படி, எப்போது, ஏன், எதைப் படிக்கிறேன் என்பதை எழுதப் போகிறேன் - வாசிப்பு சுகமாகப் போகும்போது, ஒரு புத்தகம் மற்றொன்றுக்கும், அங்கிருந்து வேறொன்றுக்குமாக, கருப்பொருளிலும் உட்பொருளிலும் தொடர்புடைய காகிதத் தடமாய் என்னை அழைத்துச் செல்லும் பாதையை நான் தொடர்வதை எழுதப் போகிறேன்," என்று. இதையே ஆம்னிபஸ்ஸில் எழுதும் நண்பர் ஒருவரும் சொன்னார் என்று நினைவு. விமர்சகர் எவ்வளவு பெரிய ஆளாகவும் இருக்கலாம், ஆனால் வாசகர்கள் ஒரே பாதையில்தான் பயணத்தைத் தொடர்கிறார்கள்.

புத்தகங்களைக் கோட்பாடுகளைக் கொண்டும் அணுகலாம், வாழ்க்கையை விவரிக்கும் பதிவுகளாகவும் அணுகலாம், ரசனைக் குறிப்புகளாகவும் அணுகலாம் - அல்லது ஹிலாரி கெல்லி ஹார்ன்பியின் எழுத்தைக் குறித்து சொல்வதுபோல் இப்படியும் அணுகலாம்::
 "ஹாரன்பி தன் வாசிப்பின் இயல்பை விவரிக்கிறார், அவரது அன்றாட இருப்பைக் காண நமக்குச் சின்னச் சின்ன ஜன்னல்களைத் திறந்து வைக்கிறார்.  அதில் மிக முக்கியமாக, அவர் தன் உணர்வுகளை எழுதுகிறார் - தன் வாசிப்பில் அடையப்படும் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். அவரது பத்திகள் இயல்பாக இருக்கின்றன - அவர் கவனமாகக் குறிப்பெடுக்கவும் உருவ அமைப்புகளைக் கண்டுபிடித்துக் காட்டவும் உதவும் நிரலிகள் அமைக்கப்பட்ட, அறிவுள்ள வாசிப்பு இயந்திரம் அல்ல - எழுத்தை நேசிப்பவர், பழுது சொல்ல முடியாத ரசனை உள்ளவர், உற்சாகமான நடையில் எழுதும் துல்லியத்தைப் பழகித் தேர்ந்தவர்".
தரம் பிரித்தலையோ, ரசனை மேம்பாட்டையோ நாம் எல்லாரும் நோக்கமாகக் கொள்ள வேண்டியதில்லை - நம் சிந்தனையின் சரடுகளை நாம் வாசிக்கும் புத்தகங்களூடே பிரித்துப் பார்க்கலாம், அல்லது, நாம் வாசித்த புத்தகங்களில் நாம் ரசித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம், தவறில்லை, நம் விருப்பம். அப்படி நாம் எழுதுவதில் நம் வாசிப்பு அனுபவம் சொல்லிக் கொள்ளும்படி இருந்தது என்ற விஷயம் வெளிப்பட்டாலே வெற்றி பெற்ற மாதிரிதான். வாசிப்பு ஒரு அகவய அனுபவம் என்பதால் இத்தகைய புத்தக மதிப்பீடுகள் எவ்வளவுக்கு எவ்வளவு நம் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு வாசிக்க நன்றாக தருகின்றன.

"ஓய்வு கிடைக்கும்போது புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் பிழைத்திருக்க வேண்டுமானால், நாம் வாசிப்பின் சந்தோஷங்களை உயர்த்திப் பேச வேண்டும் - சந்தேகத்துக்கிடமான அதன் பயன்களை அல்ல" என்கிறார் ஹார்ன்பி.


24/3/12

ஒரு வரலாற்றுப் பதிவு

தமிழில் ஒரு கதையோ நாவலோ ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் அல்லது சமூகத்தில் வாழ்க்கை முறையைச் சித்தரித்தாலே போதுமானதாக இருக்கிறது - இது ஒரு ஆவணப் பதிவு என்று சொல்லி அதை இலக்கியமாக்கி விடுகிறார்கள், இது எந்த அளவுக்கு சரி? வரலாற்றைப் பேச வேண்டும், தத்துவத்தை விசாரிக்க வேண்டும் என்பது போன்ற தகுதிகள் எல்லாம் ஆவணப் பதிவாக இருக்கும் இலக்கியங்களுக்கு இல்லையா என்ற கேள்வி என்னை ரொம்ப நாட்களாகத் துளைத்துக் கொண்டே இருந்தது.

இந்தப் புத்தக விமரிசனத்தைப் படித்ததும் எனக்கு பதில் கிடைத்து விட்டது என்று சொல்ல முடியாது, ஆனால் ஆங்கிலத்திலும் அப்படிதான் என்று கண்டு தெளிந்தேன்.

"தெரசாவும் இசபெல்லாவும்" ஒரு சமூக ஆவணமாக எடுத்துக் கொள்ளப்படும்போது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது என்பதை நான் தெளிவுபடுத்திவிட்டேன் என்று நம்புகிறேன். அது ஒரு இலக்கியப் படைப்பாகவும் இருக்கிறது என்கிறபோதும் பூர்ஷ்வாக்களுக்குரிய பண்பாட்டு வெளிப்பாட்டு முறைமைகளிடமிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ளாத எழுத்தாளரிடம் நாம் எதிர்பார்க்கக்கூடிய குறைகள் இந்தப் படைப்பையும் பீடித்திருக்கின்றன. இலக்கியத்தை நேசிப்பவர்கள் லெட்லுக்கின் இந்தக் குறுநாவலைக் குற்றமற்றப் படைப்பாகப் பார்க்கக்கூடும்; ஆனால் அதைவிட முற்போக்கான பாட்டாளி வர்க்கப் பார்வையில் புத்தகங்களை அணுகும வாசகர்கள் இந்தப் புத்தகத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டாடுவார்கள் - என்றபோதும், அதே வேளையில் அவர்கள் இந்தப் பிரதியை நகைச்சுவையான ஒன்றாகவோ அலுப்பூட்டும் ஒன்றாகவோ அறியக்கூடும் (அது அவரவர் ரசனையையும் நகைச்சுவை உணர்வையும் சார்ந்த ஒன்று)

இப்படியெல்லாம் எழுதுவதைப் படிக்கும்பொது நம்மில் சில பேருக்கு சிரிப்பு வரும், சிலருக்கு கொட்டாவி வரும், இல்லையா, அந்த மாதிரி போல.

19/12/11

பஜனை மடங்களைப் பற்றி சில குறிப்புகள்

நவீனத்துவத்தின் தாக்கங்களில் மிக முக்கியமான ஒன்று மனிதனின் தனித்துவத்தைப் பேசுதல்; நம் அனைவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு என்பதையும், அதன் சாத்தியங்களை அறிதலும் வெளிப்படுத்தலும் முக்கியம் என்பதையும் நாம் இயல்பான விஷயங்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். தனி மனித சுதந்திரம் என்று சொல்லும்போது, இந்த தனியன் வந்து விடுகிறான். பெரும்பாலும் சுதந்திரமாக அறியப்பட்டாலும், சில மேலை இலக்கிய மற்றும் தத்துவவாதிகளின் எழுத்தில் ஒரு பெரும்சுமையாக இதன் நீட்சியான தனிமை உணரப்படுகிறது.

இப்போது உருள் பெருந்தேர் சிறிதளவுக்கு மாற்று கோணத்தின் வெளிச்சம் பெறுவது போல் உள்ளது. மேற்கில் எழுதப்படும் புத்தகங்களில் சில, புனித உணர்வை மீளப் பெறுவது குறித்துப் பேசுகின்றன. அவற்றில் ஒன்று குறித்துப் படித்த மதிப்புரை இன்று குறிப்பிடத்தக்கதாகத் தோன்றுகிறது:

17/12/11

இரு கட்டுரைகள்

நல்ல நாளிலேயே மனிதன் நாலையும் யோசித்துக் கொண்டிருப்பான், உலகைக் குறித்து, மனிதர்களைக் குறித்து, உறவுகளைக் குறித்து என்று. அந்த எண்ணங்கள் அவனது வாழ்க்கையை பாதிப்பதாக இருக்கும் என்பதை சொல்லவே வேண்டும். எண்ணங்கள் செயல்களின் ஒத்திகை என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். ஆனால், சிந்திப்பதே, கற்பனையே ஒரு மனிதனின் தொழிலாகப் போய் விட்டால், அவன் மற்ற மனிதர்களைப் போல் இருப்பது கடினம். கற்பனையால் பாதிக்கப்பட்ட ஒருவர் பிலிப் கே டிக். பாதிக்கப்பட்ட என்று நாம் சொல்கிறோம், ஆனால் செறிவடைந்த ஒருவர் என்றும் சொல்லலாம்: அவரது எழுத்துகள் எவ்வளவு ஆற்றல் மிகுந்தவையாக இருக்கின்றன. அவர் தனது மனமயக்கங்களை லட்சக்கணக்கான சொற்களில் எழுதியுள்ளார். அவற்றுள் சில ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது.

பிலிப் கே டிக் பற்றிய அந்த மதிப்புரை இங்கே.


ஒரு வகை புத்தக விமரிசனம், அந்தப் புத்தகம் எதைச் சொல்கிறது, எப்படிச் சொல்கிறது, அவை குறித்த விமரிசகரின் கருத்துகள் என்ன என்பது. இன்னொரு வகை விமரிசனம் அதைவிட கொஞ்சம் புதியது, நுட்பமானது- ஜெப் டயரின் இந்த மதிப்புரையைப் பாருங்கள். தான் விமரிசிக்கும் நாவல் வாழ்க்கையை எப்படி பார்க்கிறதோ, எப்படி விவரிக்கிறதோ, அதே பார்வையில் அந்த நாவலையும் அணுகியிருக்கிறார் டயர். நாவல் எதைப் பேசுகிறதோ, அது இந்தக் கட்டுரை வழியாக நமக்குக் கிடைத்து விடுகிறது.