மொழியாக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழியாக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7/12/11

புறவழிச் சாலைகள்

மருத்துவர்கள் கவிஞர்களாக இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. வாழ்வின் கூர்முனையில் நிற்பவர்கள் அவர்கள். சாதாரணர்களுக்குக் காணக் கிடைக்காத உணர்வின் உச்ச கணங்கள் அவர்களுக்கு அன்றாட நிகழ்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் எல்லா மருத்துவர்களும் கவிதை எழுதுவதில்லை என்பதுதான் கேள்வியாக இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் ஒரு மருத்துவக் கல்லூரியில் கவிதைப் போட்டி வைத்தார்களாம். அதில் ஒரு கவிதை:

அபேசியா
-நோவா கபூனா

மூளையில் சில நெடுஞ்சாலை
அமைப்புகள் இருப்பதாய் கற்கிறோம்:
கார்பஸ் கல்லோசம்,
ஸ்பைனோதலமிக்,
ஆப்டிக் ரேடியஷன்.

ஆனால் அங்கு வேறு சாலைகளும் உண்டு.
பார்வைக்கு மறைந்திருக்கும்
அழகிய ந்யூரல் பின்புலங்கள்:
புழுதிச் சாலைகள், அதிகம் பயன்படுத்தப்படாதவை.

நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருக்கும்போது
சில சமயம் நாம் அவற்றைக் காணலாம்:
கான்சர்,
சர்ஜரி,
ஸ்ட்ரோக்.

எங்கள் துயரர் ஒருவருக்கு மூளையில் கட்டி.
நாங்கள் அவளது நெடுஞ்சாலைகளை
ஒரு இறகை வரைந்து சோதித்தோம்:
"இது என்ன?"

அவள் அளித்த பதில்
அழகிய புறவழிச் சாலையில் வந்தது:
"ஒரு பறவை
உதிர்த்த
இலை"

22/7/11

மொழியாக்கம் செய்வது எப்படி?

அருணவ சின்கா வங்காளத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பவர். இவரது மொழியாக்கங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அரங்கிலும் கவனம் பெற்றுள்ளன. மொழி பெயர்ப்பு கலை குறித்து அவரது பத்து குறிப்புகள் இங்கே:

மூல நூலைப் படிப்பது மட்டும் போதாது, உன் தலைக்குள் கேட்கும் குரலை கவனிக்க வேண்டும்.
முதல் வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப திருத்தி எழுது- நீ அந்த குரலைப் பிடித்து விட்டாய் என்ற திருப்தி கிடைக்கும் வரை.
எழுத்தாளரின் குரல் பிடிபட்டதும் முதல் வரைவு வடிவத்தை விரைவாக முடித்து விடு- அந்தக் குரல் வெகு நேரம் தங்காது.
ஃப்ளோவில் இருக்கும்போது மூல நூலில் உள்ள கடினமாக பகுதிகளுக்கு விடை காண மொழியாக்கத்தை நிறுத்தி யோசிக்காதே; மூல மொழியில் உள்ளபடியே வைத்து விட்டு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று காரியத்தை கவனி.
முதல் வரைவு வடிவத்தில் மூல நூலில் உள்ளதை அப்படியே மொழிபெயர்க்க வேண்டும். மேற்பரப்பில் உள்ளதை அப்படியே பிரதி எடுக்க வேண்டும். எடிட்டராக இருக்காதே.
தேவைப்பட்டால் முதல் மொழிபெயர்ப்பின் சொலவடைகளை அப்படியே உன் மொழிக்கு மாற்றிக் கொள், எதையும் விட்டு விடக் கூடாது.
முதலில் செய்த மொழி பெயர்ப்பைத் திருத்தும்போது மூல நூலில் உள்ளதைப் பார்க்காதே, இப்போது நீ மொழிபெயர்க்கும் மொழியில் முதல் முறை எழுதுவதைப் போல் திருத்தி எழுது.
மூல நூலில் விளக்கப்படாமலும் குழப்பமாகவும் உள்ள பகுதிகளைக் காப்பாற்று. அவற்றுக்கு விளக்கம் கொடுக்காதே.
திருத்திய மொழிபெயர்ப்பை சில மாதங்கள் ஆறப் போடு. சற்று இடைவெளி தந்துவிட்டு அதைத் திரும்ப எடு.
இறுதி வடிவம் வரும்வரை உன்னிப்பாய் கவனிக்கும் காதலனாக இரு. அனைத்தையும் விசாரி. போற்றி மகிழவும், கோபப்படவும், வருத்தப்படவும், மொழிபெயர்ப்பின் வழியாக மூல நூலைத் திரும்பக் காதலிக்கவும் தேவையான அவகாசம் எடுத்துக் கொள்.