ஏன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10/9/12

ரசனைக் குறிப்புகள்

ஒரு புத்தக மதிப்புரை. இதில் நிக் ஹார்ன்பி பற்றி சில சுவையான குறிப்புகள். "நான் படிக்கும் சமாசாரங்கள்" என்ற தொடரின் துவக்க பத்தியில் அவர் எழுதினாராம், "எப்படி, எப்போது, ஏன், எதைப் படிக்கிறேன் என்பதை எழுதப் போகிறேன் - வாசிப்பு சுகமாகப் போகும்போது, ஒரு புத்தகம் மற்றொன்றுக்கும், அங்கிருந்து வேறொன்றுக்குமாக, கருப்பொருளிலும் உட்பொருளிலும் தொடர்புடைய காகிதத் தடமாய் என்னை அழைத்துச் செல்லும் பாதையை நான் தொடர்வதை எழுதப் போகிறேன்," என்று. இதையே ஆம்னிபஸ்ஸில் எழுதும் நண்பர் ஒருவரும் சொன்னார் என்று நினைவு. விமர்சகர் எவ்வளவு பெரிய ஆளாகவும் இருக்கலாம், ஆனால் வாசகர்கள் ஒரே பாதையில்தான் பயணத்தைத் தொடர்கிறார்கள்.

புத்தகங்களைக் கோட்பாடுகளைக் கொண்டும் அணுகலாம், வாழ்க்கையை விவரிக்கும் பதிவுகளாகவும் அணுகலாம், ரசனைக் குறிப்புகளாகவும் அணுகலாம் - அல்லது ஹிலாரி கெல்லி ஹார்ன்பியின் எழுத்தைக் குறித்து சொல்வதுபோல் இப்படியும் அணுகலாம்::
 "ஹாரன்பி தன் வாசிப்பின் இயல்பை விவரிக்கிறார், அவரது அன்றாட இருப்பைக் காண நமக்குச் சின்னச் சின்ன ஜன்னல்களைத் திறந்து வைக்கிறார்.  அதில் மிக முக்கியமாக, அவர் தன் உணர்வுகளை எழுதுகிறார் - தன் வாசிப்பில் அடையப்படும் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். அவரது பத்திகள் இயல்பாக இருக்கின்றன - அவர் கவனமாகக் குறிப்பெடுக்கவும் உருவ அமைப்புகளைக் கண்டுபிடித்துக் காட்டவும் உதவும் நிரலிகள் அமைக்கப்பட்ட, அறிவுள்ள வாசிப்பு இயந்திரம் அல்ல - எழுத்தை நேசிப்பவர், பழுது சொல்ல முடியாத ரசனை உள்ளவர், உற்சாகமான நடையில் எழுதும் துல்லியத்தைப் பழகித் தேர்ந்தவர்".
தரம் பிரித்தலையோ, ரசனை மேம்பாட்டையோ நாம் எல்லாரும் நோக்கமாகக் கொள்ள வேண்டியதில்லை - நம் சிந்தனையின் சரடுகளை நாம் வாசிக்கும் புத்தகங்களூடே பிரித்துப் பார்க்கலாம், அல்லது, நாம் வாசித்த புத்தகங்களில் நாம் ரசித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம், தவறில்லை, நம் விருப்பம். அப்படி நாம் எழுதுவதில் நம் வாசிப்பு அனுபவம் சொல்லிக் கொள்ளும்படி இருந்தது என்ற விஷயம் வெளிப்பட்டாலே வெற்றி பெற்ற மாதிரிதான். வாசிப்பு ஒரு அகவய அனுபவம் என்பதால் இத்தகைய புத்தக மதிப்பீடுகள் எவ்வளவுக்கு எவ்வளவு நம் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு வாசிக்க நன்றாக தருகின்றன.

"ஓய்வு கிடைக்கும்போது புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் பிழைத்திருக்க வேண்டுமானால், நாம் வாசிப்பின் சந்தோஷங்களை உயர்த்திப் பேச வேண்டும் - சந்தேகத்துக்கிடமான அதன் பயன்களை அல்ல" என்கிறார் ஹார்ன்பி.


24/3/12

ஒரு வரலாற்றுப் பதிவு

தமிழில் ஒரு கதையோ நாவலோ ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் அல்லது சமூகத்தில் வாழ்க்கை முறையைச் சித்தரித்தாலே போதுமானதாக இருக்கிறது - இது ஒரு ஆவணப் பதிவு என்று சொல்லி அதை இலக்கியமாக்கி விடுகிறார்கள், இது எந்த அளவுக்கு சரி? வரலாற்றைப் பேச வேண்டும், தத்துவத்தை விசாரிக்க வேண்டும் என்பது போன்ற தகுதிகள் எல்லாம் ஆவணப் பதிவாக இருக்கும் இலக்கியங்களுக்கு இல்லையா என்ற கேள்வி என்னை ரொம்ப நாட்களாகத் துளைத்துக் கொண்டே இருந்தது.

இந்தப் புத்தக விமரிசனத்தைப் படித்ததும் எனக்கு பதில் கிடைத்து விட்டது என்று சொல்ல முடியாது, ஆனால் ஆங்கிலத்திலும் அப்படிதான் என்று கண்டு தெளிந்தேன்.

"தெரசாவும் இசபெல்லாவும்" ஒரு சமூக ஆவணமாக எடுத்துக் கொள்ளப்படும்போது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது என்பதை நான் தெளிவுபடுத்திவிட்டேன் என்று நம்புகிறேன். அது ஒரு இலக்கியப் படைப்பாகவும் இருக்கிறது என்கிறபோதும் பூர்ஷ்வாக்களுக்குரிய பண்பாட்டு வெளிப்பாட்டு முறைமைகளிடமிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ளாத எழுத்தாளரிடம் நாம் எதிர்பார்க்கக்கூடிய குறைகள் இந்தப் படைப்பையும் பீடித்திருக்கின்றன. இலக்கியத்தை நேசிப்பவர்கள் லெட்லுக்கின் இந்தக் குறுநாவலைக் குற்றமற்றப் படைப்பாகப் பார்க்கக்கூடும்; ஆனால் அதைவிட முற்போக்கான பாட்டாளி வர்க்கப் பார்வையில் புத்தகங்களை அணுகும வாசகர்கள் இந்தப் புத்தகத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டாடுவார்கள் - என்றபோதும், அதே வேளையில் அவர்கள் இந்தப் பிரதியை நகைச்சுவையான ஒன்றாகவோ அலுப்பூட்டும் ஒன்றாகவோ அறியக்கூடும் (அது அவரவர் ரசனையையும் நகைச்சுவை உணர்வையும் சார்ந்த ஒன்று)

இப்படியெல்லாம் எழுதுவதைப் படிக்கும்பொது நம்மில் சில பேருக்கு சிரிப்பு வரும், சிலருக்கு கொட்டாவி வரும், இல்லையா, அந்த மாதிரி போல.

15/12/11

கதைக்கும் கட்டுரைகள்

அண்மைக்காலத்தில் படித்த கட்டுரைகளில் ஜேம்ஸ் வுட் எழுதிய இந்தக் கட்டுரை மனதைக் கவர்ந்த ஒன்று. அதன் சாரத்தைக் கொடுக்க முயற்சி செய்கிறேன். ஜான் ஜெரமையா சலிவன் என்பவர் எழுதிய புத்தகத்தின் மதிப்புரை, ஆனால் அதில் வுட் சில அருமையான விஷயங்களைத் தொட்டிருக்கிறார்.
நீண்ட முகப்புக் கட்டுரையாக இருந்தாலும் சரி, விமரிசனக் கட்டுரையாக இருந்தாலும் சரி, சமகால அமெரிக்க பத்திரிக்கைக் கட்டுரைகளின் நற்காலம் இது. இதை எதிர்பார்த்திருக்க முடியாத சூழலில் இது நிகழ்ந்திருக்கிறது. .... புதிய பத்திரிக்கைகள் வெற்றி பெரும் வழியைக் கண்டு விட்டன: ஏதோ ஒரு நம்பிக்கையில் பழைய பத்திரிக்கைகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன, ஏதோ ஒரு நம்பிக்கையில் தொடர்கின்றன.
தமிழிலும்கூட கதைகளைப் படிப்பவர்களைவிட கட்டுரைகளைப் படிப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

9/10/11

பாரதியை விடுங்கள், பாவம் ஷெல்லி.

எது இலக்கியம் என்று கேட்டால் ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்வார்கள், ஒருவர் வாழ்க்கையின் இலக்கைக் காட்ட வேண்டும் என்பார், இன்னொருத்தர் வாழ்வை உள்ளபடியே சொன்னால் போதும் என்பார். இது அவரவர் மனப்பாங்கைப் பொறுத்த விஷயம்- வாழ்க்கையின் பொருள் என்ன என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்? நீங்கள் எப்படிப்பட்ட ஆளாக இருக்கிறீர்கள் என்பதற்கொப்ப உங்களுக்கு அது பல்வேறு பொருட்களை உணர்த்தலாம்- அவை ஒன்றோடொன்று முரண்படக்கூட வேண்டியதில்

21/8/11

காத்தோடு போயாச்சு!

இப்போது 90களில் இருக்கும் என் கஸின் இரண்டாம் உலகப் போரில் வார்சா கெட்டோவில் இருந்தார். அவரும் கெட்டோவில் இருந்த மற்ற பெண்களும் தினமும் தையல் வேலை செய்தாக வேண்டும். நீ புத்தகத்தோடு மாட்டிக்கொண்டால் ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் மரண தண்டனை தந்து விடுவார்கள். அவருக்கு ‘Gone With the Wind’ன் ஒரு காப்பி கிடைத்திருந்தது. தினமும் தூங்கக் கிடைக்கும் நேரத்தில் மூன்று முதல் நான்கு மணி நேரம் அவர் அதைப் படிப்பதற்கு செலவிடுவார். அடுத்த நாள் தையல் வேலையைச் செய்யும் அந்த ஒரு மணி நேரத்தில் அவர் தான் படித்த கதையை தன்னுடனிருப்பவர்களுக்குச் சொல்வார் . ஒரு கதைக்காக இந்தப் பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்தார்கள். என் கஸின் இதை என்னிடம் சொன்னபோது எனக்கு நான் செய்வது மிகவும் முக்கியமானதெனப் புரிந்தது. கதைகள் ஆடம்பரமல்ல. அவற்றுக்காக நீ வாழவும் சாகவும் செய்கிறாய்.
- நீல் கைமன்

Gone with the wind இலக்கியமா என்ன என்று கேட்டால் நம்மில் பலர் திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி திருதிருவென்று முழிப்போம், பாருங்கள், அதற்காகவும் சாகத் தயாராக இருக்கிறார்கள். வேறெங்கோ வேறொருவர் சொன்ன மாதிரி, சரியான சமயத்தில் உன்னைச் சேர்ந்து உன் வாழ்க்கைக்குப் பொருள் தரும் புத்தகம்தான் இலக்கியம். அதை ஒரு நிறப்பிரிகை போல் பார்ப்பதுதான் நியாயம். ஒரு காலகட்டத்தில் உங்களுக்கு முக்கியமாகத் தெரிந்த புத்தகம் பின்னொரு சமயத்தில் அற்பமாகத் தெரியலாம். ஆனால் நம் உணர்வுகள் உண்மையானவையாக இருந்திருந்தால், அது இன்றைக்கும் வேறொருவருக்கு முக்கியமாக இருக்கக்கூடும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலே மேலே சென்று கொண்டிருக்கிறவர்கள் ஏறிய ஏணியை எட்டி உதைக்கலாம், தவறில்லை, அதை சுமந்து செல்ல முடியாது. ஆனால் அதை அப்படியே விட்டு வைக்கவும் செய்யலாம்- இன்னொருத்தருக்கு உபயோகமாக இருக்கும்.

28/7/11

எழுத்தாளர்கள் விமரிசனம் செய்யலாமா?

எழுத்தாளர்கள் விமரிசகர்களாக இருக்கலாமா கூடாதா என்ற கேள்வியை விவாதிக்கும் ஒரு கட்டுரை இங்கே இருக்கிறது.

புலிட்ஸர் பரிசுக்கான தகுதிப் பட்டியலில் இடம் பெற்ற நாவலை எழுதியவரும் நியூஸ்வீக், நியூ யார்க் டைம்ஸ் போன்ற இதழ்களில் புத்தக மதிப்புரை எழுதுபவருமான டேவிட் கேட்ஸ் ஒருத்தரே இரண்டையும் செய்யலாம் என்று சொல்கிறார்-
"புனைகதை எழுபவர்- அதிலும், என்னைப் போல், புனைகதை எழுத்து பற்றி பாடம் எடுப்பவரால் இன்னொருத்தர் எழுதிய கதையில் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பதைப் பார்க்க முடியும். அவர் எடுத்த முடிவுகளைப் புரிந்து கொள்ள முடியும். எழுத்தாளர்களாக இல்லாதவர்களுக்குத் தெரியவே தெரியாத புனைகதையின் சிக்கல்களுக்கு கதையில் எவ்வளவு புத்திசாலித்தனமான தீர்வுகள் காணப்பட்டிருக்கின்றன, வானத்திலிருந்து ஆச்சரியமான விஷயம் வந்து விழுந்துவிட்டதுபோல் கதையை எழுதியவன் திகைத்த கணங்கள்- இவை இன்னொரு எழுத்தாளனுக்கே புலப்படும்,"
டைம் இதழின் தலைமை புத்தக மதிப்புரையாளராக இருந்த லெவ் க்ராஸ்மேன் வேறு விதமாக இதை அணுகுகிறார்- போலீஸ்காரன் திருடனாக மாறியபின் போலீஸ் வேலை செய்கிற மாதிரி இருக்கிறது எனக்கு நான் நாவல் எழுதிய பின் மற்றவர்கள் புனைவுகளை விமரிசனம் பண்ணுவது, என்கிறார் அவர்:
"புனைகதை எழுதுவது என்பதில் உன்னை அதை ரிவ்யூ செய்வதற்கு லாயக்கில்லாமல் செய்கிற ஏதோ ஒன்று இருக்கிறது. நீ ஒரு நாவலை எழுதும்போது புனைவு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற அந்த ஒரு தகதகக்கும் லட்சியமே கருத்தாக இருந்து கொண்டிருக்க வேண்டும். உன் ரசனையை வலியக் குறுக்கிக் கொள்கிறாய், நீ எழுதிக் கொண்டிருக்கும் அந்த ஒரு எதிர்காலப் படைப்பைத் தவிர மற்றவை அனைத்தும் காணாமல் போய் விடுகின்றன.

நாவலாசிரியனாக இருப்பதற்கு கர்வம் தேவைப்படுகிறது, ஆனால் நல்ல விமரிசகனாக இருக்க உனக்குத் தன்னடக்கம் வேண்டும்"
வாழ்க்கையில் எதுதான் கருப்பு வெள்ளையாக இருக்கிறது, சரி தப்பு என்ற நம் நம்பிக்கைகளைத் தவிர? இந்த விஷயத்திலும் சில நல்ல நாவலாசிரியர்கள் சில சமயம் நல்ல விமரிசனம் செய்கிறார்கள், சில நல்ல விமரிசகர்கள் சில சமயம் அபத்தமாக புனைவுகளைப் புரிந்து கொள்கிறார்கள் என்று சொல்லலாம்: ஆனால் தனிப்பட்ட முறையில் நான் க்ராஸ்மன் கட்சி: நீ புனைவுகளை எழுத முயன்று தோற்றுப் போய்கூட அவற்றின் வடிவ சிக்கல்களையும் மொழியாளுமையின் தேவைகளையும் புரிந்து கொள்ளலாம்: அதை உணர நீ வெற்றிகரமான எழுத்தாளனாக இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை.

23/7/11

நம் அனைவருக்கும் விதிக்கப்பட்ட கதி

கதை கவிதைகளில் எது நல்ல படைப்பு, ஏன் அது நல்ல படைப்பாகிறது என்பன குறித்த விவாதங்களுக்கு முடிவேயில்லை. அவை பெரும்பாலான சமயங்களில் காட்டமான சண்டையாகி உறவைக் குலைக்கிறது. இலக்கிய விவாதம் செய்பவர்களுக்கு நீண்ட கால நண்பர்கள் இருந்தால் ஆச்சரியம்தான். அப்படிப்பட்டவர்களுக்கு அபார சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்.

கம்யூனிச ரஷ்யாவில் சகிப்புத்தன்மையை எதிர்பார்த்திருக்க முடியாது. இருந்தாலும் இந்த கடிதத்தின் ஒரு பத்தியைப் பாருங்களேன், ஏன் நாம் இந்த மாதிரியான விஷயங்களில் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெளிவாக சொல்கிறார்:

ரஷ்யாவை விட்டு வெளியேறுவது எனக்கு கசப்பாக இருக்கிறது. நான் இங்கேதான் பிறந்தேன், இங்கேதான் வளர்ந்தேன், இங்கேதான் வாழ்ந்தேன், எனது ஆன்மாவில் உள்ளவையனைத்துக்கும் நான் ரஷ்யாவுக்கே கடன்பட்டிருக்கிறேன். ரஷ்யாவின் குடிமகனாக இருப்பதை நிறுத்தியதும் நான் ரஷ்ய கவிஞனாக இருப்பதை நிறுத்திவிடப் போவதில்லை. நான் திரும்புவேன் என்று நம்புகிறேன்; கவிஞர்கள் எப்போதும் திரும்பி வருகிறார்கள்- உயிரோடோ காகிதத்திலோ... நம் அனைவருக்கும் விதிக்கப்பட்டிருக்கும் கதி ஒன்றே- மரணம். இந்த வாக்கியங்களை எழுதிக் கொண்டிருக்கும் நான் இறப்பேன், இவற்றைப் படிக்கும் நீங்களும் இறக்கவே செய்வீர்கள். நமது ஆக்கங்களே எஞ்சியிருக்கும், அவையும் என்றும் இருக்கப் போவதில்லை. அதனால்தான் எவரொருவர் மேற்கொண்ட காரியத்திலும் மற்றவர்கள் குறுக்கிடக் கூடாது.
ரஷ்யாவை விட்டு வெளியேறுமுன் இதை எழுதியவர் ஜோசப் ப்ராட்ஸ்கி. இந்தக் கடிதம் பிரஷ்னேவுக்கு எழுதப்பட்டது.

தகவலுக்கு நன்றி- பேக் இஷ்யூஸ்

22/7/11

நம்மை யாரும் குற்றம் சொல்ல முடியாது!

"எழுத்தாளர்களின் நூல்கள் வாசிக்கப்பட்டு அந்நூல்களின் சாரமாக அமையும் வரிகள் மேற்கோளாக முன்வைக்கப்பட்டால் மட்டுமே அவை உண்மையில் சிந்தனைகளைத் தூண்டும். நீர்ப்பாசியைக் கொக்கி போட்டு அள்ளக் குளம்முழுக்க அசைந்து வருவதுபோல அந்த மேற்கோள் அந்த மொத்த சிந்தனையாளனையே நம்மை நோக்கிக் கொண்டுவரும். 
மேல்நாட்டுச் சிந்தனையாளர்கள் பலர் மேற்கோள்கள் மூலமே பெரும்பாதிப்பை செலுத்தியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் எமர்ஸன், எலியட் போன்றவர்கள்..."
மேலும் இது:
சரியான ஓர் மேற்கோள் வழியாக ஒரு நல்ல ஆசிரியனை நாம் சட்டென்று இன்னொருவருக்கு அறிமுகம்செய்து வைக்கமுடியும் என்பதைக் காணலாம். அவ்வாறுதான் இலக்கியவாதிகள் பரவிச்செல்கிறார்கள்...
- படைப்பாளிகளின் மேற்கோள்கள்

19/7/11

வாசிப்பின் மரணம்

எழுத்தின் மரணம் அது தவறாகப் புரிந்து கொள்ளப்படும்போது நிகழ்கிறதென்றால், வாசிப்பின் மரணம் சில துரதிருஷ்டமான கணங்களில் தன் வாசகனால் ஒரு எழுத்தாளன் புரிந்து கொள்ளப்படும்போது நிகழ்கிறது. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இன்று என் நண்பர் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரின் பெயரைச் சொல்லி தனி வாழ்வில் அவர் இன்னொரு எழுத்தாளரைவிட மோசமானவர் என்றார். "இது தெரிந்து எனக்கு என்ன ஆகப் போகிறது?"," என்று நினைத்துக் கொண்டேன். அவரை நான் என் வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்ப்பதற்கும் வாய்ப்பில்லாத நிலையில் எங்களுக்குள் எந்த கொடுக்கல் வாங்கலும் நிகழப்போவதில்லை- அவரது தனிப்பட்ட வாழ்வில் அவருக்கு இருக்கக்கூடும் குறைகளை நான் அறிந்து கொள்வது அவரது புனைவுகளிலிருந்து என்னைப் பாதுகாக்கும் என்று நண்பர் நினைத்திருக்கலாம். ஆனால் எனக்கு அத்தகைய தடுப்பரண்களில் ஆர்வமில்லை.

17/3/11

சிறுகதையின் வடிவமும் குவிமையமும்

சில எழுத்தாளர்கள் தங்கள் சிறுகதை எப்படி தோற்றம் கொள்கிறது என்பதையும் அதன் வடிவமைப்பு அமையும் விதத்தையும் இங்கே விவாதித்திருக்கிறார்கள். சுவாரசியமாக இருக்கிறது.

டேனியலா ஈவான்ஸ் ஏதோ ஒன்று மாற்றம் கண்ட அல்லது மாற மறுத்த கணத்தை நோக்கி கவனம் குவிதலே சிறுகதையின் வடிவம் என்று சொல்கிறார். எந்த இடத்தில் இந்த மாற்றத்துக்கான அழுத்தம் மிகுகிறதோ அதுதான் சிறுகதையின் வடிவத்தைத் தீர்மானிக்கிறது என்று அவர் சொல்கிறார். மிக எளிமையான கருத்தாக இருந்தாலும், இது விரிவான சிந்தனைக்குரிய ஒன்றாகத் தோன்றுகிறது.

ஆலன் ஹீத்காக் நமக்குப் பழக்கப்பட்ட ஒரு கருத்தை முன் வைக்கிறார்- கதை எழுதும்போது எழுத்தாளன் பாத்திரத்தோடு ஒத்துணர்வு மிகுந்து அவனுக்கு இசைவாக- பாத்திரமாகவே மாறி- கதையை சொல்ல வேண்டும் என்று சொல்கிறார் அவர். எழுத்தாளைனின் உணர்வுகளும் கற்பனையும் பாத்திரங்களின் தன்மையைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஒரு எழுத்தாளனின் வேலை தன் கதாபாத்திரத்தின் புத்தி, கற்பனை, மனப்பாங்கு மற்றும் உணர்ச்சிகளைக் கூட்டி, அவனது வாழ்வின் நிதர்சனத்தை விவரிக்கக்கூடிய மொழியை அடைவதுதான் என்கிறார் அவர். எழுத்து என்பது அவருக்கு ஒத்திசைவு (எம்பதி) நிறைத்த இடமாக இருக்கிறது- எழுத்தாளனும் வாசகனும் இங்கு மட்டுமே இணைகிறார்கள்.

வாலரி லேகன் ஏதோ ஒரு அத்துமீறல், ஏதோ ஒரு எல்லைக் கோடு மீறப்படும் இடத்தில்தான் சிறுகதை நிற்கிறது என்று சொல்கிறார். எது அனுமதிக்கப்பட்டதாக இருக்கிறதோ, எது பழகிப் போன ஒன்றாக இருக்கிறதோ அது மீறப்படும்போது ஒரு புதிய தரிசனம் கிடைக்கிறது. இதுவே சிறுகதையின் குவிமையம் என்கிறார்.

படித்துப் பாருங்கள்.

15/3/11

இயற்கைப் பேரழிவுகள்


நாம் பார்த்த ஜப்பானிய ராட்சத திரைப்படங்களுக்கு அளவே இருக்காது- காட்ஜில்லாவில் துவங்கி எத்தனை எத்தனை விந்தை மிருகங்கள்!- இவை இன்று ஒரு கிடையாகவே (genre) மாறி விட்டன.

ந்யூ யார்க் டைம்ஸில் உலகில் வேறு எவரையும் விட ஜப்பானியர்களுக்கு ஏன் விந்தை உருவ ராட்சத மிருகங்களின் மேல் ஈர்ப்பு இருக்கிறது என்று சுவையாக எழுதியிருக்கிறார்கள். எல்லா நாடுகளும் வெவ்வேறு வகையில் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன, ஆனால் ஜப்பானியர்களின் கற்பனை மட்டும் ஏன் இந்த திசையில் விரிகிறது என்பதை சரியாக விளக்கவில்லை. வேறெங்காவது இது பற்றி விவரம் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

1954ல் அமேரிக்கா ஒரு அணு ஆயுத சோதனை செய்தது. அது எதிர்பார்த்ததைவிட ஒன்றரை மடங்கு வீரியமுள்ளதாக இருந்திருக்கிறது. தூரத்தில் கடலில் எங்கேயோ போய்க் கொண்டிருந்த ஜப்பானிய மீன்பிடி படகொன்றை அதன் கதிர் வீச்சு தாக்கவே, மீனவர்கள் உரிந்த தோளும் கதிரியக்க மீன்களுமாக கரை திரும்பியிருக்கிறார்கள். அந்த மீன்கள் சந்தையில் விற்பனையும் ஆயினவாம். இதைத் தொடர்ந்து எழுந்த பீதியில் கொஜிரா என்ற முதல் காட்ஜில்லா படம் வெளியானது- அதை அச்சமும் அழுகையுமாக ஜப்பானியர்கள் பார்த்தார்களாம்.

அதைத் தொடர்ந்து சுரங்கம் தோண்டும்போது விழித்துக்கொண்ட ரோடான் என்ற அரக்க மிருகங்கள், அணுகுண்டு சோதனையில் பிறந்த மோத்ரா, கமெரா என்ற ராட்சத கடல் ஆமை, வாரன் என்ற ராட்சத பறக்கும் அணில் என்று மனிதனின் கவனமில்லாத சேட்டைகளால் உயிர்பெற்ற இயற்கையின் சீற்றங்கள் ஜப்பானியர்களின் அச்சங்களை எதிர்கொள்ளும் புனைவுகளாய் வெற்றி பெற்றன.

கனவுகள் நம் உள்ளத்தின் உட்கிடைகளை அச்சு அசலாக வெளிப்படுத்துகின்றன என்றால் ஒரு பண்பாட்டில் வெற்றி பெரும் கலைப் படைப்புகள் அதன் அச்சங்களையும் ஆவல்களையும் பேசுகின்றன என்று கொள்ளலாம். அப்படி பார்க்கும்போது ஜப்பானின் மான்ஸ்டர் மூவிகள் தனி கவனத்துடன் பார்க்கப்பட வேண்டியவை- ஜப்பான் தன் அச்சுறுத்தல்களை ராட்சதத்தனமானவையாக, இயற்கையின் அதிபயங்கர ஆற்றல் கொண்டனவாக எதிர்கொள்கிறது.

அதற்கேற்றார் போலவே சுனாமி, அணு உலை வெடிப்பு போன்ற துயர் நிகழ்வுகளும் ஜப்பானியர்களுக்கு ஏற்படுவது வருந்தத்தக்கதே. அவர்களுக்கு நம் அனுதாபங்கள்.

1/3/11

துயர் மேவும் எரிதழல்

தன் கணவரின் இழப்பு குறித்து ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் அவர்களும், தன் தாயின் இழப்பு குறித்து மேகன் ஓ'ரூர்க் அவர்களும் இவ்வாண்டு வாழ்க்கைக் குறிப்பு எழுதி அஞ்சலி செலுத்துகிறார்கள். இவர்கள் இடையே நிகழ்ந்த அஞ்சல் உரையாடலின் சில பகுதிகள்-

ஓட்ஸ்: மேகன்- நீ சொல்வது சரி என்றுதான் நானும் நினைக்கிறேன். எழுதுவதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம். ஒரு குழந்தையைப் போல் நிகழ்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறோம். நமக்கு நேர்ந்த நிகழ்வுகளால் துவண்டு போய், அவற்றைப் புரிந்து கொள்ள முடியாமல் நாம் இருக்கும் நிலையில் பேசாப் பொருளை சொல்லுக்குள் கொணர்வதால் நிகழ்வுகளை ஏதோ ஒரு வகையில் நமக்குரியனவாக மாற்ற முடியும் என்று கற்பித்துக் கொள்ள விரும்புகிறோம்.

"ஒரு விதவையின் கதை"யின் பெரும்பகுதியை சமகால நிகழ்வுகளே தீர்மானித்தன- அவற்றின் உட்பொருள் குறித்த இறுகிய சிந்தனை அல்ல. எழுதிய பின்னரே "ஒரு விதவையின் கதை"யைத் தொகுக்க நினைத்தேன். அது என்னைபோல் வேகுளியாகவும் தயாராய் இல்லாமலும் இருப்பவர்களுக்கு அறிவுரை அளிக்கும் என்று நினைத்தேன். ஆனால் இவை அனைத்திலும் எஞ்சி நிற்பது முடிவில் வரும் சுருக்கமான ஒற்றை வரி அத்தியாயம்தான். எப்பாடுபட்டாயினும் நீ உயிரைப் பிடித்துக் கொண்டிருக்க ஒரு வழி கண்டாக வேண்டும்.- இதுவே வைதைவ்யத்தின் சாரமாகும்.

எனக்கு இது எந்த வகையிலும் ஆறுதல் அளிப்பதாக இருந்திருக்காது என்று நினைக்கிறேன். சடங்குகள் முரண்நகை மிகுந்து இருக்கின்றன- ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட ஒரு மரணத்தின் அச்சுறுத்தலைத் தவிர்க்க சடங்குகள் ஒரு கருவியாக இருக்கின்றன.

ஓ'ரூர்க்: சடங்குகள் என்றதும் நான் ஒப்பாரிகளை நினைத்துப் பார்க்கிறேன். விதவைகள் தங்கள் முடியை விரித்துப் போட்டுக் கொள்வதும், ஆடைகளைக் கிழித்துக் கொள்வதும் நினைவுக்கு வருகின்றன. துக்கிப்பவர் சங்கடமின்றி தன் துக்கத்தின் பருண்ம உக்கிரத்தை வெளிப்படுத்த இவை உதவுகின்றன. எனக்கு உங்களைப் பற்றித் தெரியாது, நான் துக்கத்தின் முதல் சில மாதங்களில் அவ்வப்போது இந்த சங்கட நிலையில் இருந்தேன்- சப்வேயில் வேற்றார் ஒருவர் நிஷ்டூரமாக நடந்து கொள்ளும்போது அழுது விடப்போகிறேன் என்று கலங்குவேன். எனது இழப்புக்கும் அப்பால், "எப்படி இருக்கிறாய்?" என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று நான் யோசிக்க வேண்டியிருக்கிறதே என்ற கோபம் இருந்தது. "ஹாம்லட்"டைத் திரும்பத் திரும்பப் படித்தேன். திடீரென்று அவனது பாத்திரம் எனக்குப் பிடிபட்டது. அவனது அப்பா அப்போதுதான் இறந்திருக்கிறார், ஆனால் அவன் அதைப் பேசுவதை யாரும் விரும்புவதாயில்லை. உலகம் "களைத்துப் போய், சலிப்பு தட்டி, சுவை குன்றிய, பயனற்ற ஒன்றாக இருக்கிறது" என்று அவன் உணர்ந்ததில் ஆச்சரியமில்லை.

துக்கத்தை ஏன் எழுதுகிறோம்? அதைவிட்டு நீங்கவா அல்லது அதை நமக்கு உரியதாக்கிக் கொள்ளவா? இரண்டும்தான் என்று நினைக்கிறேன். நம் உணர்வுகளை எழுதும்போது அது நமக்கு மட்டும் உரியது என்ற நிலையைத் தாண்டி அது நம் அனைவருக்கும் உரிய ஒன்று என்ற பொதுமையை நாம் உணர்கிறோம்- ஆனால் அத்தகைய பகிர்தல் நம் இழப்பின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில்லை: அது முன்னைவிட இப்போது கூடுதல் மதிப்பு கொண்டதாக இருக்கிறது. இழப்பின் வலிமை மிகுந்திருந்தாலும், பகிர்தல் நம் மன உறுதிக்கு உரம் சேர்ப்பதாய் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இந்தக் கட்டுரையின் முடிவில், மேகன் ஓ'ரூர்க் சொல்கிறார்,

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் எழுதிய "வேனில் காலத்தில் ஒரு விதவையின் புலம்பல்" என்ற கவிதையைப் பாருங்கள்-


"துக்கம் எனக்குரிய படுகை
அங்கு புதிய புல்கள்
கங்குகளாய் முன்னே போல்
இக்கங்குகள் இருந்ததில்லை
சில்லென்ற நெருப்பு
இவ்வாண்டென்னைச் சூழ்ந்தாற் போல்"


இந்த சில்லென்ற நெருப்பு வித்தியாசமான கணப்பு தருகிறது, இல்லையா? நாளெல்லாம் நாம் எரிகிறோம், நினைவென்னும் எரிதழலை அடுத்தடுத்த கைமாற்றித் தருகிறோம்.


3/1/11

இலக்கியத்தின் வரைபடம்

நானே இதற்கு முன் ஓரிரு விமரிசனங்கள் எழுதிவிட்டு, உனக்கெதற்கு இந்த வீண் வேலை என்று வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்- படைப்பு அதன் வாசகனுடன் நேரடியாக உரையாட வேண்டுமாம், அதன் பொருளும் முக்கியத்துவமும் அவரவரே தீர்மானித்துக் கொள்ள வேண்டிய ஒன்றாம்- இன்னும் என்னென்னவோ சொல்லி, நான் ஏதோ அடுத்தவன் பர்சில் இருந்து பணத்தைத் திருடி விட்ட மாதிரி வசவு விழுந்தது. ஆனால் எனக்கென்னவோ விமரிசனம் என்பது அவசியம் என்றுதான் தோன்றுகிறது.

ந்யூ யார்க் டைம்ஸில் விமரிசனத்தின் முக்கியத்துவம் குறித்து ஆறு கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றின் சாரத்தை மட்டும் தமிழில் சுருக்கமாகத் தருகிறேன்.

வாசகர்கள் தனிமையில் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்த காலம் போயிற்று, இப்போது ஒரு புத்தகத்தைக் கையில் எடுக்கிற வாசகன் அந்தப் புத்தகத்தோடும் அதன் சக வாசகர்களோடும் உரையாடுகிறான், இணையம் பல குரல்களில் பேசுகிறது அவனுடன். இங்கு ஒரு விமரிசகனுக்கு இனி என்ன வேலை இருக்க முடியும் என்று கேட்கிறார் ஸ்டீபன் பர்ன்ஸ்

இனியும் அவனால் பண்பாட்டின் கதவுகளின் காப்பானாக இருக்க முடியாது- சமகாலம் ஒரு திறந்த புத்தகமாக இருக்கிறது. எது நல்ல படைப்பு என்று தரம் பிரித்துத் தருகிற இடத்தில் ஏகப்பட்ட நெரிசல்- இலக்கியமே மூச்சாய் வாழ்ந்து நல்ல புத்தகங்களைக் கை காட்டி இலக்கியத் தரத்தை நிறுவி பொது புத்தியைத் தன் எழுத்தால் பண்படுத்த நினைக்கிற விமரிசகனுக்கு இன்று வேலையில்லை. வாசகர்கள் தமக்குள் உரையாடித் தங்கள் பண்பாட்டின் தரங்களை நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.

விமரிசகனுடைய கை ஓங்கியிருந்த காலம் எழுத்தாளனுக்கு சாதகமாயில்லாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும்- தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் ஒரு படைப்பு வாசகனை சென்றடைவதை தடுக்கக் கூடியனவாக இருந்தன. எப்போதும் விமரிசகன் விளிம்பில் நிற்க வேண்டியவன், ஆனால் அவன் மையத்தில் தன்னை இருத்தி வைத்துக் கொள்ளும் சூழல் முன்னர் இருந்தது. இப்போது இல்லை. அந்த இடத்துக்கு வாசகர்கள் வந்து விட்டது நல்லதுதான்.

அப்படியானால் விமரிசனத்துக்கு இனி இடமில்லையா? இருக்கிறது. அடிப்படையில் விமரிசகனின் வேலை பரவலாக கவனிக்கப்படாமல் இருக்கிற படைப்புகளை அடையாளம் காட்டுவதே. இதைத் தேர்ந்த விமரிசகனையன்றி வேறு யாராலும் செய்ய முடியாது.

அதே போல் ஒரு குறிப்பிட்ட புத்தகம் எந்த மரபில் வருகிறது, எந்த புத்தகங்களை ஒத்திருக்கிறது, எவ்வகையில் அது வேறுபடுகிறது என்பதையும் அவன்தான் விவாதித்தாக வேண்டும். மனதின் இயக்கத்தைப் புதினங்கள் பிரதிபலிப்பதால் ஆக்கங்களின் ஆதாரங்கள், அவற்றுக்கிடையே இருக்கிற ஒற்றுமை வேற்றுமைகள், இவற்றை விவாதிப்பது அவனது அவசியமான பணியாக ஆகி விட்டிருக்கிறது. சுருக்கமாக சொன்னால், பண்பாட்டின் காவலனாக இருந்த விமரிசகன் இனி இலக்கியத்தின் வரைபடம் எழுதுகிறவனாக இயங்க வேண்டியிருக்கிறது.

இதில் என் கருத்து என்ன என்பதையும் சொல்ல வேண்டும்- ஓரளவுக்கு புத்தகங்களைப் பற்றி படித்தவர்கள் வேண்டுமானால் யாரும் எனக்கு எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை என்று சொல்லலாம். ஆனால் வெறுமே புத்தகங்களை மட்டும் படிப்பவர்கள் அவற்றைக் குறித்த முரண்பாடுகளில்லாத பார்வையை உருவாக்கிக் கொள்ள மற்றவர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. அதை நண்பர்கள் மூலம் செய்து கொள்ளலாம், ஆனால் நம் எல்லார்க்கும் தேர்ந்த வாசகர்கள் நண்பராக அமையும் கொடுப்பினை இல்லை. தேர்ந்த ஒரு விமரிசகரை அப்படி ஒரு துணையாக தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது- அவர் பண்பாட்டின் வாயில்காப்பானாக ஒருக்கலாம், வரைபடத்தை விரித்துக் காட்டுபவராக இருக்கலாம்- எப்படிப்பட்டவரை நம் துணையாக ஏற்றுக் கொள்கிறோம் என்பது நம் தெரிவே யாரும் நம்மை இந்த விஷயத்தில் கட்டாயப்படுத்துவதில்லை, இல்லையா?

சிலிகான் ஷெல்ப் என்ற தளத்தை நீங்கள் தொடர்ந்து படித்து வந்தால், ஏன் விமரிசகர்கள் வேண்டும் என்பதைம், விமரிசனப் பார்வை என்பது எப்படி மெல்ல மெல்ல உருவாகிறது என்பதையும் நிகழ் காலத்தில் காணலாம்.

15/12/10

கோழி சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை!

தலைப்புக்கும் பதிவுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. சும்மா ஜில்லுன்னு இருக்கட்டுமேன்னுதான் இப்படி வைத்தேன்.

விஷயத்துக்கு வருவோம்.

நான் ஆறாவதோ ஏழாவதோ படித்துக் கொண்டிருக்கும்போது பள்ளி ஆண்டுமலருக்கு மாணவர்களிடம் படைப்புகளைக் கேட்டார்கள். நான் என் அப்பாவின் நண்பர் ஒருவர் எழுதிய கதையை பிரதி எடுத்து கொடுத்தேன் (ஆமாம், அப்போதே இந்த பழக்கம் ஆரம்பித்து விட்டது). கதையில் லாரியின் டயர்கள் பேசிக் கொள்ளும் என்று நினைவு.

கதையைப் படித்ததும் என் ஆசிரியர், ஒரு கேள்விதான் கேட்டார்- "இதை நீதான் எழுதினாயா?"

"ஆமாம்" என்று சொன்னேன்- உண்மைதானே?

"சரி, இங்கு ஆள் அரவம் இல்லாத ரோடு என்று எழுதியிருக்கிறாயே, அரவம் என்பதற்கு என்ன அர்த்தம்?"

"பாம்பு"

அவர் எதுவும் பேசவில்லை. ஆனால் எனக்கு ஏதோ தப்பு செய்து விட்டோம் என்று தெரிந்து விட்டது. அந்தக் கதையை என் பெயரில் போட்டுக் கொள்வது ஒரு திருட்டு என்பது அப்போதுதான் உரைத்தது. சத்தியமாக சொல்கிறேன், நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

யோசித்துப் பார்க்கும்போது, ஆள் அரவம் இல்லாத ரோடு என்பது மனிதர்களோ பாம்புகளோ இல்லாத ரோடு என்று பொருளல்ல (அடிக்குறிப்பைக் காண்க)- ஒரு சிறு சலசலப்பும் இல்லாத நிசப்தமான சாலை. இங்கு அரவம் என்பது பாம்பைக் குறிக்கவில்லை, அரவம் ஏற்படுத்தக்கூடிய சிறு சரசரப்பைக் குறிக்கிறது (சாலையில் அதுகூட கேட்குமா என்ன?).

கதையை/ கவிதையை கதை/ கவிதையாகப் படித்தால் அரவம் என்பதை பாம்பு என்றுதான் படிக்க வேண்டும். அப்படி படிக்கும்போது, நாம் படிக்கிற நுட்பமான விஷயங்கள் உள்ளீடற்ற வார்த்தைகளாகத்தான் பெரும்பாலான சமயம் இருக்கும்- "அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா!" என்பன போன்ற கவிதைகளை வேண்டுமானால் அலசாமல் ரசிக்கலாம்.

ஆனால் அதுவேகூட, துக்ளக் அல்லது இட்லி வடையில் XXX (இவர் பெயரைக் குறிப்பிட்டு எதிரிகளை சம்பாதித்துக் கொள்ளும் ஆசை எனக்கில்லை. ஆனால், உங்களுக்கு இவரைத் தெரிந்திருக்குமோ தெரியாதோ- இவர் ஒரு மாஸ் ஹீரோ. அரசியலில் கால் வைக்கப் போகிறார், ஆனால் அந்தக் கால் யார் தோளில் நிற்கப் போகிறது என்பன போன்ற ஹேஷ்யங்கள் இப்போது பரபரப்பான டாபிக்), எங்கு விட்டேன், இட்லி வடையில் XXX "அம்மா இங்கே வா வா! ஆசை முத்தம் தா தா!" என்று பாட்டுப் பாடுகிற மாதிரி யாராவது வரைந்தால் அவர் தன் தாயிடம் முத்தம் கேட்கிறார் என்று யாரும் புரிந்து கொள்ள முடியாது- ஆட்டோ வீட்டு வாசலுக்கு வந்து நிற்கும்போது கார்ட்டூன் வரைந்தவர் அப்படியெல்லாம் கோட்பாடு பேசினால் வந்தவர்கள் அதை ரசிக்க மாட்டார்கள்.

உட்பொருள் குறித்து அலசிப் படிக்காவிட்டால் வாசிப்பு என்பது இந்த கணினியிலிருந்து ஒலிக்கக்கூடிய computer generated reading of a text என்ற அளவில்தான் இருக்கும்: உள்ளீடற்ற வார்த்தைகள் என்று அதை சுருங்க சொல்லுவார்கள்.

சரி, வேறு வழியில்லை, நீ உன் வசதிக்கு வாசித்துவிட்டுப் போ. ஆனால் அப்படி நீ படித்ததை போது இடத்தில் எழுதி ஏன் எழுத்தாளனை வதைக்கிறாய்? என்று கேட்பார்கள். இது எழுதப்படுவது சக வாசகனுக்காக, படைப்பாளிக்காக அல்ல.

ஒரு படைப்பை அலசுதல் என்பது குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்ற தோற்றம் வரும். அது அப்படியல்ல. பூக்கூடையில் இருக்கிற உதிரிகளை வீசி எறிந்த பின் மிஞ்சி இருக்கிற கோர்வைதான் பூமாலை. வெறும்பேச்சாக இருப்பதை இத்தகைய அலசலுக்கு உட்படுத்தி சிதைத்து விடக் கூடும். ஆனால் உன்னதமான படைப்புகளை அலசும்போது, அதில் மாலை போல் உள்ள கோர்வையை கண்டு பிடிக்க முடியும், அவ்வளவு ஏன், அதை மறைக்கவே முடியாது.

என்ன செய்தாலும் சில பூ மாலைகளை பிய்த்துப் போட முடியாது என்பதுதான் உண்மை- அது அந்தக் குரங்குக்குத் தெரியாவிட்டாலும்கூட.


அடிக்குறிப்பு:
நான் கோணங்கியின் கதையைத் திருடியிருந்தால் வேண்டுமானால் அந்த அர்த்தம் தந்திருக்கலாம், ஆனால் நான் பிரதி எடுத்திருந்தது ஒரு சாமானியர் எழுதிய கதையை-: "கோணங்கி சிரித்தார் ”பாம்பு வந்துட்டே இருக்கணும்டா… அதுதான் நமக்கெல்லாம் வழிகாட்டணும்…இந்த நகரத்திலே பாம்போட நெழல் கூட வர்ரதில்லை…” நான் சிரித்துக்கொண்டு ”வேற ஒரு காலத்திலே அது படுத்திருக்கு…அங்க எல்லாமே ரொம்ப மெதுவா நடந்திட்டிருக்கு… நகந்து போனதுகூட மெதுவா தண்ணி ஓடுறமாதிரித்தான்” ”பாம்புகள் வரணும்…நம்மள அப்பப்ப வழிமறிக்கனும்” என்றார் (http://www.jeyamohan.in/?p=7670).