10/9/12

ரசனைக் குறிப்புகள்

ஒரு புத்தக மதிப்புரை. இதில் நிக் ஹார்ன்பி பற்றி சில சுவையான குறிப்புகள். "நான் படிக்கும் சமாசாரங்கள்" என்ற தொடரின் துவக்க பத்தியில் அவர் எழுதினாராம், "எப்படி, எப்போது, ஏன், எதைப் படிக்கிறேன் என்பதை எழுதப் போகிறேன் - வாசிப்பு சுகமாகப் போகும்போது, ஒரு புத்தகம் மற்றொன்றுக்கும், அங்கிருந்து வேறொன்றுக்குமாக, கருப்பொருளிலும் உட்பொருளிலும் தொடர்புடைய காகிதத் தடமாய் என்னை அழைத்துச் செல்லும் பாதையை நான் தொடர்வதை எழுதப் போகிறேன்," என்று. இதையே ஆம்னிபஸ்ஸில் எழுதும் நண்பர் ஒருவரும் சொன்னார் என்று நினைவு. விமர்சகர் எவ்வளவு பெரிய ஆளாகவும் இருக்கலாம், ஆனால் வாசகர்கள் ஒரே பாதையில்தான் பயணத்தைத் தொடர்கிறார்கள்.

புத்தகங்களைக் கோட்பாடுகளைக் கொண்டும் அணுகலாம், வாழ்க்கையை விவரிக்கும் பதிவுகளாகவும் அணுகலாம், ரசனைக் குறிப்புகளாகவும் அணுகலாம் - அல்லது ஹிலாரி கெல்லி ஹார்ன்பியின் எழுத்தைக் குறித்து சொல்வதுபோல் இப்படியும் அணுகலாம்::
 "ஹாரன்பி தன் வாசிப்பின் இயல்பை விவரிக்கிறார், அவரது அன்றாட இருப்பைக் காண நமக்குச் சின்னச் சின்ன ஜன்னல்களைத் திறந்து வைக்கிறார்.  அதில் மிக முக்கியமாக, அவர் தன் உணர்வுகளை எழுதுகிறார் - தன் வாசிப்பில் அடையப்படும் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். அவரது பத்திகள் இயல்பாக இருக்கின்றன - அவர் கவனமாகக் குறிப்பெடுக்கவும் உருவ அமைப்புகளைக் கண்டுபிடித்துக் காட்டவும் உதவும் நிரலிகள் அமைக்கப்பட்ட, அறிவுள்ள வாசிப்பு இயந்திரம் அல்ல - எழுத்தை நேசிப்பவர், பழுது சொல்ல முடியாத ரசனை உள்ளவர், உற்சாகமான நடையில் எழுதும் துல்லியத்தைப் பழகித் தேர்ந்தவர்".
தரம் பிரித்தலையோ, ரசனை மேம்பாட்டையோ நாம் எல்லாரும் நோக்கமாகக் கொள்ள வேண்டியதில்லை - நம் சிந்தனையின் சரடுகளை நாம் வாசிக்கும் புத்தகங்களூடே பிரித்துப் பார்க்கலாம், அல்லது, நாம் வாசித்த புத்தகங்களில் நாம் ரசித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம், தவறில்லை, நம் விருப்பம். அப்படி நாம் எழுதுவதில் நம் வாசிப்பு அனுபவம் சொல்லிக் கொள்ளும்படி இருந்தது என்ற விஷயம் வெளிப்பட்டாலே வெற்றி பெற்ற மாதிரிதான். வாசிப்பு ஒரு அகவய அனுபவம் என்பதால் இத்தகைய புத்தக மதிப்பீடுகள் எவ்வளவுக்கு எவ்வளவு நம் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு வாசிக்க நன்றாக தருகின்றன.

"ஓய்வு கிடைக்கும்போது புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் பிழைத்திருக்க வேண்டுமானால், நாம் வாசிப்பின் சந்தோஷங்களை உயர்த்திப் பேச வேண்டும் - சந்தேகத்துக்கிடமான அதன் பயன்களை அல்ல" என்கிறார் ஹார்ன்பி.