19/12/11

பஜனை மடங்களைப் பற்றி சில குறிப்புகள்

நவீனத்துவத்தின் தாக்கங்களில் மிக முக்கியமான ஒன்று மனிதனின் தனித்துவத்தைப் பேசுதல்; நம் அனைவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு என்பதையும், அதன் சாத்தியங்களை அறிதலும் வெளிப்படுத்தலும் முக்கியம் என்பதையும் நாம் இயல்பான விஷயங்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். தனி மனித சுதந்திரம் என்று சொல்லும்போது, இந்த தனியன் வந்து விடுகிறான். பெரும்பாலும் சுதந்திரமாக அறியப்பட்டாலும், சில மேலை இலக்கிய மற்றும் தத்துவவாதிகளின் எழுத்தில் ஒரு பெரும்சுமையாக இதன் நீட்சியான தனிமை உணரப்படுகிறது.

இப்போது உருள் பெருந்தேர் சிறிதளவுக்கு மாற்று கோணத்தின் வெளிச்சம் பெறுவது போல் உள்ளது. மேற்கில் எழுதப்படும் புத்தகங்களில் சில, புனித உணர்வை மீளப் பெறுவது குறித்துப் பேசுகின்றன. அவற்றில் ஒன்று குறித்துப் படித்த மதிப்புரை இன்று குறிப்பிடத்தக்கதாகத் தோன்றுகிறது:

17/12/11

இரு கட்டுரைகள்

நல்ல நாளிலேயே மனிதன் நாலையும் யோசித்துக் கொண்டிருப்பான், உலகைக் குறித்து, மனிதர்களைக் குறித்து, உறவுகளைக் குறித்து என்று. அந்த எண்ணங்கள் அவனது வாழ்க்கையை பாதிப்பதாக இருக்கும் என்பதை சொல்லவே வேண்டும். எண்ணங்கள் செயல்களின் ஒத்திகை என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். ஆனால், சிந்திப்பதே, கற்பனையே ஒரு மனிதனின் தொழிலாகப் போய் விட்டால், அவன் மற்ற மனிதர்களைப் போல் இருப்பது கடினம். கற்பனையால் பாதிக்கப்பட்ட ஒருவர் பிலிப் கே டிக். பாதிக்கப்பட்ட என்று நாம் சொல்கிறோம், ஆனால் செறிவடைந்த ஒருவர் என்றும் சொல்லலாம்: அவரது எழுத்துகள் எவ்வளவு ஆற்றல் மிகுந்தவையாக இருக்கின்றன. அவர் தனது மனமயக்கங்களை லட்சக்கணக்கான சொற்களில் எழுதியுள்ளார். அவற்றுள் சில ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது.

பிலிப் கே டிக் பற்றிய அந்த மதிப்புரை இங்கே.


ஒரு வகை புத்தக விமரிசனம், அந்தப் புத்தகம் எதைச் சொல்கிறது, எப்படிச் சொல்கிறது, அவை குறித்த விமரிசகரின் கருத்துகள் என்ன என்பது. இன்னொரு வகை விமரிசனம் அதைவிட கொஞ்சம் புதியது, நுட்பமானது- ஜெப் டயரின் இந்த மதிப்புரையைப் பாருங்கள். தான் விமரிசிக்கும் நாவல் வாழ்க்கையை எப்படி பார்க்கிறதோ, எப்படி விவரிக்கிறதோ, அதே பார்வையில் அந்த நாவலையும் அணுகியிருக்கிறார் டயர். நாவல் எதைப் பேசுகிறதோ, அது இந்தக் கட்டுரை வழியாக நமக்குக் கிடைத்து விடுகிறது.

15/12/11

கதைக்கும் கட்டுரைகள்

அண்மைக்காலத்தில் படித்த கட்டுரைகளில் ஜேம்ஸ் வுட் எழுதிய இந்தக் கட்டுரை மனதைக் கவர்ந்த ஒன்று. அதன் சாரத்தைக் கொடுக்க முயற்சி செய்கிறேன். ஜான் ஜெரமையா சலிவன் என்பவர் எழுதிய புத்தகத்தின் மதிப்புரை, ஆனால் அதில் வுட் சில அருமையான விஷயங்களைத் தொட்டிருக்கிறார்.
நீண்ட முகப்புக் கட்டுரையாக இருந்தாலும் சரி, விமரிசனக் கட்டுரையாக இருந்தாலும் சரி, சமகால அமெரிக்க பத்திரிக்கைக் கட்டுரைகளின் நற்காலம் இது. இதை எதிர்பார்த்திருக்க முடியாத சூழலில் இது நிகழ்ந்திருக்கிறது. .... புதிய பத்திரிக்கைகள் வெற்றி பெரும் வழியைக் கண்டு விட்டன: ஏதோ ஒரு நம்பிக்கையில் பழைய பத்திரிக்கைகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன, ஏதோ ஒரு நம்பிக்கையில் தொடர்கின்றன.
தமிழிலும்கூட கதைகளைப் படிப்பவர்களைவிட கட்டுரைகளைப் படிப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

7/12/11

புறவழிச் சாலைகள்

மருத்துவர்கள் கவிஞர்களாக இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. வாழ்வின் கூர்முனையில் நிற்பவர்கள் அவர்கள். சாதாரணர்களுக்குக் காணக் கிடைக்காத உணர்வின் உச்ச கணங்கள் அவர்களுக்கு அன்றாட நிகழ்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் எல்லா மருத்துவர்களும் கவிதை எழுதுவதில்லை என்பதுதான் கேள்வியாக இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் ஒரு மருத்துவக் கல்லூரியில் கவிதைப் போட்டி வைத்தார்களாம். அதில் ஒரு கவிதை:

அபேசியா
-நோவா கபூனா

மூளையில் சில நெடுஞ்சாலை
அமைப்புகள் இருப்பதாய் கற்கிறோம்:
கார்பஸ் கல்லோசம்,
ஸ்பைனோதலமிக்,
ஆப்டிக் ரேடியஷன்.

ஆனால் அங்கு வேறு சாலைகளும் உண்டு.
பார்வைக்கு மறைந்திருக்கும்
அழகிய ந்யூரல் பின்புலங்கள்:
புழுதிச் சாலைகள், அதிகம் பயன்படுத்தப்படாதவை.

நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருக்கும்போது
சில சமயம் நாம் அவற்றைக் காணலாம்:
கான்சர்,
சர்ஜரி,
ஸ்ட்ரோக்.

எங்கள் துயரர் ஒருவருக்கு மூளையில் கட்டி.
நாங்கள் அவளது நெடுஞ்சாலைகளை
ஒரு இறகை வரைந்து சோதித்தோம்:
"இது என்ன?"

அவள் அளித்த பதில்
அழகிய புறவழிச் சாலையில் வந்தது:
"ஒரு பறவை
உதிர்த்த
இலை"

13/11/11

நல்ல உள்ளங்களுக்கு நன்றி...

திரு கோபி ராமமூர்த்தி அவர்கள் நம்மை வலைச்சரம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். அன்பருக்கு நன்றிகள்.

 திரு சசரிரி கிரி அவர்களின் தளம்தான் பதினொன்றாம் பரிமாணத்தை அவருக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் என்று ஊகிக்கிறேன். கிரி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

6/11/11

இலக்கிய கோட்பாடுகள் - ஒரு எளிய அறிமுகம்

இலக்கிய கோட்பாடு என்பது எதுவாக இருக்கிறது, அல்லது இருந்தது? ஏன் நமக்கு கோட்பாட்டைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது? நாம் எங்கே நிற்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் கோட்பாட்டை வெவ்வேறு சித்தாந்தங்களின் அருவ தொகுப்பாக நினைக்காமல், அதை உண்மையாகவே நிகழ்ந்த ஒன்றாக வாசிக்க வேண்டும்: அது தனக்கென்று ஒரு வரலாற்றுச் சித்திரத்தை விட்டுச் செல்லும் உயிர் சுழல். அதன் நினைவுகளும், அது தன்னைக் குறித்து பதிவு செய்துள்ள விவரணைகளும் அவ்வாறு வாசிக்கப்படலாம். அப்போது இலக்கியக் கோட்பாட்டின் வாழ்வும் மரணவாழ்வும் நிலையாய் நிற்கும் அடையாளக் குறிகளைக் கொண்டு புரிந்து கொள்ளப்பட முடியும்: முக்கியமான கலந்துரையாடல்களும் பிரசுரங்களும்; அவை தேசிய அளவில் பெற்ற வெவ்வேறு வகை வரவேற்பும்; தாக்கத்தை ஏற்படுத்திய அமைப்பு சார்ந்த வட்டங்களும். இப்படி செய்யும்போது, வடிவமின்றி மிதக்கும் சித்தாந்தங்களின் உலகம் நிஜ உலக மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகள் என்ற தொடர்பு எல்லைக்குள் சிக்கிக் கொள்கிறது. இப்படிப்பட்ட ஒரு விவரிப்பை முன்வைத்து இந்த பாடத் திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது.
என்று துவங்குகிறது இந்த சுவையான கட்டுரை. கதை கவிதைகள் இலக்கியவாதிகளால் பேசப்பட்டாலும் நம்மைப் போன்ற பாமரர்களின் கண்களில் பட்டு வாயில் விழுந்து எழுந்திருக்காமல் தப்புவதில்லை. கோட்பாடுகளை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும்? படித்துப் பாருங்கள்.

இரண்டு முக்கியமான விஷயங்கள்: கோட்பாட்டு விமரிசனத்தின் காலம் முடிவுக்கு வந்து விட்டது என்று நினைக்கிறேன்; இப்போது ஸ்பெகுலேடிவ் ரியலிசம் என்ற புதிய கோட்பாடு பரவலாக கவனிக்கப்பட்டு வருகிறது.

5/11/11

இரு கட்டுரைகளுக்கான சுட்டிகள்.

வேற்று மொழிப் பெயர்களை தமிழில் எழுதும்போது வேறு பெயர்களாக தொனிக்கின்றன- சாமுவேல் பெக்கட்டின் கடிதங்கள் இரண்டாம் தொகுப்பு குறித்த விமரிசனம் டிஎல்எஸ்ஸில்.
ஒரு மனிதனாகவும் எழுத்தாளனாகவும் என் வாழ்நாள் முழுதும் இது போன்ற எதுவும் எனக்கு நேர வாய்த்தத்தில்லை... நான் இனியும் முன் போலல்ல, இனி என்றும் முன் போல் இருக்கவும் இயலாது, நீ செய்தது, நீங்கள் அனைவரும் எனக்கு செய்த உதவிகள் என் வாழ்க்கையை மாற்றி விட்டன. நான் எப்போதும் என்னைக் கண்டிருந்த இடத்தில், இனியும் என்னைக் கண்ணுறப் போகிற இடத்தில், சுழன்று சுழன்று மீண்டும் விழுந்து எழும் என் வாழ்வில், இனியும் முழு இருளோ மௌனமோ இருக்காது


ஜான் கேஜின் சைலன்ஸ் என்ற தொகுப்பு பதிப்பிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆவதையொட்டி ஒரு கட்டுரை-
அன்றைக்கு புதன் கிழமை. நான் ஆறாவது கிரேட் படித்துக் கொண்டிருந்தேன். அப்பா அம்மாவிடம், "தயாராக இரு: நாம் சனிக்கிழமை ந்யூ ஜீலாண்ட் போகிறோம்," என்று சொல்வது என் காதில் விழுந்தது. நான் தயாரானேன். பள்ளி நூலகத்தில் ந்யூ ஜீலாண்ட் குறித்து இருப்பதையெல்லாம் படித்தேன். சனிக்கிழமை வந்தது. எதுவும் நடக்கவில்லை. அந்த திட்டம் பற்றி பேசப்படவேயில்லை, அன்றோ அதற்கடுத்த நாளோ


சிறுகதை எழுத்தாளர்களுக்கான எட்டு விதிகள்.

சிறுகதை எழுத்தாளர்களுக்கான எட்டு விதிகள்- குர்த் வோனகுத்.

  • உனக்கு முழுக்க முழுக்க அந்நியனாக இருப்பவன் தன் நேரம் வீணாகி விட்டது என்று நினைத்துவிடாதபடிக்கு அவனது நேரத்தைப் பயன்படுத்திக் கொள்.
  • இவன் வெற்றி பெற வேண்டும் என்று வாசகன் விரும்புகிற மாதிரியான ஒரு பாத்திரத்தையாவது அவனுக்கு கதையில் கொடு.
  • ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஏதாவது ஒரு வேட்கை இருக்க வேண்டும்- ஒரு டம்ளர் தண்ணீருக்காவது அவர்கள் ஆசைப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு வாக்கியமும் இந்த இரண்டில் ஒன்றைச் செய்ய வேண்டும்- பாத்திரத்தின் இயல்பை வெளிப்படுத்துவது, அல்லது கதையின் ஓட்டத்தை முன் நகர்த்துவது.
  • முடிவுக்கு வெகு அருகில் துவங்குங்கள்.
  • கொடூரனாக இருங்கள். உங்கள் கதையின் பிரதான பாத்திரங்கள் எவ்வளவு இனிமையானவர்களாகவும் அப்பாவிகளாகவும் இருந்தாலும், அவர்களுக்கு கொடுங்காரியங்கள் நிகழ்த்துங்கள்- வாசகன் அவர்களின் இயல்பை புரிந்து கொள்ள அது உதவும்.
  • ஒருவரை மட்டும் மகிழ்விக்க எழுதுங்கள். நீங்கள் உங்கள் சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு உலகறிய கில்மா செய்தால்- இப்படிச் சொல்லலாம் - உங்கள் கதைக்கு நிமோனியா வந்து விடும்.
  • உங்கள் வாசகர்களுக்குத் தேவையான தகவல்களை எவ்வளவு விரைவாகத் தர முடியுமோ அவ்வளவு விரைவாகவும் விரிவாகவும் கொடுத்து விடுங்கள். சஸ்பென்ஸ் நாசமாய் போகட்டும். வாசகர்களுக்கு எங்கே, ஏன், என்ன நடக்கிறது என்பன முழுமையாக புரிந்திருக்க வேண்டும்- கரப்பான்பூச்சிகள் கடைசி சில பக்கங்களைத் தின்றுவிட்டால் மிச்ச கதை அவர்களாகவே முடித்துக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.

4/11/11

தொடரும் துணுக்குகள்

டிவிட்டரிலிருந்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள்: Findings.. நல்ல எழுத்தை வாசிப்பவர்களுக்கான நட்பு வட்டம்- ஒரு புக்மார்க்லெட்டை உங்கள் உலவியில் பதித்துக் கொள்ள வேண்டும். அதை கிளிக் செய்து விட்டு நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் பக்கத்தில் நீங்கள் ரசித்த வாக்கியங்களை ஹைலைட் செய்தால் அவை பகிர்ந்து கொள்ளப்படும். நீங்கள் நினைக்கிற மாதிரி போரடிக்கும் சமாசாரமல்ல: முயற்சித்துப் பார்க்கலாம், ஆனால் அந்த புக்மார்க்லெட் வேலை செய்கிறதா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. பழகப் பழகத்தானே புரியும்? அங்கே அடியேன் சற்று காலம் இளைப்பாறக்கூடும்.

கூகுள் எர்த்தில் கதைகளும் கதை மாந்தர்களும். நல்ல முயற்சி, சுவையான வடிவமைப்பு. பொன்னியின் செல்வன் கூகுள் எர்த்தில் இடம் பெறுமா?

jஜெர்மானிய இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் தவறவிடக் கூடாது: ஜெர்மன் இலக்கிய மாதத்தை சில வலைப்பதிவர்கள் கொண்டாடுகிறார்கள்.






சீன இணைய இலக்கியச் சூழல்

சீன இலக்கியச் சூழலைப் பற்றி கேள்விப்படும் விஷயங்கள் பிரமிக்க வைப்பனவாக இருக்கின்றன. நாம் சீனா என்றால் இளப்பமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்- ஆனால் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கடும் அடக்குமுறையை எதிர்கொண்டு நம்மால் நினைத்தும் பார்க்க முடியாத பேரிழப்புகளையும் தியாகங்களையும் தாங்கி வாழும் பண்பாடு. படைப்பூக்கம் இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகள், தங்களுக்கு ஏற்ற தீர்வுகள் காண நிர்பந்திக்கப்பட்ட மக்கள். இன்று ஓரளவு சுதந்திரக் காற்று வீசத் துவங்கியிருக்கிறது: இதற்கே என்ன ஒரு மறுமலர்ச்சி என்று வியப்பாக இருக்கிறது.

3/11/11

தொடரும் துணுக்குகள்

மெடாஃபிட்லரில் அனைவரும் படித்தாக வேண்டிய புத்தகங்கள்: சுவையான பட்டியல்.

தொடரும் இணைய இதழ் அறிமுகத்தில் - கார்த்திகா ரிவ்யூ : தெற்காசிய எழுத்தாளர்களின் படைப்புகள். ஸ்ருதி சுவாமியின் கருப்பு நாய் என்ற சிறுகதை இங்கே.

கோடை.

உமியாய் புழுதி வாரியிரைக்கிறது காற்று.
அனைத்துக்கும் வரிசையில் நிற்கிறோம்.
வயதாகியிருந்தாலென்ன, அனாதையாயிருந்தாலென்ன. பலமற்றவர்கள்

கோழிகளைப் போல் வேலிக்குள்.
எதையாவது செய்து கொண்டேயிரு. மாற்ற முடியாததை யோசிக்காதே.

குளிர் காலம்.

தரையின் பிளவுகளை ரேஷன் டின் மூடிகளால் மறைக்கிறோம்
மலைகளின் உயர்ந்தெழும் வெண் சுவரன்றி வேறில்லை கிழக்கில்

முள் வேலி.

என்று துவங்குகிறது கத்லீன் ஹெல்லெனின் மன்ஜனார் என்ற கவிதை.

31/10/11

துணுக்கு

பில் கேட்ஸ் தன் தளத்தில் புத்தக மதிப்புரைகள் எழுதி வருகிறார்- மதிப்புரைகளை இங்கே காண்க..

எந்த ஒரு நுட்பமான வாசகனைப் போலவே அவரும் படிக்காத புத்தகங்களின் அட்டைகளைப் பார்த்து மகிழ்கிறார்/ மலைக்கிறார்- "இதை எல்லாம் படிப்பதற்காக எடுத்து வைத்திருக்கிறேன்" என்று பெருமையடித்துக் கொள்கிறார்.

ஆனால் நமக்கும் அவருக்கும் உள்ள வேறுபாடு அவர் தான் வாசிக்கும் புத்தகங்களை வகைப்படுத்தி வைத்திருப்பதில் இருக்கிறது- "Prime Movers of Globalisation", "Lords of Finance" போன்ற புத்தகங்கள் பர்சனலாம்!

(நம்மைப் போலவே அவரது பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் மிகக் குறைவாகவே வருகின்றன- பதிவுலகில் சமத்துவம் நிலவுகிறது என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது)

29/10/11

சமகால அமெரிக்க சிற்றிதழ்கள்

அமெரிக்காவில் உள்ள சிறு பத்திரிக்கைகள் எப்படிப்பட்ட படைப்புகளை ஆதரிக்கின்றன என்ற கட்டுரை ஒன்றை ஒரு ஆங்கில இணைய இதழில் படித்தேன். இந்தக் கட்டுரையை எழுதியவர் அதன் சாரத்தை இங்கே தருகிறார்..

தமிழகத்தில் உள்ள சிறுபத்திரிக்கைகளில் எழுதுபவர்களுக்கு இந்தக் குறிப்புகள் பயனுள்ள கையேடாக அமையலாம்.

27/10/11

ஆர்க்டிக் சாகசம்

ஆங்காங்கே கண்ணில் படும் ஆங்கில இணைய இதழ்களைத் தொகுத்து வைக்கலாம் என்றிருக்கிறேன்.

La Petite Zine என்ற இணைய இதழ் பாருங்கள்.

எரிதழல் கவிதைகள் பதிப்பிக்க விரும்புகிறார்கள். உரைநடையானால் ஆயிரம் சொற்களுக்குள் கட்டுரையை முடித்துக் கொள்ள  வேண்டுமாம். நல்ல கொள்கை- போரடிக்காமல் இருப்பதில் பிடிப்பதைப் பதிப்பிக்கிறார்கள்.

சான்றுக்கு ஒன்று.



ஆர்க்டிக் சாகசம்.
- ஸ்டெபானி பார்பர்

அது வெண்மையில் வெண்மையாய்
இருந்திருக்க வேண்டும்- பனியில் ஒரு பனிக்கரடி.
ஆனால் அது 3-டியில் இருந்ததால், என்னிடம் கண்ணாடிகள் இல்லாததால்,
நீலமும் சிவப்புமாய் இரட்டித்திருந்தது.
அப்போது இவ்வளவு சில்லிட்டிருக்கவில்லை, ஆனால்
அது தன் தனிமையைக் காத்திருந்தது.

ஜோரான் ஜிவ்குவிச்

த்ரான்ஸ்த்ரோமர் என்று ஒருத்தர் இருப்பதே எனக்கு அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்ததும்தான் தெரிய வந்தது. இத்தனைக்கும் அவரது கவிதைகள் இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளனவாம் :(

இனியும் இப்படி இருக்கக் கூடாது என்று இணையத்தை மேய்ந்ததில் ஜோரான் ஜிவ்குவிச் என்று ஒருத்தர் இருக்கிறார் என்று கேள்விப்படுகிறேன். செர்பிய எழுத்தாளராம். இன்றைய உலக இலக்கியம்  என்ற சஞ்சிகையின் அண்மைய இதழில் அவருக்கு ஒரு சிறப்புப் பகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள். அதனால் அவர் பெரிய ஆள்தான் என்று தெரிய வருகிறது.

நண்பர்கள் வாசித்து உய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். யாரேனும் அவரது படைப்புகளை மொழி பெயர்த்தால் நலம்.


14/10/11

திருப்பு முனை

பதிப்புத்துறை மேற்கில் செல்லும் திசையைப் பார்த்தால் இங்கு புத்தகம் வெளியிடுபவர்கள் நிறைய யோசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றும் நம் பேர் அச்சில் வருவதைப் பார்ப்பதில்தான் ஆனந்தம் இருக்கிறது என்றாலும்- அது ஒரு இறவாமையை சுட்டுகிறது, கணினியின் திரையில் உள்ள எழுத்துகளைப் போல் அவ்வளவு சீக்கிரம் மறையாதிருப்பதால். மற்றபடி, புத்தகத்தை அச்சிடுவது, அதை கடைக்காரர்களிடம் விற்பனைக்குத் தருவது, எல்லாவற்றுக்கும் மேலாக- அதன் விற்காத பிரதிகளை ஒரு இடத்தில் சேகரித்து வைப்பது, இதுபோன்ற பெரிய தலைவலிகளை ஈபுக்குகள் தீர்த்து வைக்கின்றன.

இந்த செய்தியைப் பாருங்கள்- பரபரப்பாக விற்பனையாகும் புத்தகங்களை எழுதும் பாரி ஐஸ்லர் , தன் அடுத்த இரண்டு புத்தகங்களுக்கு ஐந்து லட்சம் டாலர்கள் தருவதாகச் சொன்ன பதிப்பகத்தை நிராகரித்து, தானாகவே ஈபுக்காக வெளியிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதன்பின் அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, சென்ற மாதம் அவர் எழுதிய அண்மைய ஈபுக்கைப் பதிப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில் இம்மாதம் அச்சுப் பிரதி வெளியாக இருக்கிறது.

"புத்தகங்களை பதிப்பிப்பது எனக்கு ஒரு தொழில், சித்தாந்தமல்ல," என்று சொல்லும் ஐஸ்னர், தனது ஈபுக் முந்தைய புத்தகங்களின் மொத்த விற்பனையை ஒரே மாதத்தில் தூக்கி சாப்பிட்டு விட்டது என்று மகிழ்கிறார்- எவ்வளவு குறைந்த விலையில், எவ்வளவு தரமான வடிவில், எவ்வளவு விரைவில் எவ்வளவு அதிக வாசகர்களுக்குத் தன் புத்தகங்கள் கிடைக்கின்றனவோ அவ்வளவுக்கு அந்த வியாபார உத்தி வரவேற்கப்பட வேண்டியது என்பது அவரது நோக்கமாக இருக்கும் போலிருக்கிறது.

ஐந்து, பத்து ஆண்டுகளில் நம் ஊரிலும் நிலைமை இந்த மாதிரி ஆகி விடும் என்று நினைக்கிறேன். பதிப்பகத்துறையினர் விழித்துக் கொள்ள வேண்டும்- எழுத்தாளர்களுக்கான பொற்காலம் வரவிருக்கிறது. தமிழ் இலக்கியத்துக்கு இது ஒரு திருப்புமுனையாகவும் அமையலாம்.

செய்தி இங்கே- npr

10/10/11

ஷெல் ஷாக்குடு!

ஷெல்லி வாழ்க!

ஆங்கிலத்தில் ஏராளமான புக் பிளாக்குகள் இருக்கின்றன, இவை தவிர இலவசமாக தரமான இதழ்களும் இணையத்தில் வாசிக்கக் கிடக்கின்றன. சரி, படிப்பதுதான் படிக்கிறோம், ஊர் உலகத்தில் என்னதான் பேசிக் கொள்கிறார்கள் என்பதைப் பதிவு பண்ணி வைத்துக் கொள்வோம் என்றே இந்த ப்ளாகைத் துவங்கினேன். அவ்வப்போது கோபம், வருத்தங்களைத் தீர்த்துக் கொள்ளவும் இது பயன்பட்டு வருகிறது.

சென்ற நவம்பர் மாததில் இருந்து இந்த அக்டோபர் வரை, ஏறத்தாழ ஒரு ஆண்டில், இதுவரை 1778 ஹிட்டுகளைப் பெற்றுள்ளது இந்த ப்ளாக்- ஏதோ எதையும் எழுதவில்லை, அதனால் யாரும் படிக்கவில்லை என்றில்லை: இதுவரை 106 பதிவுகள் வலையேற்றப்பட்டுள்ளன. பதினொரு மாதங்கள் என்று பார்த்தால் உக்ரைன், ஆஸ்திரேலியா, போட்ஸ்வானா உட்பட உலகெங்கும் உள்ள தமிழர்களின் நல்லாதரவால் சராசரியாக மாதம் 161.6 ஹிட்கள், நாளொன்றுக்கு 5.39 ஹிட்கள், பதிவொன்றுக்கு 16.77 ஹிட்கள் என்ற அளவில் உலக இலக்கியத்தைப் பேசியுள்ளது இந்த ப்ளாக்.

நேற்று ஒரு மாபெரும் அதிசயம் நடந்தது. அதுவரை ஷெல்லிக்கு இவ்வளவு பெரிய வாசகர் வட்டம் இருப்பது தெரியாமல் போய் விட்டது- படம் சொல்லாத கதையை வார்த்தைகளா சொல்லி விடப் போகின்றன?


ஓராண்டு சாதனையில் ஐந்தில் ஒரு பங்கை ஒரே நாள் முறியடித்து விட்டது! இன்று மேலும் ஐம்பது அடிகள் விழுந்துவிட்ட நிலையில் இது எங்கே போய் முடியும் என்றே தெரியவில்லை.

ஷெல்லி இல்லாவிட்டால் என்னைப் போன்ற பிளாக்கர்கள் பரவலான கவனம் பெற வழியே இல்லை போலிருக்கிறது- தமிழ் நாட்டிலேயே அவருக்கு இத்தனை பவர் இருந்தால் அவர் பிறந்த ஊரில் ஷெல்லிதான் அப்பாடக்கராக இருப்பார் என்று நினைக்கிறேன்.

வாழ்க ஷெல்லி!


9/10/11

பாரதியை விடுங்கள், பாவம் ஷெல்லி.

எது இலக்கியம் என்று கேட்டால் ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்வார்கள், ஒருவர் வாழ்க்கையின் இலக்கைக் காட்ட வேண்டும் என்பார், இன்னொருத்தர் வாழ்வை உள்ளபடியே சொன்னால் போதும் என்பார். இது அவரவர் மனப்பாங்கைப் பொறுத்த விஷயம்- வாழ்க்கையின் பொருள் என்ன என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்? நீங்கள் எப்படிப்பட்ட ஆளாக இருக்கிறீர்கள் என்பதற்கொப்ப உங்களுக்கு அது பல்வேறு பொருட்களை உணர்த்தலாம்- அவை ஒன்றோடொன்று முரண்படக்கூட வேண்டியதில்

8/10/11

மோசக்கார உலகம்

ஏய்த்தல் குறித்த ஒரு புத்தக விமரிசனம் படித்தேன். அதில் உள்ள ஒரு இயற்கை நிகழ்வு குறித்த விபரம் இங்கிருக்கிறது.

விஷயம் இதுதான். ப்ளிஸ்டர் பீட்டில்கள் என்று ஒரு வகை பூச்சிகள் உள்ளன. இவற்றின் லார்வாக்கள் ஒன்று கூடி ஒரு பெண் தேனீயைப் போன்ற தோற்றம் தருகின்றன, அது மட்டுமல்ல, அதன் pheramoneஐயும வெளிப்படுத்துகின்றன. இந்தப் பெண் தேனீயைக் கூட ஆசையுடன் பறந்து வரும் ஆண் தேனீக்களைப் பற்றிக் கொள்கின்றன. இந்த லார்வாக்களின் எடை தாளாமல் விழும் ஆண் தேனீ, தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறது. ஆனாலும் சில பீட்டில்களை அவற்றால் அகற்றவே முடிவதில்லை. இந்த ஆண் தேனீ மெய்யான பெண் தேனீயைக் கூடும்போது,  ப்ளிஸ்டர்கள் பெண் தேனீயைத் தொற்றிக் கொண்டு, அதன் கூட்டுக்குள் போய், தேனீக்கள் கொண்டு வரும் சாப்பாட்டை உண்டு வளர்கின்றன!

இயற்கை எவ்வளவு கேவலமாக இருக்கிறது பார்த்தீர்களா, மனிதனைத் திட்டி என்ன பிரயோசனம்?

இதையெல்லாம் தன் புத்தகத்தில் எழுதியிருக்கிற ஆசியரிடம், ஒத்திசைவு (empathy) பற்றி நீங்கள் எழுதவேயில்லையே என்று கேட்டால், ஏயப்பதில் இந்த ஒத்திசைவு உணர்வுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கிறது, இதைப் பற்றி நான் ஏன் (குரு) பில் ஹாமில்டனிடம் "ஒத்திசைவு பற்றி என்ன சொல்வாய் பில்?" என்று கேட்டேன், அதற்கு அவர், "எம்பதியா? அப்படி என்றால்?" என்று கேட்டார், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்கிற மாதிரி, அதனால் நான் அதை அத்தோடு விட்டேன் என்கிறார்.

முன்னமே சொன்ன மாதிரி, மனிதர்களைச் சொல்லிக் குற்றமில்லை, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நூறு ப்ளிஸ்டர் பீட்டில்கள்கள் இருக்கின்றன போலும்.

7/10/11

செய்தி

துமாஸ் த்ரான்ஸ்த்ரேமர் என்ற எண்பது வயதான ஸ்வீடிஷ் கவிஞருக்கு இவ்வாண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள்.

அறுபது மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவாம். இருந்தாலும், இவர் யார் என்னவென்றே எனக்குத் தெரியாது- இவர் ஒரு உளவியல் மருத்துவர் என்பதே எனக்கு செய்தியாக இருக்கிறது.

21/8/11

காத்தோடு போயாச்சு!

இப்போது 90களில் இருக்கும் என் கஸின் இரண்டாம் உலகப் போரில் வார்சா கெட்டோவில் இருந்தார். அவரும் கெட்டோவில் இருந்த மற்ற பெண்களும் தினமும் தையல் வேலை செய்தாக வேண்டும். நீ புத்தகத்தோடு மாட்டிக்கொண்டால் ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் மரண தண்டனை தந்து விடுவார்கள். அவருக்கு ‘Gone With the Wind’ன் ஒரு காப்பி கிடைத்திருந்தது. தினமும் தூங்கக் கிடைக்கும் நேரத்தில் மூன்று முதல் நான்கு மணி நேரம் அவர் அதைப் படிப்பதற்கு செலவிடுவார். அடுத்த நாள் தையல் வேலையைச் செய்யும் அந்த ஒரு மணி நேரத்தில் அவர் தான் படித்த கதையை தன்னுடனிருப்பவர்களுக்குச் சொல்வார் . ஒரு கதைக்காக இந்தப் பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்தார்கள். என் கஸின் இதை என்னிடம் சொன்னபோது எனக்கு நான் செய்வது மிகவும் முக்கியமானதெனப் புரிந்தது. கதைகள் ஆடம்பரமல்ல. அவற்றுக்காக நீ வாழவும் சாகவும் செய்கிறாய்.
- நீல் கைமன்

Gone with the wind இலக்கியமா என்ன என்று கேட்டால் நம்மில் பலர் திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி திருதிருவென்று முழிப்போம், பாருங்கள், அதற்காகவும் சாகத் தயாராக இருக்கிறார்கள். வேறெங்கோ வேறொருவர் சொன்ன மாதிரி, சரியான சமயத்தில் உன்னைச் சேர்ந்து உன் வாழ்க்கைக்குப் பொருள் தரும் புத்தகம்தான் இலக்கியம். அதை ஒரு நிறப்பிரிகை போல் பார்ப்பதுதான் நியாயம். ஒரு காலகட்டத்தில் உங்களுக்கு முக்கியமாகத் தெரிந்த புத்தகம் பின்னொரு சமயத்தில் அற்பமாகத் தெரியலாம். ஆனால் நம் உணர்வுகள் உண்மையானவையாக இருந்திருந்தால், அது இன்றைக்கும் வேறொருவருக்கு முக்கியமாக இருக்கக்கூடும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலே மேலே சென்று கொண்டிருக்கிறவர்கள் ஏறிய ஏணியை எட்டி உதைக்கலாம், தவறில்லை, அதை சுமந்து செல்ல முடியாது. ஆனால் அதை அப்படியே விட்டு வைக்கவும் செய்யலாம்- இன்னொருத்தருக்கு உபயோகமாக இருக்கும்.

17/8/11

எந்த ஒரு மனிதனும் குறியீடாக முடியாது - சினுவா அசேபே

என்னை ஒரு குறியீடாகப் பயன்படுத்துவது உனக்கு புத்திசாலித்தனமாக இருக்கலாம், ஆனால் என் மானுடத்தை ஒரு சிறிய அளவில் குறைப்பதையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்- சினுவா அசேபே.

சினுவா அசேபே இனவெறியை எதிர்கொள்ளும் விதம் முக்கியமானது. காலனியத்துக்கு எதிரானதாக மேற்கத்திய இலக்கியத்தில் போற்றப்படும் ஜோசப் கான்ராடின் "இருளின் மையம்" ஒரு இனவாத ஆக்கம் என்கிறார் அசேபே, அவர் கான்ராடையும் ஒரு இனவாதி என்று சொல்கிறார். கான்ராட் ஆப்பிரிக்கர்களை முழுமையான மனிதர்களாகக் கருதவில்லை, ஆப்பிரிக்காவையும் ஆப்பிரிக்கர்களையும் வெள்ளையர்களின் நாகரிகத்தின் எல்லைகள் எதுவரை என்பதைச் சித்தரிக்கும் திரையாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் கான்ராட் என்பது அவரது குற்றச்சாட்டு.
"ஆப்பிரிக்கா களமாகவும் பின்புலமாகவும் மட்டுமே இருக்கிறது, அது ஆப்பிரிக்கரின் மனிதத்தன்மையை மறுதலிக்கிறது. நம்மால் அடையாளம் கண்டுகொள்ளப்படக்கூடிய மானுடம் நீக்கப்பட்ட ஒரு மெடாபிஸிகல் போர்க்களமாக ஆப்பிரிக்கா இருக்கிறது. அலைவில் அவதியுறும் ஐரோப்பியன் தன்னைப் பணயம் வைத்து அதனுட் புகுகிறான். ஒரு அற்ப ஐரோப்பிய மனம் சிதைவுருவதைச் சித்தரிக்கும் துணைக்கருவியாக ஆப்பிரிக்காவைப் பயன்படுத்துவதில் உள்ள அபாரமான வக்கிர அகங்காரம் யாருக்கும் தெரியவில்லையா?
தன் பாத்திரங்களின் பார்வையில், அவற்றின் மனவோட்டதின் வழியாக கான்ராட் தன் புனைவைச் சித்தரிக்கும் தொனியைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்பவர்களுக்கு அசேபேவின் பதில்-
"கதைசொல்லியின் அற மற்றும் உள வாதனைக்கும் தனக்கும் இடையில் ஒரு சுகாதாரத் திரை விரித்துக் கொள்வது கான்ராடின் நோக்கமாக இருக்கிறது என்றால் அவரது முயற்சி முழுமையாகத் தோல்வியுற்றதாக எனக்குத் தெரிகிறது. அவர் தெளிவாகவும் போதுமான அளவிலும் அதற்கு மாற்றாக இருக்கக்கூடிய ஒரு கருதுகோளைத் தன் புனைவில் சுட்டத் தவறி விட்டார். நாம் அதைக்கொண்டு அவரது பாத்திரங்களின் கருத்துகளையும் செயல்களையும் எடை போட்டுப் பார்க்க அது துணை செய்திருக்கும். தனக்குத் தேவை என்று அவர் நினைத்திருந்தால் அதற்கு இடம் ஏற்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கான்ராடுக்கு இல்லாமலில்லை. கான்ராட் மார்லோவை அங்கீகரிப்பதாகத் தோன்றுகிறது...
மேற்கத்திய உலகை எதிர்கொள்ளும் பிறர் இன வேற்றுமைகளை நேருக்கு நேர் எதிர் கொண்டாக வேண்டும். அந்த வகையில் சினுவா அசெபேயுடனான இந்த நேர்காணல் சிந்திக்க வைக்கும் ஒன்று.

16/8/11

ஆற்று நீருக்குத் தன் பாதை தெரியாதா?

நாவல் என்று பார்த்தால் உலகின் முதல் நாவலாக ஜப்பானின் கெஞ்சி கதைகளைச் சொல்கிறார்கள். அது1008ஆம் ஆண்டு எழுதப்பட்டதாம் (தமிழில் 1879- பிரதாப முதலியார் சரித்திரம்). ஐரோப்பாவின் முதல் நாவல் 1605ல் எழுதப்பட்ட Don Quixote என்று சொல்கிறார்கள். சிறுகதைகள் ஐரோப்பாவில் பதினான்காம் நூற்றாண்டில் எழுதப்படத் துவங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் (நாம் இன்று இலக்கியமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் சிறுகதைகள் புதுமைப்பித்தன் காலத்தை ஒட்டி எழுதப்படத் துவங்கியவை என்று நினைக்கிறேன்)

என் எழுத்து முறை - சினுவா அசேபே

இது சென்ற பதிவின் தொடர்ச்சி. சினுவா அசேபே தன் எழுத்து முறை குறித்து பேசுகிறார்.

கேள்வி:
உங்கள் ஆக்கம் உருவாவது குறித்து ஏதேனும் சொல்ல முடியுமா? முதலில் எது வருகிறது? ஒரு பொது எண்ணம், அல்லது குறிப்பாய் ஒரு சூழ்நிலை, கதையோட்டம், பாத்திரம்?

அசேபே:
ஒவ்வொரு புத்தகத்துக்கும் அது ஒரே மாதிரி இருப்பதில்லை. பொதுவாகப் பேசினால், முதலில் வருவது ஒரு பொதுப்படையான எண்ணம் என்றுதான் நான் சொல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து, அதனுடன் என்று சொல்ல வேண்டும், பிரதான பாத்திரங்கள் வருகின்றன. நாம் பொதுப்படையான எண்ணக்கடலில் வாழ்கிறோம், அதில் நாவலாக எதுவுமில்லை, ஏனென்றால் ஏராளமான பொதுக் கருத்துகள் இருக்கின்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட கருத்து ஒரு பாத்திரத்தோடு இணையும் கணம் ஒரு என்ஜின் அதை செலுத்துவது போன்றது, அங்கே நாவல் துவக்கம் பெறுகிறது. குறிப்பாக இறைவனின் அம்பு என்ற நாவலில் வரும் எசூலூ போன்ற தனித்துவம் மிக்க அதிகாரம் செலுத்தும் பாத்திரங்கள் உள்ள நாவல்கள் விஷயத்தில் இப்படித்தான் நடக்கிறது. மக்களில் ஒருவன், அதைவிட, இனிமேலும் சுகவாசம் இல்லை, என்பன போன்ற பேராளுமையாய் இல்லாத பாத்திரங்கள் கொண்ட நாவல்களின் துவக்க கட்டங்களில் பொது எண்ணம் பெரும்பங்காற்றுகிறது என்று நினைக்கிறேன். ஆனால் துவக்க கட்டத்தைத் தாண்டிவிட்டபின் இனியும் பொதுக் கருத்துக்கும் பாத்திரத்துக்கும் வேற்றுமை இருப்பதில்லை- இரண்டும் வேலை செய்தாக வேண்டும்.

(பிளாட் என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன என்று தெரியவில்லை. கதையோட்டம் என்ற சொல்லை அந்தப் பொருளில் பயன்படுத்துகிறேன். )

கேள்வி:
கதையோட்டத்தின் இடம் என்ன? நீங்கள் எழுத எழுத கதையோட்டத்தை உருவாக்கிக் கொள்கிறீர்களா? அல்லது பாத்திரங்களில் இருந்து, கதைக்கருவிலிருந்து கதையோட்டம் வளர்கிறதா?

அசேபே:
நாவல் உருவாகத் துவங்கியதும் அது நிறைவு பெற்றுவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டால் நான் கதையோட்டத்தைப் பற்றியோ கதைக்கருவைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. அவை தாமாகவே உருப்பெறும், இப்போது பாத்திரங்கள் கதையை இழுத்துச் செல்லத் தலைப்படுகிறார்கள். ஏதோ ஒரு கட்டத்தில் கதையும் அதன் நிகழ்வுகளும் நீ நினைத்த மாதிரியில்லாமல் உன் கட்டுப்பாட்டை மீறி விடுகிறது என்பது போலாகிறது. சில விஷயங்கள் ஒரு கதையில் இருந்தாக வேண்டும், அது இல்லாமல் கதை நிறைவு பெறுவதில்லை. அவை தாமாகவே கதைக்குள் வந்து விழும். அவை அப்படி வந்து சேரவில்லை என்றால் உனக்குப் பிரச்சினை வந்து விட்டது என்று பொருள், அப்போது உன் நாவல் நின்று விடுகிறது.

தீவிரமான எழுத்தாளர்களில் யாரும் நேரம் வரட்டும் எழுதுவோம் என்று காத்திருப்பதாகத் தெரியவில்லை. அசேபேயின் ருடீன் இப்படி போகிறது:

பொழுது விடிந்ததும் நான் எழுதத் துவங்கிவிடுகிறேன். நான் இரவு வெகு நேரமும் எழுதுகிறவன்தான். பொதுவாக நான் தினமும் இத்தனை சொற்கள் எழுத வேண்டும் என்று கணக்கு வைத்துக் கொண்டு எழுதுவதில்லை. நிறைய எழுதினாலும் எழுதாவிட்டாலும் தினமும் எழுத வேண்டும் என்ற ஒழுங்கு இருக்க வேண்டும். நீ நிறைய எழுதும் நாளில் நிச்சயம் நன்றாகத்தான் எழுதியிருப்பாய் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. என் மேல் ஒரு கடுமையான டைம்டேபிளை சுமத்திக் கொள்ளாமல் எப்படி தினப்படி ஒழுங்காக எழுதுவது என்பதற்கான முயற்சியைத் தொடர்கிறேன், அப்படி செய்ய முடிந்தால் எனக்கு முழு நிறைவாக இருக்கும்.

(அசெபேயின் புகழ் பெற்ற நாவல் குறித்த நல்ல ஒரு அறிமுகம் இங்கே இருக்கிறது: Things Fall Apart / Invitation to World Literature)

15/8/11

நம் கதைகள் நமதாக இருக்கட்டும் - சினுவா அசேபே

ஒருவரின் கதை உனக்குப் பிடிக்கவில்லையென்றால், நீயே உன் கதையை எழுது.

ஊமை சனங்கள் பேச்ச்சற்றவர்கள் மட்டுமல்ல, பார்வையற்றவர்களும்கூட என்கிறார் சினுவா அசேபே, இந்த நேர்காணலில்- இதுவே இலக்கியத்தின் நியாயமாகிறது.

பின் நான் வளரலானேன், நல்லவனாக இருக்கிற வெள்ளையன் எதிர்கொள்ளும் காட்டுமிராண்டிகளின் பக்கம் இருக்க வேண்டியவன் நான் என்பதையே அறியாமல் அந்த சாகசக் கதைகளைப் படிக்கலாயினேன். வெள்ளையரின் பார்வையில் பார்ப்பது என் அனிச்சையான இயல்பானது. அவர்கள் அருமையானவர்கள்! அவர்கள் அற்புதமானவர்கள். மற்றவர்கள் அப்படியல்ல... அவர்கள் முட்டாள்களாகவும் அவலட்சணமானவர்களாகவும் இருந்தனர். உனக்கென்று கதைகள் இல்லாததன் ஆபத்தை நான் இப்படித்தான் எதிர்கொண்டேன். அருமையான பழமொழி ஒன்றுண்டு- சிங்கங்கள் தங்கள் சரித்திரத்தை எழுதும்வரை வேட்டையின் வரலாறு வேடனைத்தான் போற்றும். இதை நான் வெகு காலம் சென்றபின்தான் உணர்ந்தேன். அதை உணர்ந்ததும் நான் எழுத்தாளனாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகிவிட்டது.

தன் வரலாற்றைத் தன் குரலில், தன் பார்வையில் பதிவு செய்ய வேண்டியதைப் பேசும் அசேபே அந்தப் பார்வை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் விளக்குகிறார்-

கே:
எழுத்தாளர்கள் பொதுப் பிரச்சினைகளில் எவ்வளவு ஈடுபாடு காட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

அசேபே:
நான் வேறு யாருக்கும் எந்த விதிமுறையும் வகுக்கவில்லை. ஆனால் எழுத்தாளர்கள் எழுத்தாளர்களாக மட்டும் இருப்பதில்லை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் குடிமக்களும்கூட. பொதுவாக அவர்கள் விபரமறிந்த வயதினராக இருக்கின்றனர். சீரியசான உயர்கலை என்பது மானுடத்துக்கு உதவவும், அதற்கு சேவை செய்யவுமே எப்போதும் இருக்கிறது என்பதே என் நிலைப்பாடு. அதன் கடமை குற்றம் சாட்டுவதல்ல. மானுட நேயத்துக்கு முட்டுக்கட்டை போடுவதுதான் அதன் குறிக்கோள் என்றால் கலையை கலை என்று நாம் எப்படி அழைக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதனை அசௌகரியப்படுத்துவது அதன் நோக்கமாக இருக்கலாம், ஆனால் அடிப்படையில் மானுட நேயத்துக்கு எதிராக இருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால்தான் எனக்கு இனவாதம் சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது, அது மானுடத்துக்கு எதிராக இருப்பதால். சிலர் இவன் தன் மக்களைப் புகழ வேண்டும் என்று சொல்கிறான் என்று நினைக்கிறார்கள். அடக் கடவுளே! போய் என் புத்தகங்களைப் படித்துப் பாருங்கள். நான் என் மக்களைப் போற்றுவதில்லை. நான்தான் அவர்களுடைய கடுமையான விமர்சகன். "நைஜீரியாவின் பிரச்சினை" என்ற என் துண்டுப் பிரசுரம் வரைமீறிய ஒன்று என்று சிலர் நினைக்கிறார்கள். என் எழுத்தால் எனக்குப் பல பிரச்சினைகள் வந்திருக்கின்றன. கலை மானுடச் சார்பு கொண்டதாக இருக்க வேண்டும். எத்தியோப்பியாவுக்குச் சென்று பல நோய்களோடு திரும்பினாரே ராம்பூ (Rimbaud), அந்த பிரெஞ்சு நாட்டுக்காரரைப் பற்றி யெவ்டுஷென்கோதான் சொன்னார் என்று நினைக்கிறேன், ஒரு கவிஞன் அடிமைகளை வைத்து வர்த்தகம் செய்ய முடியாதென்று. அடிமை வர்த்தகத்தில் இறங்கியபின் ராம்பூ கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டார். கவிதையும் அடிமை வியாபாரமும் சேர்ந்திருக்க முடியாது. அதுதான் என் நிலைப்பாடு.

சுவையான கருத்துகள். ஆனால் நாம் யார் என்பதற்கு விடை காண்பது அவ்வளவு சுலபமல்ல- காலம் நம் வரலாறுகளை அவ்வளவு சிக்கலாகப் பிணைத்திருக்கிறது. பெரும்பாலும் நாம் யார் என்பது நம்மை வெறுப்பவர்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது. இதற்கு எதிர்வினையாக தன் வரலாற்றைப் பதிவு செய்பவன், மானுடச் சார்புடன் எழுத வேண்டும் என்பதைத் தன் கடமையாக வைத்துக் கொள்வது சிக்கலான பாதையைத் தேர்ந்தெடுப்பதாகவே இருக்கும். ஆனால் வேறு வழியில்லை என்றும் சொல்லலாம்.


12/8/11

"ஒற்றை அடியில் வீழ்த்திச் சாய்க்க வேண்டும்"

நேற்று படித்ததில் Georges Simenon குறித்த இந்த மேற்கோள் நன்றாக இருந்தது, நேர்மையாக இருந்த காரணத்தால்:

"எழுத்தாளன் என்பவன் இல்லை," என்கிறார் அவர் தன் வாசகர்களிடம். "புதினமும் வாசகனும் மட்டுமே உள்ளனர். எந்த அளவுக்கு அந்தப் புதினம் வாசகனால் எழுதப்பட்டதாகத் தோற்றமளிக்கிறதோ அந்த அளவுக்கு அது சிறந்த புதினமாகிறது. நாவல் என்பது சிறியதாக இருக்க வேண்டும், ஒரு அமர்வில் படித்து முடித்துவிடக் கூடியதாக இருக்க வேண்டும். அது ஆவணமாக இருக்கக் கூடாது, அது மிகைப்படுத்தப்பட்ட சித்திரமாக இருக்கக் கூடாது. அது தன் வாசகனை வலுவான ஒரு ஒற்றை அடியில் வீழ்த்திச் சாய்க்க வேண்டும்". கூட்டத்தில் உள்ள அனைவருக்கும் தான் சொல்வது ஏமாற்றமாயிருக்கிறது என்பதை முழுமையாக உணர்ந்தவராய் சிமெனோன் தொடகிறார், இந்த இலக்கியக் கொள்கைகள் தன் நாவல்களைத் தவிர மற்ற எவை குறித்தும் உண்மையாகாது என்று.

ந்யூ யார்க்கரில் பிரெண்டன் கில், A Different Stripe — Simenon on the Novel

11/8/11

மீண்டும் விழு, இன்னும் நன்றாக விழு

சில பேர் தாங்கள் எழுதியதைத் திரும்பத் திரும்ப திருத்தி எழுதிக் கொண்டே இருப்பார்கள்- என் நண்பரொருவர் ஒரு சிறுகதையை எழுத ஆரம்பித்துவிட்டால், ஒரு நாளைக்கு மூன்று முறை அவரது கதை திருத்தப்பட்டு எனக்கு அஞ்சல் செய்யப்படும். இது குறைந்தது இரண்டு வாரங்களுக்குத் தொடரும். அவருக்குத் தன் கதை நிறைவு பெற்றுவிட்டது என்ற நம்பிக்கை வருவதற்குள் எனக்கு அவரது கதை மனப்பாடமாகிவிடும். அப்புறமும் திருத்தங்கள் தொடரும்.

முன்னாவது பரவாயில்லை, அச்சிட்டு வந்து விட்டால் ஒன்றும் பண்ண முடியாது, இப்போது எல்லாம் மென்பொருள்தானே, நினைத்த திருத்தங்களை நினைத்தபோது செய்து கொள்ளலாமே, நீங்கள் செய்வீர்களா என்று சில எழுத்தாளர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அதில் ஜான் பான்வில் என்பவர் சொன்னது படிக்க நன்றாக இருந்தது-
"
இது ஒரு சுவையான கேள்வி. ஏன், நாம் காகிதத்தில் திருத்தியே மீண்டும் பதிப்பிக்கலாமே என்ற எண்ணம்தான் முதலில் தோன்றியது- ஆடன் தன் கவிதைகளில் பலவற்றைத் திருத்தி மீண்டும் பிரசுரம் செய்திருக்கிறார். எனவே, முன் எப்போதும் இல்லாத ஒன்றை இந்த புதிய தொழில்நுட்பம் நமக்கு சாத்தியப்படுத்தி உள்ளது என்று நான் நினைக்கவில்லை. என்ன ஒன்று, இப்போது திருத்தங்களை செய்வது சுலபமாகவும் செலவு குறைவாகவும் இருக்கிறது.

"என்னைப் பொருத்தவரை என் பழைய ஆக்கங்களுக்குத் திரும்புவது என்பது என்னால் தாள முடியாத ஒன்று. என் பான்வில் புத்தகங்கள் என்னை எதிர்நோக்கி நிற்கும் அவமானங்கள் என்று நான் இதற்கு முன் பலமுறை சொல்லியிருக்கிறேன். இது தவறாக புரிந்து கொள்ளப்படலாம்: நம் எல்லாருக்கும் தெரியும், என் புத்தகங்கள் மற்ற எல்லாருடைய புத்தகங்களையும்விட சிறந்தவை, என் திறமையை நினைத்துப் பார்த்தால் மட்டுமே அவை தோல்விகள். என்னால் அவற்றின் குறைகளை மட்டுமே பார்க்க முடிகிறது. நான் பூரணத்துவத்தைத் தேடிச் செல்கிறேன், அது கிடைக்காத விஷயம். பெக்கட் சொல்கிற மாதிரி, "மீண்டும் விழு, இன்னும் நன்றாக விழு". அதுதான் கலைஞனின் விதி. எனவே என் கடந்த கால தோல்விகளை இனி வரும் தலைமுறைகளுக்குக் கொடையாய் கொடுத்துவிட்டு இனி என்னால் எவ்வளவு நன்றாக விழ முடியுமோ அவ்வளவு நன்றாக விழ நான் முயற்சிக்கிறேன்.

2/8/11

மாற்றம் என்பது நிலைத்திருப்பதே...

என் கணக்கு சரியாக இருந்தால், இந்த ப்ளாகுக்கு ஏழு வாசகர்கள் இருக்கிறார்கள். உக்ரேனிய வாசகரைக் கடந்த ஒரு வாரமாகக் காணவில்லை; ஆஸ்திரேலிய வாசகர் அவ்வப்போது தலை காட்டுகிறார்; போட்ஸ்வானா வாசகர் தொடர்ந்து இங்கு நடப்பதை அவதானித்து வருகிறார். சர்வதேச நண்பர்கள் மூவருக்கும் நன்றி.

உக்ரேனிய வாசகரை இழந்து விட்ட நிலையில் தற்போது மற்ற இரு தேசங்களையும் சேர்ந்த வாசகர்களுக்காக எழுத வேண்டியிருக்கிறது; ஆஸ்திரேலிய வாசக அன்பரின் மௌன சம்மதத்தைப் பெற்றதாக நினைத்துக் கொண்டு போட்ஸ்வானா தேசத்தைச் சேர்ந்த அன்பருக்காக ஆப்பிரிக்க விவகாரங்களை எழுதவிருக்கிறேன்,..

கென்யாவைச் சேர்ந்த வஞ்சிக்கு நியாச்சே என்ற பெண் ஜெஸ்டாட் தெரபிஸ்ட் எழுதியுள்ள சில விஷயங்கள் கவனிக்கத்தக்கன-

நான் வளர்ந்த கென்யாவில் ஒரு வானிலை நிகழ்வு ஏற்படுவதுண்டு. அதைக் குரங்குத் திருமணம் என்று அழைப்போம். இதைக் காட்சிப்படுத்திப் பாருங்கள்: கண்ணைக் கவரும் கதிரொளி, உருண்டு திரண்ட மேகங்கள், மெல்லிய தூறல் முதல் வானைப் பிளந்து கொட்டும் மழை, சில சமயங்களில் வானவில். இங்கிலாந்தில் இதை சன்ஷவர் என்று அழைப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஹ்ம்ம்ம்ம்ம்... என் "வாழ்கைக் கதையை" மெய்யாக நான் நினைக்கத் துவங்கும்போது என் உள்ளத்தில் இத்தகையே நிகழ்வே ஏற்படுகிறது. என்னால் வெயிலை உணர முடிந்தாலும் நான் நனைவதைத் தவிர்க்க முடிவதில்லை, வானவில்லின் முடிவில் உள்ள வண்ணங்கள் என் வாழ்வில் வரவே வராதோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

நான் அனுபவித்துத் தீர்ப்பதையும் முயன்றிருக்கிறேன், வைராக்கியத்தையும் முயன்றிருக்கிறேன், ஆன்மீக சுத்திகரிப்பையும் சாமியாடித் தீர்வையும் முயன்றிருக்கிறேன். என் வாழ்வை விவரிக்கும் வாக்கியங்களை மாற்றி எழுதும் முயற்சியில் நான் அவற்றை இன்னமும் ஆழ எழுதியிருக்கிறேன் என்பதை ஜெஸ்டாட் தெரபியின் நடைமுறை பயிற்சியின்போது அறிகையில் நான் அடைந்த ஆச்சரியத்தை நினைத்துப் பாருங்கள். நான் பெஸ்ஸர் (1970) என்பவர் எழுதிய "மாற்றத்தின் விடையிலிக் கோட்பாடு" என்ற ஆய்வுக்கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.

ஒரு நீண்ட கதையைச் சுருங்கச் சொல்வதானால், நான் நானாக எவ்வளவுக்கு இருக்கிறேனோ, அவ்வளவுக்கு என்னில் மாற்றம் ஏற்படுகிறது: புத்துயிர்ப்பும் இவ்வாறே நிகழ்கிறது; இதற்கு மாறாக, நான் எவ்வளவுக்கு மாற்றமடைய முயற்சிக்கிறேனோ, அவ்வளவுக்கு மாற்றம் கடினமாகிறது.
இதற்கும் இலக்கியத்துக்கும் நம் ப்ளாகுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கும் அன்பர்கள் ஹெட்டரைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்: புனைவின் வேர்கள் நினைவில்- நினைவின் வேர்கள் புனைவில்...

1/8/11

இலக்கணப் பிழைகளும் நம்பகத்தன்மையும்

எப்போதும் எழுத்தில் நம் கண்களை முதலில் கவர்ந்து நமக்கு எரிச்சலூட்டுவது எழுத்துப் பிழைகளே. அதற்கடுத்தபடி, இலக்கணப் பிழைகள். எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும், சுவாரசியமில்லாத, முதிர்ச்சியில்லாத நடையும் நம்பகத்தன்மைக்கு எதிராக இயங்குகின்றன. நான் இந்தக் கட்டுரையை சுவாரசியமாக எழுதினால், நீங்கள் தொடர்ந்து படிக்கக்கூடும், சில விஷயங்களை நம்பவும் கூடும். ஆனால், படிக்கும்போதே இவனுக்கு ஒன்றும் தெரியாது என்கிற மாதிரி எழுதினால் நான் உண்மையைச் சொன்னாலும் நீங்கள் நம்பப் போவதில்லை.

பழைய கட்டுரைதான்- நன்றாக எழுதப்பட்ட எதிர்மறை விமரிசனங்கள், மோசமாக எழுதப்பட்ட ஆதரவு விமரிசனங்களைக் காட்டிலும் சந்தையில் பொருட்களை விற்கிறதாம். இது எந்த அளவுக்குப் போய் விட்டதென்றால் ஜப்போஸ் என்ற வணிக தளம் பல நூறாயிரம் டாலர்களை தன் தளத்தில் உள்ள பின்னூட்டங்களின் இலக்கணம் மற்றும் எழுத்துப் பிழைகளை நீக்குவதற்கு மட்டும் செலவிடுகிறதாம்.

பிழையற்ற நடையின் முக்கியத்துவத்தை அறிய கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

அழகின் சிறு ஒளி

எண்பதாயிரம் யூரோ மதிப்புள்ள கடலூன்யா சர்வதேசப் பரிசைப் பெற்ற ஹரூகி முரகாமி ஆற்றிய, பெருமளவில் அணுசக்திக்கு எதிரான, உரையில் என்னைக் கவர்ந்த பகுதி-
ஜப்பானிய மொழியில் மூஜோ (無常) என்ற சொல் உண்டு. எதுவும் நிலைத்திருப்பதில்லை என்பதே அதன் பொருள். இந்த உலகில் பிறந்தவையனைத்தும் மாறுதலுற்று மறைந்தே போகும். இந்த உலகில் நமக்குச் சாரமாய் நித்தியமாகவோ நிலையானதாகவோ எதுவுமில்லை. உலகைக் குறிந்த இந்தப் பார்வை பௌத்தத்திலிருந்து பெறப்பட்டது, ஆனால் மூஜா என்னும் கருத்துரு ஜப்பானியர்களின் ஆன்மாவில் தீத்தழும்பாய் உருவேற்றம் பெற்றுள்ளது, அது ஜப்பானிய இன பொது புத்தியில் வேர் கொண்ட ஒன்று.

"எல்லாம் இப்போது போயின" என்ற எண்ணம் விரக்தியை வெளிப்படுத்துகிறது. இயற்கைக்கு எதிராகச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம். ஜப்பானிய மக்கள் இந்த விரக்தியில் அழகின் வெளிப்பாட்டைக் கண்டுள்ளனர்.

வேனிற்பருவத்தின் செர்ரி மலர்ச் செறிவை, கோடையின் விட்டில்பூச்சிகளை, இலையுதிர் காலத்தின் செவ்விலைகளை நாங்கள் நேசிக்கிறோம். அவற்றை பேராவலுடன் கூட்டம் கூட்டமாகக் கண்டு ரசிப்பதை ஒரு மரபின் தொடர்ச்சியாக செய்வதை நாங்கள் இயல்பான விஷயமாக நினைக்கிறோம். செர்ரி மலரும் இடங்கள், விட்டில் மற்றும் சிவந்த இலைகள் தத்தம் பருவங்களில் சிறப்பிக்கப்படும் இடங்களில் ஹோட்டல்களில் முன்பதிவு கிடைப்பது எளிதல்ல, அங்கு கூட்டம் கூட்டமாக மக்கள் பயணம் வந்து கூடியிருப்பதை எப்போதும் காண்கிறோம்.

ஏன்?

செர்ரி மலர்கள், விட்டில் பூச்சிகள், செவ்விலைகள் தங்கள் அழகை வெகு விரைவில் இழக்கின்றன. இந்த மகத்தான கணத்தின் தரிசனம் பெற நாங்கள் வெகு தொலைவு பயணம் செய்கிறோம். அவை வெறுமே அழகாக மட்டுமில்லை, இப்போதே அவற்றின் அழகு மறையத் தொடங்கி விட்டது, அவற்றின் சிறு ஒளியையும் அழகின் பிரகாசத்தையும் இழக்கத் துவங்கி விட்டன என்பதை உறுதி செய்து கொள்வதில் சிறிது நிறைவடைகிறோம். அழகின் உச்சம் தொட்டுக் கடந்து செல்லப்பட்டு மறைந்து விட்டது என்ற உண்மை எங்கள் மனதுக்கு சாந்தியளிக்கிறது.

31/7/11

பேச்சின் லயமும் கவிதையின் இசையும்

ராபர்ட் ஃப்ராஸ்ட் நாடறிந்த கவிஞர். எட்வார்ட் தாம்சன் என்ற விமரிசகர்-கவிஞரைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பையும், The Road not Taken என்ற கவிதையின் பின்னணியையும் குறித்த ஒரு அற்புதமான கட்டுரை இங்கே இருக்கிறது, அவசியம் படித்துப் பாருங்கள் .

எட்வார்ட் தாமஸ் ஆடன், டைலன் தாமஸ், டெட் ஹ்யூஸ் ("எங்கள் பிதாமகர்"), பிலிப் லார்கின் போன்றவர்களால் பெரிய அளவில் கவிஞராக மதிக்கப்பட்டவர். "ஆங்கில கவிதையின் சொர்க்கவாசலின் பொற்சாவிகளை வைத்திருப்பவர்" என்று டைம்ஸால் புகழப்பட்டவர். எஸ்ரா பவுண்டின் திறமையை அடையாளம் காட்டியவர் .இவர் ராபர்ட் பிராஸ்ட் பற்றி எழுதியது அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கத் துணை செய்தது.

அவர்களுடைய நட்பு மற்றும், அந்த ஒரு குறிப்பிட்ட கவிதையின் தாக்கம் பற்றி அறிய கட்டுரையைப் படியுங்கள், இங்கே நான் ஏறத்தாழ பேச்சு மொழியில் இயல்பாக எழுதப்பட்ட பிராஸ்டின் கவிதைகளைப் பற்றிய ஒரு பத்தியை அதன் அழகுக்காகவும் கூர்மையான அவதானிப்புக்காகவும் இங்கே மொழி பெயர்த்துத் தருகிறேன்-
பாஸ்டனுக்கு வடக்கே என்பது ஒரு புரட்சிகரமான படைப்பு என்பதில் சந்தேகமில்லை. தத்தம் வழியில் தனித்தனியே எது நல்ல கவிதைக்குத் தேவை என்று பிராஸ்டும் தாமசும் இனங்கண்டுகொண்ட தன்மைகளைப் பதினெட்டே கவிதைகளில் இந்தத் தொகுப்பு நிகழ்த்திக் காட்டியது. இருவருக்கும் கவிதையின் ஆற்றல் சந்தத்திலோ வடிவத்திலோ இருக்கவில்லை, அதன் லயத்தில் (ரிதம்) அதை அடையாளம் கண்டு கொண்டனர். வாசிக்கும் கண்ணல்ல செவிக்கும் காதுகளே கவிதையை அறியும் அவயமாக இருந்தது. தாமசுக்கும் பிராஸ்டுக்கும் கவிதையின் அடிகளின் மீட்டரை விட சொற்றொடர்களுக்கு உண்மையாக இருப்பதே அவசியமாக இருந்தது. கவிதையின் முன்னுதாரணங்களைவிட உரையாடலின் ரிதமே முக்கியமாக இருந்தது. பிராஸ்ட் இதை சேடன்ஸ் என்று அழைத்தார். மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் நிகழும் உரையாடல்களை நீங்கள் என்றேனும் கேட்டிருந்தால், வார்த்தைகள் சரியாக பிடிபடாவிட்டாலும் அந்த உரையாடலின் பொதுப் பொருளை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று பிராஸ்ட் நம்பினார். நாம் பேசும் வாக்கியங்களிலும் அதன் தொனியிலும் ஒலிவடிவ பொருள் பொதிந்திருக்கிறது, என்றார் அவர், அதில் ஒரு "உட்பொருளின் ஓசை" உள்ளதாக நம்பினார். பேசும் குரலின் லயத்தால் அம்பலப்படுத்தப்படும் இந்த உட்பொருளின் வழியாகவே கவிதை மிக உக்கிரமான வகையில் தன் செய்தியைச் சொல்கிறது. "தன்னை எதுவேனும் ஆழத் தொட்டிருந்தாலும் அவன் பேசுவதைக் காட்டிலும் சிறப்பாக அவ்வளவு எளிதில் எந்த மனிதனும் எழுத மாட்டான்" என்று குறிப்பிடுகிறார் தாமஸ்.

30/7/11

தகவல் நேரம்

நேற்றோ அதற்கு முந்தைய நாளோ, நான் பார்க்காத நேரம் பார்த்து தனது ஆயிரமாவது ஹிட்டைப் பெற்றிருக்கிறது நம் நேசத்துக்குரிய பதினொன்றாம் பரிமாணம். அடி வாங்கிய தகவல்களை அவதானித்தால் இந்தியாவைவிட ஆஸ்திரேலிய வாசகர்களின் சிறப்பு கவனத்தை நாம் ஈர்த்திருக்கிறோம் என்ற உண்மை புலப்படுகிறது. மேலதிக தகவலாக அண்மைக்காலமாக உக்ரைனிய வாசகர்களும் நம் பதிவுகளைப் படிக்கத் தலைப்படுவது இந்த ப்ளாகின் சர்வதேச பார்வையை உறுதி செய்வதாகவும் உற்சாகமிளிப்பதாகவும் உள்ளது.

நண்பர்கள் பிச்சைக்காரன், சசரிரி கிரி ஆகியோரும் கணிசமான அளவில் வாசகர்களை நமக்குத் திரட்டித் தந்திருக்கின்றனர். அவர்களுக்கும் அடியேனின் மனமார்ந்த நன்றிகள்.

ஆஸ்திரேலிய மற்றும் உக்ரைனிய வாசக அன்பர்களுக்கு என் உளங்கனிந்த நன்றியறிவிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். நார்வே, பெரு மற்றும் போட்ஸ்வானா வாசகப் பெருமக்கள் விரைவில் நம் வழமையான வாசகர்களாவார்கள் என்ற என் உள்ளக் கிடக்கையையும் இந்த மகிழ்ச்சி மிகுந்த தருணத்தில் வெளிப்படுத்துகிறேன்.

வாழ்க தமிழ் இலக்கியம்! வளர்க தமிழ் இலக்கிய வாசகர் வட்டங்கள்!

இனி உங்கள் பார்வைக்கு மட்டும் நம் பெருமை பேசும் ஆதாரங்களாக சில ஸ்க்ரீன்ஷாட்கள்:





இதில் தேர்ந்தெடுத்த பதிவுகளை டிவிட்டரில் பகிர்ந்து கொண்ட டிவிட்டரரட்டையர்கள் திரு @rsgiri, மற்றும் திரு @vNattu ஆகிய இருவரையும் இத்தளத்தின் வாசகர்கள் தவறாமல் பின்தொடர வேண்டும் என்று மேலதிக நன்றியுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

29/7/11

இப்பதிவில் ஒரு முக்கியமான கட்டுரை விரிவாகப் பேசப்படும்

இந்த தளத்தின் நீண்ட நாள் வாசகர்களுக்கு ஜெஃப் டையர் புதியவரல்ல. அவர் ந்யூ யார்க் டைம்ஸில் தொடர்ந்து எழுதுகிறார் என்ற இனிய செய்தியைக் கொண்டாடும் வகையில் அங்கே அவரது முதல் கட்டுரை அறிமுகம்: இதிலிருந்து தேர்ந்தெடுத்த பத்தியைத் தருவது கடினம். ஏன் என்று அறிய படித்துப் பாருங்கள் - An Academic Author’s Unintentional Masterpiece

28/7/11

எழுத்தாளர்கள் விமரிசனம் செய்யலாமா?

எழுத்தாளர்கள் விமரிசகர்களாக இருக்கலாமா கூடாதா என்ற கேள்வியை விவாதிக்கும் ஒரு கட்டுரை இங்கே இருக்கிறது.

புலிட்ஸர் பரிசுக்கான தகுதிப் பட்டியலில் இடம் பெற்ற நாவலை எழுதியவரும் நியூஸ்வீக், நியூ யார்க் டைம்ஸ் போன்ற இதழ்களில் புத்தக மதிப்புரை எழுதுபவருமான டேவிட் கேட்ஸ் ஒருத்தரே இரண்டையும் செய்யலாம் என்று சொல்கிறார்-
"புனைகதை எழுபவர்- அதிலும், என்னைப் போல், புனைகதை எழுத்து பற்றி பாடம் எடுப்பவரால் இன்னொருத்தர் எழுதிய கதையில் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பதைப் பார்க்க முடியும். அவர் எடுத்த முடிவுகளைப் புரிந்து கொள்ள முடியும். எழுத்தாளர்களாக இல்லாதவர்களுக்குத் தெரியவே தெரியாத புனைகதையின் சிக்கல்களுக்கு கதையில் எவ்வளவு புத்திசாலித்தனமான தீர்வுகள் காணப்பட்டிருக்கின்றன, வானத்திலிருந்து ஆச்சரியமான விஷயம் வந்து விழுந்துவிட்டதுபோல் கதையை எழுதியவன் திகைத்த கணங்கள்- இவை இன்னொரு எழுத்தாளனுக்கே புலப்படும்,"
டைம் இதழின் தலைமை புத்தக மதிப்புரையாளராக இருந்த லெவ் க்ராஸ்மேன் வேறு விதமாக இதை அணுகுகிறார்- போலீஸ்காரன் திருடனாக மாறியபின் போலீஸ் வேலை செய்கிற மாதிரி இருக்கிறது எனக்கு நான் நாவல் எழுதிய பின் மற்றவர்கள் புனைவுகளை விமரிசனம் பண்ணுவது, என்கிறார் அவர்:
"புனைகதை எழுதுவது என்பதில் உன்னை அதை ரிவ்யூ செய்வதற்கு லாயக்கில்லாமல் செய்கிற ஏதோ ஒன்று இருக்கிறது. நீ ஒரு நாவலை எழுதும்போது புனைவு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற அந்த ஒரு தகதகக்கும் லட்சியமே கருத்தாக இருந்து கொண்டிருக்க வேண்டும். உன் ரசனையை வலியக் குறுக்கிக் கொள்கிறாய், நீ எழுதிக் கொண்டிருக்கும் அந்த ஒரு எதிர்காலப் படைப்பைத் தவிர மற்றவை அனைத்தும் காணாமல் போய் விடுகின்றன.

நாவலாசிரியனாக இருப்பதற்கு கர்வம் தேவைப்படுகிறது, ஆனால் நல்ல விமரிசகனாக இருக்க உனக்குத் தன்னடக்கம் வேண்டும்"
வாழ்க்கையில் எதுதான் கருப்பு வெள்ளையாக இருக்கிறது, சரி தப்பு என்ற நம் நம்பிக்கைகளைத் தவிர? இந்த விஷயத்திலும் சில நல்ல நாவலாசிரியர்கள் சில சமயம் நல்ல விமரிசனம் செய்கிறார்கள், சில நல்ல விமரிசகர்கள் சில சமயம் அபத்தமாக புனைவுகளைப் புரிந்து கொள்கிறார்கள் என்று சொல்லலாம்: ஆனால் தனிப்பட்ட முறையில் நான் க்ராஸ்மன் கட்சி: நீ புனைவுகளை எழுத முயன்று தோற்றுப் போய்கூட அவற்றின் வடிவ சிக்கல்களையும் மொழியாளுமையின் தேவைகளையும் புரிந்து கொள்ளலாம்: அதை உணர நீ வெற்றிகரமான எழுத்தாளனாக இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை.

23/7/11

நம் அனைவருக்கும் விதிக்கப்பட்ட கதி

கதை கவிதைகளில் எது நல்ல படைப்பு, ஏன் அது நல்ல படைப்பாகிறது என்பன குறித்த விவாதங்களுக்கு முடிவேயில்லை. அவை பெரும்பாலான சமயங்களில் காட்டமான சண்டையாகி உறவைக் குலைக்கிறது. இலக்கிய விவாதம் செய்பவர்களுக்கு நீண்ட கால நண்பர்கள் இருந்தால் ஆச்சரியம்தான். அப்படிப்பட்டவர்களுக்கு அபார சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்.

கம்யூனிச ரஷ்யாவில் சகிப்புத்தன்மையை எதிர்பார்த்திருக்க முடியாது. இருந்தாலும் இந்த கடிதத்தின் ஒரு பத்தியைப் பாருங்களேன், ஏன் நாம் இந்த மாதிரியான விஷயங்களில் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெளிவாக சொல்கிறார்:

ரஷ்யாவை விட்டு வெளியேறுவது எனக்கு கசப்பாக இருக்கிறது. நான் இங்கேதான் பிறந்தேன், இங்கேதான் வளர்ந்தேன், இங்கேதான் வாழ்ந்தேன், எனது ஆன்மாவில் உள்ளவையனைத்துக்கும் நான் ரஷ்யாவுக்கே கடன்பட்டிருக்கிறேன். ரஷ்யாவின் குடிமகனாக இருப்பதை நிறுத்தியதும் நான் ரஷ்ய கவிஞனாக இருப்பதை நிறுத்திவிடப் போவதில்லை. நான் திரும்புவேன் என்று நம்புகிறேன்; கவிஞர்கள் எப்போதும் திரும்பி வருகிறார்கள்- உயிரோடோ காகிதத்திலோ... நம் அனைவருக்கும் விதிக்கப்பட்டிருக்கும் கதி ஒன்றே- மரணம். இந்த வாக்கியங்களை எழுதிக் கொண்டிருக்கும் நான் இறப்பேன், இவற்றைப் படிக்கும் நீங்களும் இறக்கவே செய்வீர்கள். நமது ஆக்கங்களே எஞ்சியிருக்கும், அவையும் என்றும் இருக்கப் போவதில்லை. அதனால்தான் எவரொருவர் மேற்கொண்ட காரியத்திலும் மற்றவர்கள் குறுக்கிடக் கூடாது.
ரஷ்யாவை விட்டு வெளியேறுமுன் இதை எழுதியவர் ஜோசப் ப்ராட்ஸ்கி. இந்தக் கடிதம் பிரஷ்னேவுக்கு எழுதப்பட்டது.

தகவலுக்கு நன்றி- பேக் இஷ்யூஸ்

22/7/11

மொழியாக்கம் செய்வது எப்படி?

அருணவ சின்கா வங்காளத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பவர். இவரது மொழியாக்கங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அரங்கிலும் கவனம் பெற்றுள்ளன. மொழி பெயர்ப்பு கலை குறித்து அவரது பத்து குறிப்புகள் இங்கே:

மூல நூலைப் படிப்பது மட்டும் போதாது, உன் தலைக்குள் கேட்கும் குரலை கவனிக்க வேண்டும்.
முதல் வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப திருத்தி எழுது- நீ அந்த குரலைப் பிடித்து விட்டாய் என்ற திருப்தி கிடைக்கும் வரை.
எழுத்தாளரின் குரல் பிடிபட்டதும் முதல் வரைவு வடிவத்தை விரைவாக முடித்து விடு- அந்தக் குரல் வெகு நேரம் தங்காது.
ஃப்ளோவில் இருக்கும்போது மூல நூலில் உள்ள கடினமாக பகுதிகளுக்கு விடை காண மொழியாக்கத்தை நிறுத்தி யோசிக்காதே; மூல மொழியில் உள்ளபடியே வைத்து விட்டு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று காரியத்தை கவனி.
முதல் வரைவு வடிவத்தில் மூல நூலில் உள்ளதை அப்படியே மொழிபெயர்க்க வேண்டும். மேற்பரப்பில் உள்ளதை அப்படியே பிரதி எடுக்க வேண்டும். எடிட்டராக இருக்காதே.
தேவைப்பட்டால் முதல் மொழிபெயர்ப்பின் சொலவடைகளை அப்படியே உன் மொழிக்கு மாற்றிக் கொள், எதையும் விட்டு விடக் கூடாது.
முதலில் செய்த மொழி பெயர்ப்பைத் திருத்தும்போது மூல நூலில் உள்ளதைப் பார்க்காதே, இப்போது நீ மொழிபெயர்க்கும் மொழியில் முதல் முறை எழுதுவதைப் போல் திருத்தி எழுது.
மூல நூலில் விளக்கப்படாமலும் குழப்பமாகவும் உள்ள பகுதிகளைக் காப்பாற்று. அவற்றுக்கு விளக்கம் கொடுக்காதே.
திருத்திய மொழிபெயர்ப்பை சில மாதங்கள் ஆறப் போடு. சற்று இடைவெளி தந்துவிட்டு அதைத் திரும்ப எடு.
இறுதி வடிவம் வரும்வரை உன்னிப்பாய் கவனிக்கும் காதலனாக இரு. அனைத்தையும் விசாரி. போற்றி மகிழவும், கோபப்படவும், வருத்தப்படவும், மொழிபெயர்ப்பின் வழியாக மூல நூலைத் திரும்பக் காதலிக்கவும் தேவையான அவகாசம் எடுத்துக் கொள்.

புத்தக விமரிசனத்தின் பொன் விதிகள்


A thing of beauty is a joy for ever:
Its loveliness increases; it will never
Pass into nothingness; but still will keep
A bower quiet for us, and a sleep
Full of sweet dreams, and health, and quiet breathing...

விமரிசகர்கள் தங்களால் விமரிசிக்கப்படும் புத்தகங்களைப் படிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது முன்வைக்கப்படுகிறது. இந்தப் புத்தகத்தின் விஷயத்தில் புத்தகாசிரியரின் குற்றச்சாட்டை நாம் முன்கூட்டியே ஏற்றுக் கொள்கிறோம், அவரது படைப்பை நாம் படிக்கவில்லை என்ற உண்மையை நேர்மையாக ஒப்புக் கொள்கிறோம். நாம் எம் கடமையை விரும்பித் தவறினோம் என்று சொல்வதற்கில்லை- உண்மை அதற்கு மாறான ஒன்று- இந்தக் கதையை முழுதாகப் படிக்க அமானுட பிரயத்தனப்பட்டோம். கதையே அமானுடமான ஒன்றுதான், ஆனால் எம்மாலானவை அவ்வளவும் முயன்றும், இந்த ரொமாண்டிக் கவிதையின் நான்கு பாகங்களில் முதலாம் ஒன்றைத் தாண்டி மேற்செல்ல முடியவில்லை. எமக்கு அந்த ஆற்றல் இல்லை என்ற குறை, ஆற்றலின்மையோ அல்லது வேறெந்த குறையோ, எதுவாக இருப்பினும் எம் குறை எமக்கு மிகுந்த துயர் தருவதாக உள்ளது, அத்துயருக்கு ஆறுதலாய் ஒரே ஒரு விஷயத்தைதான் சுட்ட முடியும்- நாம் இன்னமும் பார்த்திராத அந்த மூன்று பாகங்களில் என்ன இருக்கிறது என்பதைக் குறித்து எவ்வளவுக்கு அறியாமலிருக்கிறோமோ, அவ்வளவுக்கே படிக்க முயன்று படுதோல்வியடைந்த இந்த முதல் பாகம் என்ன சொல்ல வருகிறது என்பதைக் குறித்தும் படித்துப் பார்த்து அறிந்திருக்கிறோம்.
ஸ்லேட்டில் இந்த மேற்கோளைப் படித்தேன். நடை மிகவும் பழசாக இருக்கிறதா?-  இது 1818ல் ஜான் வில்சன் க்ரோக்கர் என்பவரால் என்டைமியான் என்ற படைப்பைக் குறித்து எழுதப்பட்டது.

நம்மை யாரும் குற்றம் சொல்ல முடியாது!

"எழுத்தாளர்களின் நூல்கள் வாசிக்கப்பட்டு அந்நூல்களின் சாரமாக அமையும் வரிகள் மேற்கோளாக முன்வைக்கப்பட்டால் மட்டுமே அவை உண்மையில் சிந்தனைகளைத் தூண்டும். நீர்ப்பாசியைக் கொக்கி போட்டு அள்ளக் குளம்முழுக்க அசைந்து வருவதுபோல அந்த மேற்கோள் அந்த மொத்த சிந்தனையாளனையே நம்மை நோக்கிக் கொண்டுவரும். 
மேல்நாட்டுச் சிந்தனையாளர்கள் பலர் மேற்கோள்கள் மூலமே பெரும்பாதிப்பை செலுத்தியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் எமர்ஸன், எலியட் போன்றவர்கள்..."
மேலும் இது:
சரியான ஓர் மேற்கோள் வழியாக ஒரு நல்ல ஆசிரியனை நாம் சட்டென்று இன்னொருவருக்கு அறிமுகம்செய்து வைக்கமுடியும் என்பதைக் காணலாம். அவ்வாறுதான் இலக்கியவாதிகள் பரவிச்செல்கிறார்கள்...
- படைப்பாளிகளின் மேற்கோள்கள்

21/7/11

குரலைப் பற்றி சில குறிப்புகள்

நினைவே W.G. Sebaldன் தவிர்க்க முடியாத கருப்பொருளாக இருக்கிறது: தேசங்களுக்கும் தனி மனிதர்களுக்கும் நினைவோடு வாழ்வது எப்படிப்பட்ட வலியாக இருக்கிறதென்றும் நினைவின்றி வாழ்வது எப்படிப்பட்ட ஆபத்தாக இருக்கிறதென்றும் எழுதுகிறார். அவரது புத்தகங்களின் கதை சொல்லிகள் தொடர்ந்து நினைவுறுத்திக் கொள்ளும் நிலையிலேயே வாழ்கிறார்கள்- Austerlitzன் கதைசொல்லியும் "The Emigrants"ன் அயல்வாழ்வின் நான்கு இணை கதையாடல்களும் கவனத்தை மிகவும் ஈர்ப்பனவாக உள்ளன. அனைத்தும் வேறொன்றாக உருமாறுகின்றன: இடங்களும், நபர்களும், அவர்களுடைய கதைகளும் அனுபவங்களும், இவையனைத்தையும்விட வெவ்வேறு காலங்கள் ஒன்றிலொன்று கசிந்து தங்கள் அடையாளங்களை இழக்கின்றன- பெரும்பாலும் நீண்ட, வேரற்ற பிறர் கூற்றை விவரிக்கும் பத்திகளில் இப்படி நேர்கிறது. "Vertigo"வின் கதைசொல்லி இந்த உத்தியின் சுருக்கமான விளக்கம் தருகிறார்: "வெகு தொலைவில் இருந்தாலும் ஒத்த இயல்பு கொண்ட நிகழ்வுகளுக்கிடையான இணைப்பை அறிதல்"
- டபிள்யு. ஜி. செபால்ட்

பட்டப்படிப்பை முடித்ததும் தான் கல்லூரியில் கட்டுரைகளை எழுதிய வடிவம் சரியான எழுத்தல்ல என்று Naipaul முடிவு செய்தார். திரும்பவும் எழுதிப் பழகத் துவங்கினார். இம்முறை எளிய, நேரடியான தகவல்களை மட்டுமே தன் எழுத்தில் பயன்படுத்தினார். ""மதில் மேல் இருந்தது பூனை" என்பது போன்ற வாக்கியங்களைத்தான் ஏறத்தாழ எழுதத் துவங்கினேன்". மூன்று ஆண்டுகள் இந்த விதியைக் கடைபிடித்தார். அண்மையில் ஒரு இந்திய செய்தித்தாளின் வேண்டுகோளுக்கேற்ப அவர் துவக்க எழுத்தாளர்களுக்கு ஏழு விதிகளைப் பட்டியலிட்டார்:

  1. பத்து முதல் பன்னிரெண்டு சொற்களைத் தாண்டாத வாக்கியங்களை எழுது.
  2. ஒவ்வொரு வாக்கியமும் ஒரு விஷயத்தைத் தெளிவாக சொல்லட்டும் (இப்படித் தொடரும் வாக்கியங்களாலானது ஒரு பத்தி)
  3. சிறிய சொற்களைப் பயன்படுத்து - உன் சொற்களில் சராசரியாக ஐந்து எழுத்துக்கள் இருக்கட்டும்.
  4. உனக்குப் பொருள் தெரியாத வார்த்தையைப் பயன்படுத்தாதே
  5. உரிச்சொற்களைத் தவிர்த்துவிடு- வண்ணம், அளவு, எண் இவற்றுக்கான உரிச்சொற்களை மட்டும் கையாள வேண்டும் (adjectives)
  6. உணர்வுகளால் அறியக்கூடிய விஷயங்களைச் சுட்டும் சொற்களைப் பயன்படுத்து, பொதுப்படையான, அருவ விஷயங்களைப் பேசாதே
  7. இந்த ஆறு விதிகளையும் ஆறு மாதங்கள் தினமும் தொடர்ந்து பழகு.

- நைபால்

விறுவிறுப்பாக எழுதுவதே Greeneன் சிறப்பு. த்ரில்லர், துப்பறியும் கதை போன்றவற்றை கிரீன் கேவலமாக நினைப்பதில்லை. தன் நாவல்களை "பொழுதுபோக்குகள்" என்று வகைப்படுத்தி தன் அத்தியாயங்களை அடுத்தது என்ன என்று நினைக்கும்படி முடிக்க அவர் அஞ்சவில்லை, இதை வர்ஜினியா வுல்பால் ஏற்றுக்கொண்டிருக்கவே முடியாது. ஸ்பெக்டேட்டரில் சினிமா விமரிசகராக இருந்த அனுபவத்தைப் பயன்படுத்தி திரைப்படங்களின் காலத்துக்குரிய இறுக்கத்துடன் நாடகீய மற்றும் நகைச்சுவை கதை சொல்லலை அவர் இணைத்து எழுதுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மாபெரும் நாவல்கள் முடிவில்லாமல் நீண்டன என்றால் க்ரீனின் ஆற்றல் அவரது சுருங்கச் சொல்லும் திறனில் இருக்கிறது- தன் நாவல்களை எண்பதாயிரம் வார்த்தைகளில் முடித்தார். நீங்கள் அவற்றை ஒரே அமர்வில் படித்துப் புரிந்து கொண்டுவிட முடியும். இது நாடகங்களின் ஒருங்கிணைந்த தன்மையை நாவல்களில் திரும்பப் பெறுகிறது. அவர் தன் தினப்படி லட்சியமான ஐநூறு சொற்களை எழுதி முடித்ததும் நிறுத்தி விடுவார் - வாக்கியத்தின் மத்தியிலும் கூட.
- க்ரஹாம் கிரீன்.

ஆங்கில இலக்கியத்தின் சில முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் மோர் இன்டல்லிஜண்ட் லைப்பில் இருக்கிறது. அறிமுகம் செய்பவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல.

இத்தொடர் இங்கே இருக்கிறது.



19/7/11

வாசிப்பின் மரணம்

எழுத்தின் மரணம் அது தவறாகப் புரிந்து கொள்ளப்படும்போது நிகழ்கிறதென்றால், வாசிப்பின் மரணம் சில துரதிருஷ்டமான கணங்களில் தன் வாசகனால் ஒரு எழுத்தாளன் புரிந்து கொள்ளப்படும்போது நிகழ்கிறது. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இன்று என் நண்பர் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரின் பெயரைச் சொல்லி தனி வாழ்வில் அவர் இன்னொரு எழுத்தாளரைவிட மோசமானவர் என்றார். "இது தெரிந்து எனக்கு என்ன ஆகப் போகிறது?"," என்று நினைத்துக் கொண்டேன். அவரை நான் என் வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்ப்பதற்கும் வாய்ப்பில்லாத நிலையில் எங்களுக்குள் எந்த கொடுக்கல் வாங்கலும் நிகழப்போவதில்லை- அவரது தனிப்பட்ட வாழ்வில் அவருக்கு இருக்கக்கூடும் குறைகளை நான் அறிந்து கொள்வது அவரது புனைவுகளிலிருந்து என்னைப் பாதுகாக்கும் என்று நண்பர் நினைத்திருக்கலாம். ஆனால் எனக்கு அத்தகைய தடுப்பரண்களில் ஆர்வமில்லை.

எழுத்துக் கலை குறித்து எட்டு எகிப்திய எழுத்தாளர்களின் குறிப்புகள்

பிரமாதமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது, இருந்தாலும் மீண்டும் துவங்குவதானால் எங்கிருந்தாவது துவங்க வேண்டுமே- எப்படி எழுதுவது என்று சொல்லித் தருகிறார்கள் எட்டு எகிப்திய எழுத்தாளர்கள்:

8 Egyptian novelists share their ‘rules’ for writing | Al-Masry Al-Youm: Today's News from Egypt

இவர்களில் மிரால் அல் தகாவி சொல்கிறார்:


  • எழுத்து ஒரு கனவு. உருகியோடும் சக்தி- உன் நினைவை நீங்குமுன் அதைப் பற்றிக் கொள்ள முயற்சி செய்.
  • எழுத்து ஒரு எளிய காதல்- நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பவர்களிடம் அது விசுவாசமாக இருக்கிறது, புகழையும் பணத்தையும் தேடுபவர்களிடமல்ல.
  • எண்ணங்கள் அனைத்தும் முட்டாள்தனமானவை, நம்ப முடியாதவை, இரவல் வாங்கப்பட்டவை, துவங்கத் தகுதியற்றவை- நீ அவற்றை எழுதுவதன் முன் அப்படித்தான் தோன்றும்.
  • சொல்ல வந்த எண்ணம் நிறைவு பெறவில்லை என்று ஒத்திப் போடப்படும் எழுத்து முழுமை பெறாது- மறைந்தே போகும்.
  • எழுதத் துவங்கிய எதையும் முடிக்காமல் கைவிடாதே- கைவிடப்பட்டபின் அது உன்னிடம் திரும்பாது.
  • எழுத்து பதிப்பாகும். ஆனால் பதிப்பித்தல் ஒரு எழுத்தாளனை உருவாக்குவதில்லை. நிறைய எழுது. அது பதிப்பிக்கப்படுமா என்பதைப் பற்றி கவலைப்படாதே.

11/7/11

புத்தக மதிப்புரைகள்

ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கான ப்ளாக்கர்கள் புத்தக மதிப்புரை செய்கிறார்கள். இவர்களில் பலர் நூலகர்கள். இன்னும் சிலர் தேர்ந்த வாசகர்கள். பலர் அமேசான் போன்ற தளங்களின் பயனர்கள். எப்படி பார்த்தாலும் ஆங்கிலத்தில் புத்தகங்கள் சார்ந்த வலையுலகம் மிக ஆரோக்கியமாகவே இருக்கிறது.

இந்த ப்ளாக் அப்படிப்பட்ட ஒன்று- அதன் சிறப்பான வடிவமைப்புக்காகவே சுட்டியைத் தருகிறேன். இவர் தன் மதிப்புரைகளை எழுதி பதிப்பிப்பதைக் காட்டிலும் அவற்றை வகை பிரித்து, தேவையான சுட்டிகளை சேகரித்துத் தருவதற்கே அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார் என்று நினைக்கிறேன்.

Book Reviews by Danny Yee (fiction + nonfiction)

10/7/11

யோக்கியமான முயற்சிகள்

யோக்கியமான முயற்சிகள்

சுஜாதா தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகளுள் பதினெட்டை மட்டும் தொகுத்து ஒரு புத்தகம் பதிப்பித்துள்ளார். அதன் முன்னுரையில் அவர் எழுதியிருப்பது பால்ஹனுமான் ப்ளாகில் இருக்கிறது:

"நான் பார்ப்பதையும் உணர்வதையும் என்னால் இயன்ற அளவுக்கு எளிமையாகவும் சிறப்பாகவும் சொல்வதுதான் என் குறிக்கோள்!" என்று எர்னஸ்ட் ஹெமிங்க்வே ( Ernest Hemingway) சொன்னதுடன் எனக்கு சம்மதம். ”ஒரு எழுத்தாளன் கடவுள், அவநம்பிக்கை போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயலக் கூடாது. அவன் தொழில் கடவுளைப் பற்றியும் அவநம்பிக்கைகளைப் பற்றியும் நினைப்பவர்களை வர்ணிப்பது என்று செக்காவ் ( Chekov) ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார். அவரே மற்றொரு கடிதத்தில் “பிரச்னைக்குத் தீர்வு காண்பதையும் பிரச்னை என்ன என்று சொல்வதையும் குழப்பாதே; ஒரு கலைஞனுக்குப் பின்னதுதான் கட்டாயமானது” என்கிறார்.

இந்தப் பதினெட்டு கதைகள் எவற்றிலும் நான் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயலவில்லை. பிரச்னைகளை ஒழுங்காக விவரிப்பதில்தான் — சொல்லுவதில்தான் அக்கறை காட்டியுள்ளேன். இயன்ற அளவுக்கு எளிதாகவும், சிறப்பாகவும் என்னால் கவனிக்க முடிகிறது. காட்சிகளை வித்தியாசமாகப் பார்க்க முடிகிறது. அதைத் தமிழில் எழுத முடிகிறது. இந்த மூன்று தகுதிகளையுமே நான் முழுமையாகப் பெற்றிருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். பெற்றுவிட்டால் எழுதுவது எல்லாமே சிறந்ததாக இருக்க வேண்டும். இல்லை. இவை சிறந்த கதைகள் இல்லை. சிறந்த கதைகளை நோக்கிய என் யோக்கியமான முயற்சிகளின் அத்தாட்சிகள்..."

மிகவும் ரசித்துப் படித்த பதிவு.

பால்ஹனுமான் ப்ளாகுக்கு என் நன்றிகள்.

நாற்காலி

நான் விரும்பிப் படிக்கும் வலைதளங்களில் ஒன்று லாங்குவேஜ் லாக். அங்கு ஒரு குறிப்பிட்ட சொல் கிளைத்துக் கிளம்பி வேரில் வேறு வடிவில் திரும்பச் சேர்வதைப் பற்றி எழுதியிருந்தார்கள், படித்துப் பாருங்கள் கங்காரு!

அங்கு எழுதியிருக்கும் விஷயத்தை சுருக்கமாக சொல்கிறேன்.

ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகளிடையே பொது மொழி கிடையாதாம். ஒவ்வொருத்தர் கங்காருவை ஒவ்வொரு பெயரில் அழைத்து வந்தார்கள். வெள்ளைக்காரர்கள் முதல் முறையாக ஆஸ்திரேலியா சென்றபோது அங்கே ஒரு கங்காருவைக் கண்டுபிடித்ததும் உள்ளூரில் இருந்த ஒருவரை அழைத்து அது என்ன என்று விசாரித்திருக்கிறார்கள். கூகூ யிமிதிர் என்ற பழங்குடியைச் சேர்ந்த அந்த நபர், அதுதான் கங்காரு என்று சொல்லியிருக்கிறார். அதன்பின் வெள்ளைக்காரர்கள் ஆஸ்திரேலியாவெங்கும் பரவுகையில் கங்காரு என்ற பெயரும் மற்ற பழங்குடியினரிடையே நிலைபெற்றது, சில குழப்பங்களுடன்.

நம் ஊரில் ஹாமில்டன் பாலம் அம்பட்டன் பாலமானது போல், சில பழங்குடியினர் இந்த சொல்லைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர். உதாரணத்துக்கு க்வையேகல் என்ற பழங்குடியினர் கங்காரு என்றால் பெரிய உருவம் என்று நினைத்துக் கொண்டு வெள்ளைக்காரர்களிடம் ஆடு மாட்டையெல்லாம் கங்காரு என்று அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். அப்புறம் புரிந்து கொண்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால், கூகூ யிமிதிர்கள் பத்து வகை கங்காரு பெயர்களை வைத்திருந்தார்களாம். அந்த வெள்ளைக்காரர் ஒரு பெரிய கருப்பு நிற கங்காருவைக காட்டி இது என்ன என்று கேட்டதால் அவர் அது ஒரு கங்காரு என்று சொல்லியிருக்கிறார், அது அப்புறம் அத்தனை கங்காருக்களுக்கும் பொதுப் பெயராகிவிட்டிருக்கிறது. அதே அவர் ஒரு சிறிய சிவப்பு கங்காருவைக் காட்டி இது என்ன என்று கேட்டிருந்தால் அந்த கூகூ யிமிதியர், அதுவா, அது ஒரு நாற்காலி (nharrgali) என்று சொல்லியிருப்பாராம்!

அதன்பின் அந்த க்வையேகல் மக்கள் ஆடு மாடுகளையெல்லாம் நாற்காலிகள் என்று சரியாக சொல்லியிருப்பார்கள் என்ற சேதியை விடுங்கள், நாமெல்லாரும் ஆஸ்திரேலியர்களை கங்காருக்கள் என்று அழைக்காமல் நாற்காலிகள் என்று இன்று அழைத்துக் கொண்டிருப்போம்!

எதிர்பாராத விபத்துகள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன பார்த்தீர்களா?

(இதை ஏன் இங்கு எழுதுகிறேன் என்று பார்க்கிறீர்களா, அதுதான் ஹெட்டரில் போட்டிருக்கிறதே, "புனைவின் வேர்கள் நினைவில், நினைவின் வேர்கள் புனைவில்"!)

9/7/11

ஆன்டன் செகாவ் - சில நினைவுகள்.


ஒரு நண்பர், எல்லாரும்தான் எல்லாமும் எழுதுகிறார்கள், ஆனால் எதை எவ்வளவு நுட்பமாக எழுதுகிறார்கள் என்பதுதான் ஒரு இலக்கியவாதியை சாதாரண எழுத்தாளரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது, இல்லையா, என்று கேட்டார்.  இருக்கலாம்.

ஆனானப்பட்ட செகாவ் பற்றியே டால்ஸ்டாய்க்கு அவ்வளவு பெரிய அபிப்பிராயம் இருக்கவில்லை என்று படித்தேன், ஆச்சரியமாக இருக்கிறது.

2/7/11

பேனாக்கள் வண்ணத் தூரிகைகளா கில்லட்டின் கத்திகளா? - இந்தா பிடி சாபம்!

(10.7.2011 தேதியிட்ட பிற்குறிப்பு:

இந்தப் பதிவுக்கான அவசியமே இப்போது கேள்விக்குறியாகப் போய் விட்டது. திரு ஆர்வி தன் தளத்தில் "சுஜாதாவின் மூன்று முகங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரது இடமும்" என்ற தலைப்பில் ஒரு அருமையான கட்டுரையை எழுதி நம் பதிவின் காரணங்களைச் சாய்த்து விட்டார். எப்போதும் ஒருத்தர் நம் கணிப்பில் உயரும்போது நமக்கு நம் அறியாமை மற்றும் சிறுமை குறித்து வருத்தமே எழும். அந்த வருத்தத்துடன், ஆனால் நல்ல ஒரு விமரிசனத்தைப் படித்த மகிழ்ச்சியுடன் ஆர்வி அவர்களிடம் இந்தக் கட்டுரையில் ஆங்காங்கே காணப்படும் உரத்த, தடித்த குரலுக்கு மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் இதற்கு முந்தைய பதிவுகளில் சுஜாதாவின் புத்தகங்கள் குறித்து எழுதிய குறிப்புகள் போலல்லாமல் இந்தக் கட்டுரையில் சுஜாதாவையும் ஒரு எழுத்தாளராக மதித்து, ஒரு எழுத்தாளரின் படைப்புகளை அணுகுவதற்கான விமரிசன முறைகளைக் கையாண்டிருக்கிறார் ஆர்வி. ஒரு கட்டுரையாகவே அது தனித்து நிற்கக்கூடிய அளவில் சிறப்பானதாக இருக்கிறது. அதைப் படித்தல் நலம். காலாவதியான இந்தப் பதிவைப் பார்க்க வந்தமைக்கு நன்றி. பின் வருவன இதற்கு முன் 2.7.2011 அன்று எழுதியவை)



20/6/11

களமில்லா கதைகள்

இந்தக் கட்டுரையை நீங்கள் ஆங்கிலத்தில்தான் படித்து மகிழ வேண்டும், மிக நன்றாக எழுதியிருக்கிறார்-

The Millions : On Not Going Out of the House: Thoughts About Plotlessness

கதை என்று சொன்னால் அதில் குறைந்தபட்சம் துவக்கம் என்று ஒன்றும் முடிவு என்று ஒன்றும் இருக்க வேண்டாமா? இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வெளியில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை என்று வைத்துக் கொள்ளலாம். களமில்லா கதைகள் என்று நாம் சொல்லும்போது இப்படி எதுவும் நடக்காத கதைகளைப் பற்றிப் பேசலாம். இதைத்தான் இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

1790ல் Xavier de Maistre என்பவர் எழுதிய Voyage Around My Room என்ற நாவல், வீட்டுக்காவலில் இருப்பவனின் மன ஓட்டத்தைத் தொடர்கிறது.
காதல் தோல்வியாலும் நண்பர்கள் கைவிட்டதாலும் தனி அறையில் அடைந்து கிடப்பவர்களே, என்னோடு வாருங்கள், சக மனிதனின் அற்பத்தனத்தையும் துரோகத்தையும் விட்டு தொலைதூரம் செல்வோம். துக்கப்படுவோரே, நலம் குன்றியோரே, அலுப்பில் இருப்போரே, என்னோடு வாருங்கள்- உலகின் சோம்பேறிகள் அனைவரும் ஒரு பெரிய கூட்டமாக எழுச்சி கொள்ளுங்கள்;- புரட்சி எண்ணங்களில் படுபயங்கர சதித் திட்டங்கள் தீட்டி மூளையை கசக்கிக் கொண்டிருப்பவனே, உலகைத் துறந்து நல்வாழ்வு வாழ உன் ஓய்வறையில் ஆலோசனை நடத்திக் கொண்டிருப்போனே, மாலைப் பொழுதின் துறவிகளே-............... என்னோடு பயணம் வாருங்கள், நாம் சின்னஞ்சிறு பயணங்கள் மேற்கொள்வோம், ரோமையும் பாரிஸையும் பார்த்த பயணிகளைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரித்தபடி நாம் பயணிப்போம்- நமக்குத் தடைகள் இல்லை; மனம்போன போக்கில் சந்தோஷமாக அது நம்மைக் கூட்டிச் செல்லும் இடமெங்கும் செல்வோம்...
ஆனால் இந்த மனம் போகிற போக்கு இருக்கிறதே, இதுதான் பிரச்சினை. மனம் ஓயறு இட்டுக் கட்டும் கருவி. அடுத்தடுத்து நான்கு ஓவியங்களை பக்கத்தில் பக்கத்தில் வைத்துப் பார்த்தால், அவற்றை ஒன்றாக இணைக்க ஒரு கதை செய்து விடுவதே மனதின் இயல்பு. களமில்லா கதை சொல்பவன் மனம் போகும் போக்கைத் தவிர்க்க வேண்டும், இல்லையா?

கட்டுரையில் கொஞ்சாரவ் என்பவர் எழுதிய ஒப்லமோவ் என்ற பாத்திரம்- இவனும் அறையில் அடைந்து கிடக்கிறான், இதில் இப்படி வருகிறதாம்-
வரலாற்றைப் படிப்பது மனிதனை துயரத்தில் ஆழ்த்துகிறது. இன்ன இன்ன ஆண்டில் இப்படிப்பட்ட துயரச் சம்பவங்கள் நிகழ்ந்தன, மனிதன் துன்பப்பட்டான் என்று நீ படிக்கிறாய். அவன் தன் ஆற்றல்கள் அனைத்தையும் திரட்டினான், வேலை செய்தான், இங்கு அங்கும் போனான், கஷ்டப்பட்டு உழைத்து, பிரகாசமான நாட்களை எப்போதும் எதிர்பார்த்திருந்தான். அந்த நாள்தான் வந்துவிட்டதே, வரலாறு ஓய்வெடுத்துக் கொள்ளும் என்று நீ நினைப்பாய். அதுதான் இல்லை, மேகங்கள் சூழ்கின்றன, கட்டிடம் இடிந்து விழுகிறது, மீண்டும் உழைப்பும் அலைச்சலும், பிரகாசமான நாட்கள் நீடிப்பதில்லை; அவை விரைந்து சென்று விடுகின்றன- வாழ்க்கை பெருக்கெடுத்து ஓடுகிறது, எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது, தன் பாதையில் உள்ள அனைத்தையும் உடைத்துத் தள்ளிக் கொண்டு"
இதை ஒரு காரணமாக சொல்லிக்கொண்டு இந்த நாவலின் நாயகன் தன் வீட்டில் அடைந்து கிடக்கிறான். நண்பர்கள் வருகிறார்கள் போகிறார்கள், காதல்கள் ஜெயிக்கின்றன தோற்கின்றன, புரட்சிகள் வெடித்து அடங்குகின்றன- இதெல்லாம் எதற்கு என்று தன் தனியறையில் இவற்றால் தொடப்படாமல் இருக்கிறான் ஒப்லமோவ். ஆனால் அப்படி இருக்க முடியுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. என்னதான் தனித்திருந்தாலும், ஒரு கோர்வையாய் காலத்தின் பாதையில் ஒரு கதையாடலைக் கட்டுவிப்பது வெகு தீவிரமான உந்துதல்.

பாருங்கள், நாம் கூட களமில்லா கதைகள் என்று சொன்னாலும், இந்தக் கதைகள் என்ன சொல்கின்றன என்பதைப் பேசுகிறோம்!

ஒரு சில நாவல்களை எடுத்து விவாதித்திருக்கிறார், கட்டுரையை எழுதியவர். களமில்லா கதைகள் என்று சொல்வது கொஞ்சம் மிகை, வீட்டுக்குள் கிடத்தல், வெளியே போகாதிருத்தல் என்ற வகைப்பாட்டில் வேண்டுமானால் இவர் குறிப்பிடும் கதைகள் வரலாம்.

களமில்லா கதைகளே வேறு.

9/6/11

தகவலுக்காக- டால்ஸ்டாய்

தகவலுக்காக-

மேலை நாட்டு விமரிசகர்களில் முதன்மையானவர்களின் ஒருவரான ஹரோல்ட் ப்ளூம், டால்ஸ்தாயின் "ஹாஜி மூரத்" என்ற புதினத்தை மிக உயர்ந்ததாகக் கருதியிருக்கிறார் என்பதைக் குறித்து வைத்துக் கொள்கிறேன்.

"உரைநடைப் புதின வடிவத்தின் நுட்பத்துக்கு என் தனிப்பட்ட உரைகல்லாக இருக்கிறது. எனக்கு இது உலகின் சிறந்த கதையாக உள்ளது- குறைந்தபட்சம், நான் படித்ததில் சிறந்தது என்றாவது சொல்லியாக வேண்டும்," என்று எழுதியிருக்கிறாராம் ப்ளூம்.

7/6/11

நாவல்கள்- காலப் பயணம்

வழக்கமாக இங்கே சிறுகதைகளைப் பற்றிதான் எழுதுவது- அவ்வப்போது கவிதை- எப்போதாவது நாவல் என்று இருக்கிறது. ஆனால் இன்று படித்த ஒரு விஷயம் மிகவும் சுவையாக இருக்கிறது. முடிந்தால் முழு கட்டுரையையும் இங்கே படித்துப் பாருங்கள். சமகால நாவல்களை எழுதுவது சாத்தியமா என்ற கேள்வியை விவாதிக்கிறார் க்ரஹாம் ஸ்விப்ட் (Graham swift).

"நாம் கடந்த காலத்தில் எழுதப்பட்ட நாவல்களைப் படிக்கும்போது அவை அவர்களுக்கு சமகாலத்தில் இருந்த உலகைக் குறித்து எழுதப்பட்டதாக நாம் நினைத்துக் கொள்ளக் கூடும்- டிக்கன்ஸின் டிக்கன்ஸியம் அவர் தன் சமகால நிகழ்வுகளோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பதில் சார்ந்திருக்கிறது என்று நினைக்கிறோம். உண்மையைச் சொல்வதானால், அவரது நாவல்கள் பெரும்பாலும் ஒரு பத்தாண்டு அல்லது அதைவிட அதிக காலம் பின்நோக்கிப் பார்க்கின்றன. டால்ஸ்தாயின் போரும் அமைதியும் ஆயிரத்து எண்ணூற்று அறுபதுகளில் எழுதப்பட்டது, ஆனால் கதைக்களம் நெப்போலிய யுத்தகாலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. போர் தனது கருக்களில் ஒன்றாக இருந்ததால், டால்ஸ்டாய் ஆயிரத்து எண்ணூற்று ஐம்பதுகளின் மத்தியில் நிகழ்ந்த க்ரிமிய போரைப் பற்றி எழுதியிருக்கலாம். அது அவரது நேரடி அனுபவமாகவுமிருந்தது. க்ரிமியா பற்றி அவரது செபஸ்டபோல் என்ற புத்தகத்தில் அவர் எழுதவும் செய்தார், ஆனால் அது ஒரு அற்புதமான செய்தித் தொகுப்பு. டால்ஸ்டாய் இறக்கும்போது ப்ரௌஸ்ட் ஒரு நாவல் தொடரைத் துவங்கிக் கொண்டிருந்தார்... அதை அவர் தன் வாழ்நாள் முழுதும் தொடர்ந்தார், எனவே அதில் நிகழ்காலம் என்பதே இருப்பதற்கில்லை. அந்த நாவிளின் பெயரே நாவல் ஒரு வடிவம் என்ற வகையில் எதைக் குறித்து தன்னியல்புகலில் ஒன்றாய் இருக்கக்கூடும் என்பதைச் சொல்கிறது- காலத்தின் ஓட்டம்...

நாவல்கள் காலம் செல்வதைப் பேசுகின்றன என்று சொல்கிறார் ஸ்விப்ட். யோசித்துப் பார்த்தால் அதுவும் சரியாகவே இருக்கிறது. அதன் வடிவம், காலத்தின் பரிமாணங்களைப் பேசத் தகுந்த ஒன்று, இல்லையா?

காலத்தின் நிலையாமையை விவரித்து ஆய்வு செய்வது நாவல்கள் செய்யக்கூடிய முதன்மையான பணிகளில் ஒன்றாக இருக்கலாம். அவை ஒரு நீண்ட பார்வையைக் கைகொள்ளத் தக்க சாதனமாக இருக்கின்றன, மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் காட்ட உகந்தவை, காலத்தால் இயக்கப்படும் மானுட நடவடிக்கைகள் அதற்கேற்ற களம். ஆனால் இதனாலெல்லாம், கறாராகப் பேசுவதானால் சமகாலம் குறித்து இருக்கவே முடியாது என்று சொன்னாலும் நாவல்கள் தமக்கென்று ஒரு சமகாலம் கொண்டவையாக இருக்க முடியாது என்று பொருள் கொள்ள முடியாது. வெறுமே சமகாலம் என்றிருப்பது தரக்கூடிய பரவசத்தைவிட உச்சமான பரவசம் ஒன்றை அவை தம்முள் கொண்டிருக்க முடியாது என்று சொல்வதற்கில்லை- அவற்றுக்கு உடனடித்தன்மை இருக்கிறது.

நூற்றைம்பது ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட ஒரு நாவலை, அதுவும் எழுதப்பட்ட ஆண்டைவிட ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட கதையை சொல்லும் நாவலை, நாம் ஏன் இரட்டை சரித்திரத் தாவலை சாதித்துப் படிக்க வேண்டும்? டால்ஸ்டாயின் எழுத்தில் இருக்கும் 'அப்போது' உயிருள்ள 'இப்போது' என்றாகிவிட்டதை நாம் வாழ்ந்துணரும் வகையில் விவரிக்கக்கூடிய ஆற்றல அவருக்கு இல்லாவிட்டால் இது எப்படி சாத்தியம்? நமக்கிருப்பது போலவே அவர்களுக்கும் இருந்திருக்கும் என்று நாம் நம்புகிறோம். பரிதாபத்துக்குரிய சமகால ஜீவிகளாக நாம் இருப்பதிலிருந்து நம்மை விடுவித்து அக்கணமே காலத்தைக் கடந்து நம்மை இணைக்காவிட்டால் இது எப்படி சாத்தியம்? "நானும் இங்கிருந்திருக்கிறேன்" என்ற விவரிக்க முடியாத, உறையவைக்கும் உணர்வை நம்மில் கிளர்த்தெழச் செய்யாவிட்டால் நாம் வேறு எதற்காக வேறொரு காலத்தைப் பேசும் எந்தவொரு நாவலை நோக்கியும் பயணிக்க வேண்டும்?

4/6/11

பெண்ணிய எழுத்து

மீண்டும் ஒரு இடைவெளி ஏற்பட்டு விட்டது, சரி செய்ய முயற்சி செய்கிறேன்.

-----------

வி எஸ் நைபால் தனக்கு சரிநிகராக எழுதக் கூடிய பெண் எழுத்தாளரே கிடையாது என்று சொல்லிவிட்டதாகப் படித்தபோது அவர் தன் சமகால எழுத்தாளர்களைதான் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படியல்ல- ஜேன் ஆஸ்டன் போன்ற ஆதர்சங்களை எல்லாம் தன் கணக்கில் சேர்த்துக் கொண்டு போட்டுத் தள்ளியிருக்கிறார்.

அவர் கூறியிருப்பதில் ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது, "தன் வீட்டிலேயே சர்வ அதிகாரமும் கொண்ட எஜமானியாக இல்லாத நிலை ஒரு பெண்ணின் எழுத்திலும் தவிர்க்கமுடியாத வகையில் வெளிப்படுகிறது," என்று சொல்லியிருக்கிறார் அவர்.

பெண்களின் எழுத்தில் அவருக்குத் தென்படுகிற மிகையுணர்ச்சி (செண்டிமெண்டாலிட்டி) மற்றும் உலகை நோக்கிய குறுகிய பார்வை ஆகியவையே பெரும்பாலானோரின் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது. அதற்குக் காரணமாக அவர் சுட்டுகிற சுதந்திரமின்மை பெண்ணியக் குரல்களுக்கு வலு சேர்ப்பதாகத்தானே இருக்க வேண்டும்?

ஒரு கேள்வி: தன் தனிப்பட்ட வாழ்வில் கையாலாகாதவனாக இருக்கிற ஒருவரது மனநிலை, ஆளுமை சார்ந்த உளவியல் பிரச்சினைகள், அவரது எழுத்தில் தவிர்க்க முடியாதபடி வெளிப்படுமா?

எழுத்து வாழ்வை பிரதிபலித்தால் போதுமானது என்று சொன்னால், அப்படியிருந்தாலும் தவறில்லை. ஆனால், எழுத்து வாழ்வின் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், இது சிக்கலான விவாதம்தான்.

22/5/11

கதையும் நிகழ்வும்

"கதையில் உள்ளத்தைக் கவரும் நிகழ்ச்சிகளும் வர வேண்டும். அதே சமயத்தில் “இப்படி நடந்திருக்க முடியமா?” என்ற சந்தேகத்தை எழுப்பக் கூடிய நிகழ்ச்சிகளையும் விளக்க வேண்டும்.

பிரத்தியட்சமாகப் பார்த்த உண்மையான நிகழ்ச்சிகளாயிருக்கலாம். ஆனால் படிக்கும்போது “இது நம்பக் கூடியதா?” என்று தோன்றுமானால், கதை பயனற்றதாகிவிடுகிறது.

சுருங்கச் சொன்னால், கதையில் கதையும் இருக்க வேண்டும். அதே சமயத்தில் அது கதையாகவும் தோன்றக் கூடாது!

இம்மாதிரி கதைகள் புனைவது எவ்வளவு கடினமான கலை என்பதைக் கதை எழுதும் துறையில் இறங்கி வெற்றியோ தோல்வியோ அடைந்தவர்கள்தான் உணர முடியும்.

இந்த நூலின் ஆசிரியர் ஸ்ரீ கு. அழகிரிசாமி அத்தகைய கடினமான கலையில் அபூர்வமான வெற்றி அடைந்திருக்கிறார். மிக மிகச் சாதாரணமான வாழ்க்கைச் சம்பவங்களையும் குடும்ப நிகழ்ச்சிகளையும் வைத்துக் கொண்டு கதைகள் புனைந்திருக்கிறார். படிக்கும்போது இது கதை என்ற உணர்ச்சியே ஏற்படுவதில்லை. "

>>>அமரர் கல்கி அவர்கள் கு அழகிரிசாமியின் "அன்பளிப்பு" என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய அருமையான விமர்சனம் சிலிகான் ஷெல்பில் இருக்கிறது.

21/5/11

ஆப்பிள் மரம் - ஒரு சிறுகதை அறிமுகம்

நம்மில் பலர் நாம் படித்த புத்தகங்கள் பற்றி பதிவு எழுதுகிறோம். ஒரு சிறுகதையின் அறிமுகம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும்படி Daphne Du Maurierன் The Apple Tree குறித்து எழுதியிருக்கிறார் பாருங்கள்-

எனக்கு அவரது பல சிறுகதைகள் விருப்பமானவையாக இருக்கின்றன. ஆனால் அவரது "The Apple Tree" என்ற சிறுகதை என் மனதை நீண்ட நாட்களுக்கு அலைக்கழித்திருக்கிறது.
அண்மையில் காலமான தன் மனைவி மிட்ஜ், அவளது நித்திய கண்டனத்தின் ஒரு பகுதியாக ஒரு ஆப்பிள் மரமாகத் திரும்பி வந்திருக்கிறாள் என்று நம்புகிறவன் ஒருவனின் கதை இது. அவன் தனது நீண்ட மணவாழ்வை நினைத்துப் பார்க்கிறான். தங்கள் புதுமண வாழ்வின் பால்ய பருவத்தில் அவன் சிவந்த கன்னங்கள் கொண்ட களத்துவேலை செய்கிற ஒரு பெண்ணை முத்தமிடும்போது மிட்ஜிடம் தான் சிக்கிக்கொண்டதையும் அதன் பின்வரும் ஆண்டுகளில் தொடர்ந்த மனத் தொய்வையும் மௌனமான கோபத்தையும் அவன் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறான். மிட்ஜ் எதுவும் சொல்வதில்லை. ஆனால் அவள் தான் வாழ்வின் கடைசி நாள் வரை தன் அடிமைத்தனமான அர்ப்பணிபால் அவனை தண்டிகிறாள். நிமோனியாவில் சாகும்போதுகூட, அவள் கவனமாக ஒரு மருத்துவமனைக்குப் போய் விடுகிறாள், அவனுக்குத் தொல்லை தரக்கூடாது என்று. அவளது ஊமை வன்முறை அவனை வாழ்நாளெல்லாம் வெட்கிக் குனிய வைக்கிறது, அவள் இறந்த பின்னும்கூட இந்த தண்டனை தொடர்கிறது.

எனக்கு இந்தக் கதையில் பிடித்த விஷயங்களில் ஒன்று இது. அவளது கணவன் கடைசியில் மரத்தை வெட்டிச் சாய்க்கிற காட்சி கொடூரமான வன்முறை நிறைந்த ஒரு கொலைபோல் என் வயிற்றைப் பிறட்டுகிறது- கதை தான் சஸ்பென்ஸால் நம் நரம்புகளை முறுக்கி இசைக்கிறது. ஆனாலும்கூட இந்தக் கதையில் துரதிருஷ்டசாலி மிட்ஜ் குறித்த குறிப்புகளில் நுட்பமான நகைச்சுவை இருக்கிறது. அவளது கணவன் அவள் சுவர்க்கத்தின் கதவுகளுக்கு வெளியே காத்திருப்பதை நினைத்துப் பார்க்கிறான், "மிகப் பின்தங்கி நிற்கிறாள், வரிசைகளில் அங்கு நிற்பதே அவள் விதியாக இருந்திருக்கிறது". அவள் சுவர்க்கத்தின் சுழற்கதவின் அருகில் அவன் மேல் கண்டனப்பார்வையுடன் நிற்கும் காட்சி அவன் கண்முன் தோன்றுகிறது, "ஒரு வாரத்துக்கு இந்தத் தோற்றம் அவனுடன் இருந்தது, நாட்பட நாட்பட வெளிறி மறைந்தபின் அவன் அவளை மறந்தான்"

அவன் அவளுக்காக இரங்கும் நாட்கள் குறைவே, அது சுவையான வன்மத்துடன் விவரிக்கப்பட்டிருக்கிறது. அவனது மனைவியின் நினைவுகள் இரக்கமில்லாத குரூரத்துடன் விவரிக்கப்படுகின்றன. மரம் எப்போதும் "கூனியிருப்பதாகவும்" 'குனிந்திருப்பதாகவும்' வர்ணிக்கப்படுகிறது. அதன் மொட்டுக்களின் விவரிப்பு அவலட்சணமான சொற்களால் செய்யப்படுகிறது: "மிகச் சிறிதாகவும் ப்ரௌனாகவும் இருந்தன. அவற்றை மொட்டுக்கள் என்றுகூட சொல்ல முடியாது. அவை சிறு கிளைகளில் திப்பிய அழுக்கு போல் இருந்தன, உலர்ந்த குப்பை போல்... அவற்றைத் தொடுகையில் அவனுள் ஒரு வகையான அசூயை எழுந்தது"- ஒரு உடலாய் இருந்தபோது அவளை அவன் எந்த அளவுக்கு வெறுத்திருக்கிறான் என்பதைப் பார்க்கிறீர்கள்.

மெல்ல மெல்ல அந்த மரம் அவன் வாழ்வை களங்ப்படுத்துகிறது. இரவில் ஒரு மரம் கீழே விழுகிறது. அவன் அதை எரிக்கும்போது அது வீட்டை ஒரு நோய்வாய்ப்பட்ட பச்சை நாற்றத்தால் நீங்காமல் நிறைக்கிறது, அவனது சமையல்காரப் பெண் அந்த மரத்தின் ஆப்பிள்களைக் கொண்டு ஒரு ஜாம் செய்து தருகிறாள். அதை சாப்பிட்டதும் அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. கதை மெல்ல மெல்ல ஒரு கொடுங்கனவாக மாறுகிறது. அவளது கணவன் அந்த மரத்தைத் தன் வாழ்விலிருந்து நீக்க முயற்சி செய்கிறான். அவன் தான் குற்ற உணர்வைத் தப்ப முயல்கிறான் என்றும் சொல்லலாம். அவனுக்குப் பெண்கள் மீதிருக்கும் வெறுப்பின் உக்கிரத்தைப் பார்க்கும்போது இதையும் உறுதியாக சொல்ல முடிவதில்லை. அவன் அனுபவங்கள் பிரமைதானா? அல்லது பழிவாங்கும் ஆவிதான் மரமாக வந்திருக்கிறதா? அந்தக் கணவனுக்கு விடுதலை கிடையாது, ஆப்பிள் மரம் தீய சக்தியாக மாறத் துவங்குகிறது, அதன் வேர்கள் அவனை இறுகப் பிணைக்கின்றன.
Polly Samson, Haunted by the Apple Tree

இந்த சிறுகதையை இந்த தொகுப்பில் படிக்கலாம்-
பிடிஎப் கோப்பு

Daphne Du Maurier குறித்த ஒரு சிறு அறிமுகம் இங்கே.


சென்ற பதிவில் வில்லியம் ட்ரெவரின் மேற்கோள் ஒன்றை கவனிக்க-
"வாழ்க்கையிலிருந்து துயரத்தை நீக்கி விட்டால், வாழ்க்கையில் இருந்து ஒரு பெரிய, நல்ல விஷயம் அப்புறப்படுத்தப்பட்டு விடும். ஏனென்றால் சோகமாக இருப்பது என்பது குற்றவுணர்வுடன் இருப்பது போன்ற ஒன்று. இவை இரண்டுக்கும் கெட்ட பெயர் இருக்கிறது. ஆனால் உண்மையைச் சொல்வதானால் குற்றவுணர்வு ஒன்றும் அவ்வளவு மோசமான மனநிலையல்ல. எல்லாரும் சில நேரம் குற்றவுணர்வை அறிந்திருக்க வேண்டும். நான் குற்றவுணர்வைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். அது நமக்கு புத்துயிரூட்டக் கூடிய ஒன்றாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்."

19/5/11

வில்லியம் ட்ரெவர்- சில மேற்கோள்கள்.


வில்லியம் ட்ரெவர் சில மேற்கோள்கள்:

என்னைவிட மற்றவர்களின் மேல் எனக்கு ஆர்வம் கூடுதலாக இருக்கிறது. மற்றவர்கள் எனக்கு வசீகரமானவர்களாக இருக்கிறார்கள்.

எனக்கு எழுத்து முழுக்க முழுக்க மர்மமான ஒன்றாக இருக்கிறது. நான் எழுத்து ஒரு மர்மம் என்று நினைக்கவில்லையென்றால் அது முழுக்கவுமே பிரயோசனமில்லாத செயலாகிப் போயிருக்கும். எதுவும் எனக்கு எப்படி முடியப் போகிறதென்று தெரிவதில்லை, அடுத்த இரு வரிகள் எவையாக இருக்கக் கூடும் என்பதுகூட எனக்குத் தெரியாது.

வாழ்க்கையிலிருந்து துயரத்தை நீக்கி விட்டால், வாழ்க்கையில் இருந்து ஒரு பெரிய, நல்ல விஷயம் அப்புறப்படுத்தப்பட்டு விடும். ஏனென்றால் சோகமாக இருப்பது என்பது குற்றவுணர்வுடன் இருப்பது போன்ற ஒன்று. இவை இரண்டுக்கும் கெட்ட பெயர் இருக்கிறது. ஆனால் உண்மையைச் சொல்வதானால் குற்றவுணர்வு ஒன்றும் அவ்வளவு மோசமான மனநிலையல்ல. எல்லாரும் சில நேரம் குற்றவுணர்வை அறிந்திருக்க வேண்டும். நான் குற்றவுணர்வைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். அது நமக்கு புத்துயிரூட்டக் கூடிய ஒன்றாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

என் கதைகள் உணர்வுகளைப் பற்றியவை. மாற்று உண்மைகளைப் பற்றியவையல்ல. அனைத்து வகை உணர்ச்சிகளும் ஆய்ந்து, நினைத்துப் பார்த்து, அறிய நினைத்து அச்சுக்குத் தரத் தகுந்தவையாக எனக்குத் தோன்றுகிறது. நான் அறிய நினைத்து எழுதுகிறேன், மற்ற எந்த காரணத்தைவிடவும் அதுவே பொருத்தமான ஒன்று. அதனால்தான் நான் பெண்களைப் பற்றி நிறைய எழுதுகிறேன், நான் பெண்ணாக இல்லாததால், பெண்ணாக இருத்தல் என்பது எப்படியிருக்கும் என்பதை நான் அறியாதிருப்பதால் அதைப் பற்றி அதிகம் எழுதுகிறேன். நான் எதுவாக இல்லையோ, எதுவாக இருக்க முடியாதோ, அதை இன்னும் அதிகமாக அறிவதுதான் எனக்கு அதை எழுதுவதற்கான உத்வேகத்தைத் தருகிறது.

ஒருவனின் வாழ்க்கை அல்லது உறவின் கணநேரப் பார்வையே ஒரு சிறுகதையாகும். ஒரு உறவை எடுத்துக் கொண்டு அதை ஏறத்தாழ படம் பிடித்துக் காட்ட முடியும். ஒரு நாவலின் பேருருவில் அந்த உறவின் தன்மை மறைந்துவிடும். எனக்கு அதைப் பிரித்துப் பார்த்து, என் பாத்திரங்களை நன்றாக கவனிக்கப் பிடித்திருக்கிறது"

எது சொல்லப்படாமல் இருக்கிறதோ, அதுதான் மிக முக்கியமானது.



ஆங்கில வடிவம் கார்டியனில் இருக்கிறது.

18/5/11

அரசியலும் ஆன்மாவும்

இந்த ப்ளாக் கொஞ்சம் திசைமாறி இப்போது அரசியல் எழுத்து மற்றும் மானுட எழுத்து-(குறிப்பாக அரசியலாக இல்லாத, மானுடத்தை நோக்கிப் பேசும் எழுத்துக்குப் பெயர் என்ன?)- பற்றி விவாதிக்கிறது- நினைவும் புனைவும் கலந்து, ஒன்றுக்கொன்று அறிவூட்டி படைப்பாக வெளிப்படுவதை சில நாட்களாகப் பேசிக் கொண்டிருந்தோம். இங்கிருந்து அரசியல் எழுத்துக்குப் போவதென்பது ஒரு பெரிய தாவல். ஆனால் அது அப்படியொன்றும் நம் ப்ளாகின் பேசுபொருளுக்கு அன்னியமானதல்ல என்று நினைக்கிறேன்,.

Adrienne Rich என்பவரது பேட்டி ஒன்றை பாரிஸ் ரிவ்யூவில் படித்தேன் - Adrienne Rich on ‘Tonight No Poetry Will Serve’. அதில் அவர் சொல்லும் சில விஷயங்கள் கவனிக்கத்தக்கவை-
வேறெந்த வழியிலும் என்னால் தொட முடியாத, என்னை விடாத நாட்டங்கள் மற்றும் ஆசைகளைக் கொண்டு கலை படைப்பதற்கான வழிக்கான- கருவிகளுக்கான- தேடலாய் எனது எழுத்து இருந்திருக்கிறது என்பதை இப்போது என் எண்பதுகளில் என்னால் பார்க்க முடிகிறது. பொதுமைப்படுத்தி சொல்வதானால் நான் உலகை வரலாறாக அறியும் பிரக்ஞையாகக் காண நினைத்தேன்- மானுட தேவைகள், மானுட உள்ளங்கள், உழைப்புகள், நேயங்கள் (மானுட குரூரமும் பேராசையும்தான்) இவற்றாலான வரலாறாகக் காண நினைத்தேன். நான் Cold Warன் துவக்க காலங்களில் எழுதத் துவங்கினேன். இளம் வயதில் எங்களுக்குக் கம்யூனிசம் மற்றும் அணு குண்டு குறித்த அச்சம் புகட்டப்பட்டிருந்தது- இத்தனைக்கும் அணுகுண்டை எங்கள் அரசே பயன்படுத்தியிருந்தது. எனது முதல் புத்தகத்தின் முதல் கவிதை (“Storm Warnings” in A Change of World [1951]) அந்த அச்சத்தைப் பிரதிபலிக்கிறது - எங்கள் கவலையையும் இயலாமையையும். அதிகாரம் சார்ந்த உறவுகளை நான் கணித்த வண்ணம் அவை எனது கவிதைகளிலும் உரைநடைகளிலும் காலம்தோறும் நிறைத்திருக்கிறது. இந்த உலகில் என் அனுபவங்களை, என் படிப்பினைகளை, நான் எதிர்கொண்டு உருமாற்றும் இடமாக எனக்கு கவிதை இருந்திருக்கிறது..

1950களில் பதிப்பிக்கப்பட்ட Snapshots of a Daughter-in-Law என்ற தொகுப்பில் “From Morning Glory to Petersburg” என்ற கவிதை இருக்கிறது. ஒரு கலைக்களஞ்சியத்தின் தலைப்புகளாலானது அந்தக் கவிதை. பகுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு வாழத் தகுந்த பொருளை எவ்வாறு உன்னால் கட்டமைத்துக் கொள்ள முடியும் என்ற கேள்வியை ஒரு தேர்வு செய்யப்பட்ட உத்தியாய் அந்தக் கவிதை கேட்டது. உன்னால் ஒருங்கிணைக்க முடியாத 'தகவல்களோடு' நீ எப்படி வாழ முடியும்? கவிதையால் இந்த ஒருங்கிணைப்பை நிகழ்த்துவது ஒரு வழி.
அதிகார அமைப்புகளின் அரசியலால் உணர்வுகளின் உலகில் வாழும் நாம் பாதிக்கப்படுகிறோம், இல்லையா? மொழியை அரசியல் பின்னப்படுத்துகிறது- அன்பு என்றோ மனித நேயம் என்றோ நாம் பேசும்போது, யாருக்கு என்ற கேள்வியைத் தாண்டி செல்வது அவ்வளவு எளிதாக இல்லை. இதைக் கவிதையின் வாயிலாக சாத்தியப்படுத்த முடியும் என்கிறார் அட்ரியன் ரிச் என்று நினைக்கிறேன்: கவிதை என்றில்லை, எந்த ஒரு உள்ளார்ந்த உண்மையை வெளிப்படுத்தும் படைப்பும் இதை சாத்தியமாக்கக்கூடும், மொழியின் அமைப்பைக் கொண்டு உரையாடுவதால், கவிதையில் இது எளிதாகிறது என்று தோன்றுகிறது.

இந்தப் பேட்டியில் கவிதையின் கடமைகள் எவையென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அட்ரியன் ரிச் பதில் சொல்கிறார்-
கவிதைக்கென்று தனியாகவோ அனைத்து இடங்களிலும் பொருந்தக்கூடியதாகவோ கடமைகள் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சூழல்களில் மாபெரும் மானுட செயல்பாட்டால் நேரும் ஆக்கச்செயல் இது. 'நமது' என்று நாமழைக்கும் சமகாலத்தில், பொய்த்தகவல்களும் உற்பத்தி செய்யப்பட்ட கவனச்சிதறல்களும் சுழலாய் அலைகழிக்கும் இக்காலத்தில் கவிதைக்கு என்ன கடமை இருக்கக்கூடும்? நடிக்காமல் இருப்பது, பொய்யான களங்கமின்மையைக் கைகொள்வது, அடுத்த வீட்டில் அல்லது பக்கத்து ஊரில் நடப்பதைத் திரையிட்டு மறைத்துக் கொள்ளாமல் இருப்பது. ஆழமற்ற சூத்திரங்கள், சோம்பலான விரக்தி, மூச்சு முட்டும் சுய- பிரதாபம் இவற்றைத் தவிர்ப்பது.

நம் ஒவ்வொருவருக்கும் சாத்தியமாயிருக்கக்கூடிய- நேர்மை, பெருந்தன்மை, துணிவு, தெளிவு இவற்றின் உதாரணமாக இருத்தல்- இதைத் தவிர வேறெதுவும் நம்மை கௌரவமான மனிதர்களாக இருக்கும்படி கட்டாயப்படுத்த முடியாது. இதுவே நம் சமுதாய அமைப்பை இறுகப் பிணைக்கவும் செய்யும்.

17/5/11

அர்த்தங்களே கலையின் இயல்பு...

எழுத்து குறித்த நல்ல கட்டுரை, ஒருவரை நோக்கி எழுதப்பட்டிருந்தாலும் இது அனைவருக்கும் பொருந்தக் கூடியது - ஓர் ஈழ எழுத்தாளருக்கு...
கலையின் பரப்பு எப்போதுமே கிரேஃபீல்ட் எனப்படும் பகுதிகளால் ஆனது. தெளிவு அல்ல தெளிவின்மையே கலையின் இயல்பு. அர்த்தம் அல்ல அர்த்தங்களே அதன் இயல்பு. அது சொல்வதில்லை உணர்த்துகிறது. அது சிந்தனையின் விளைவல்ல சிந்திக்கவைக்கும் ஒரு மொழிக்களம் மட்டுமே.

கருத்துக்கள், கொள்கைகள், நிலைபாடுகள் போன்ற பெருவெட்டான விஷயங்களால் ஆனதல்ல கலை. அது சிறிய விஷயங்களாலானது. நுண்மைகளால் மட்டுமே கட்டமைக்கப்படுவது. கலை ஒரு கலைஞனின் சிருஷ்டி அல்ல. அவன் தன்னை மீறிய விஷயங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுப்பதன் விளைவு.....
படித்துப் பாருங்கள், இந்த மாதிரி இன்னும் நிறைய இருக்கிறது-
இலக்கியம் மொழியாலானது. உணர்ச்சிகள் எண்ணங்கள் மட்டுமல்ல படிமங்களும்கூட இங்கே மொழிதான்.

மொழியின் ஒழுங்கே வேறு. ஒரு எண்ணத்தை அல்லது ஒரு நறுமணத்தை மொழிக்குள் கொண்டுவருவதற்கான சவாலென்பது இரவுபகலில்லாமல் மொழியை மட்டுமே அளாவிக்கொண்டிருப்பதனால்தான் கைகூடும். ஒரு சிந்தனை அல்லது உண்ர்வு எழுந்தாலே அது மொழிவடிவமாக மனதில் எழுவதற்குப்பெயர்தான் இலக்கியத்தேர்ச்சி.

மனம் என்னும் மேடை மேலே...

ஈர்ப்பு என்று வந்தால், காதல் என்று வந்தால், எல்லாரும் ஒரே குட்டையில்தான் இருக்கிறோம். யூரிபிடிஸ், சொபோக்லஸ், ஷேக்ஸ்பியர், செகாவ், ஸ்ட்ரின்ட்பர்க், அனைவரும் ஒவ்வொரு தலைமுறையும் எதிர்கொண்டு தன் வழியில் புலம்பும் அதே தீர்க்க முடியாத பிரச்சினைகளோடுதான் போராடினார்கள்.  நான் அவற்றை ஒரு குறிப்பிடதத்தக்க கோணத்தில் என் திரைப்படங்களில் விவரித்து, அவற்றை வைத்து மகிழ்வித்தேன். மற்றவர்கள், தங்கள் காலத்தில், தங்கள் பேச்சுவழக்குகள் மற்றும் குறியீடுகளால் அதையே செய்தார்கள். 
என்னிடம் இருப்பது வேறு வகை ஒப்பனை சாதனங்களாக இருக்கலாம், ஆனால் முடிவில் பார்த்தால் நாம் அனைவரும் ஒரே விஷயத்தைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறோம். இதனால்தான் நான் அரசியலைப் படமெடுக்கவில்லை. வாழ்க்கையில் நிலைத்து நிற்கும் பிரச்சினைகள் அரசியல் அல்ல-  நம் பிரச்சினைகள் இருப்பு சார்ந்தவை, அவை உள்ளம் சார்ந்தவை, அவற்றுக்கு விடை கிடையாது- எப்படியானாலும் நமக்கு திருப்தி தரக்கூடிய விடை கிடையாது. 
Woody Allenஐ ஒரு பொருட்படுத்தத்தக்க எழுத்தாளராக நினைக்காதவர்கள் இருக்கலாம், ஆனால் அவரது திரைப்படங்கள் குறித்த கருத்து இருக்க வேண்டும் என்பது சிந்தனையாளனுக்கான அடையாளங்களில் ஒன்றாகும். அவர் தனக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களைப் பட்டியலிடுகிறார் இங்கே-

16/5/11

காலத்தின் தேவை - கலைஞனும் படைப்பும்

நமக்கு Proust, Joyce போன்றவர்கள் தேவையில்லை; இவர்களைப் போன்றவர்கள் ஒரு ஆடம்பரம், தனது அடிப்படை இலக்கியத் தேவைகள் முழுமை பெற்ற பின் மட்டுமே ஒரு செழுமையான பண்பாட்டுக்கு கிடைக்கக் கூடிய கூடுதல் உத்வேகம் இவர்களது எழுத்தால் கிடைக்கும். நம் சமகாலத் தேவை ஷேக்ஸ்பியர், மில்டன் அல்லது போப் போன்ற ஒருவர்; தங்கள் பண்பாட்டின் பலம் நிறைந்தவர்கள், தங்கள் காலத்தின் எல்லைகளுக்கு அப்பால் செல்லாமல், சமகாலத்தில் இயங்கி, அதில் எது தனித்துவம் கொண்டதாக இருக்கிறதோ அதற்கு ஒரு மகோன்னதத் தருணத்தைத் தருபவர்களே நமக்கு வேண்டும். தங்களுக்கு உள்ள தடைகளை ஏற்கக்கூடிய மாபெரும் கலைஞர்கள் வேண்டும், ப்ராடஸ்டண்ட் விழுமியங்களைக் கொண்டு ஒரு காவியம் இயற்றக்கூடிய படைப்பூக்கத்தைத் தங்கள் சூழல் மீதான உக்கிர நேசிப்பில் அடையக்கூடியவர்கள் வேண்டும், எனது எழுத்தின் பல தோல்விகள் எவையாக இருப்பினும், அது நான் பிறந்த காலத்தை நான் நேசித்தேன் என்பதைப் பிரகடனப்படுத்தும் அறிக்கையாக இருக்கட்டும்.

இதைத் தன் தாய்க்கு ஒரு கடிதத்தில் எழுதியபோது ஜான் அப்டைக்குக்கு வயது பத்தொன்பது!

ஏராளமாக எழுதிக் குவித்தவர். எழுத்துக்காகவே வாழ்ந்தவர். ஜான் அப்டைக்கின் தனிக் குறிப்புகள் பொதுப்பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இதைப் பற்றி ஒரு அருமையான கட்டுரை ந்யூ யார்க் டைம்ஸில் இருக்கிறது, படித்துப் பாருங்கள்.

எது சிறந்த படைப்பு, அதற்கான படைப்பூக்கம் எங்கிருந்து வருகிறது, அது எத்தகைய சமுதாயத்தில் சாத்தியமாகிறது என்பன அவ்வளவு எளிதாக விடை கண்டுவிடக் கூடிய கேள்விகளல்ல. இதைப் பற்றிய விவாதங்களைப் படிக்கும்போது, ஜான் அப்டைக் எழுதியதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்- தங்கள் காலத்தின் முரண்களைத் தங்கள் எழுத்தில் வெளிப்படுத்தக்கூடிய ஷேக்ஸ்பியர் போன்றவர்கள் ஒரு பண்பாட்டுத் தேவையாக இருக்கிறார்கள்: அதன் பின்னரே எழுத்தின் சாத்தியங்களை விரிக்ககூடிய நுட்பமான சோதனை முயற்சிகள் வருகின்றன என்கிறார் அப்டைக்.

" எனது எழுத்தின் பல தோல்விகள் எவையாக இருப்பினும், அது நான் பிறந்த காலத்தை நான் நேசித்தேன் என்பதைப் பிரகடனப்படுத்தும் அறிக்கையாக இருக்கட்டும்," என்று அப்டைக் அறைகூவல் விடுப்பது புது ரத்தம் பாய்வது போன்ற உணர்வை எழுப்புகிறது, இல்லையா?

15/5/11

ஆர் கே நாராயண் நினைவு அஞ்சலி

மறைந்த தமிழ் எழுத்தாளர் ஆர் கே நாராயண் அவர்களுடைய பத்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இங்கிலாந்தில் உள்ள கார்டியன் என்ற நாளேட்டில் ஒரு அஞ்சலி கட்டுரை எழுதியிருக்கிறார், மார்லோ மற்றும் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதிய Charles Nicholl.
மால்குடி கதைகள் மெல்ல நீளும் தென்னிந்தியத் தொலைக் காட்சித் தொடர்கள். சிற்றூர்களுக்குரிய சதித்திட்டங்கள் மற்றும் ஆசைகள் நிறைந்தவை. அவை 1980களில் வாரத் தொடராக தொலைகாட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டன. தொலைகாட்சித் தொடர்கள் அனைத்தையும் போலவே, இதற்கு எளிதில் அடிமையாகிவிட வாய்ப்பிருக்கிறது. மால்குடி வெறியராகவும் கூடும், ந்யூ யார்க் நகர அடெல்பி பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஜேம்ஸ் பென்னெல்லியைப் பாருங்கள்- "ஒழுங்குபடுத்தப்பட்ட இந்து உலகத்தின் வெளிப்பாடாக மால்குடி நகரம்" என்ற தலைப்பில் அவர் ஒரு ஆய்வு செய்திருக்கிறார், அதற்காக ஆர் கே நாராயண் கதைகளை ஆதாரமாகக் கொண்டு மால்குடியின் வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார் இவர். தனது ஆய்வை 1978ல் அமெரிக்க சமய அகாதெமியில் வாசித்திருக்கிறார். இந்த வரைபடம் மால்குடியின் செழுமை கூடிய மெய்ம்மைக்கு ஒரு சமர்ப்பணமாகும். அவ்வளவு ஏன், இந்த வரைபடமும்கூட மால்குடித்தனமான முயற்சியுமாகும். இந்த வரைபடத்தால் பென்னெல்லி மகிழ்ந்திருக்க வேண்டும், 1981ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அவரது "மால்குடி நாட்கள்" என்ற தொகுப்பின் முன்னட்டையில் அவரது வேண்டுகோளின்படி இந்த வரைபடம் அலங்கரிக்கிறது.

"ஒழுங்குபடுத்தப்பட்ட உலகம்" என்று பென்னெல்லி அவதானித்த தன்மை, ஆர் கே நாராயணின் படைப்புகளை விமரிசனத்துக்கு உள்ளாக்கும் காரணமாக இருந்திருக்கிறது. இந்நாட்களில் நாராயணின் புகழ் கொஞ்சம் தோய்வடைந்திருக்கிறது- அவரது சுருக்கமான குரல் பட்டாசாய் வெடிக்கும் திறமைகள் மற்றும் அரசியல் களத்தில் செயல்படும் புதிய இந்திய புனைகதை உலகத்துக்குத் தொடர்பற்றதாக இருக்கிறது. வி எஸ் நைபால் அவரது எழுத்தில் உள்ள 'உறைதன்மை'யைப் பற்றி பேசியிருக்கிறார்; அவர் விவரிக்கும் உலகம் ஒரு fable ஆகும்- ஆனால் நைபால் நுட்பமாக ஒரு உண்மையை குறிப்பிருகிறார்- நாராயணின் கவனம் சமுதாய மாற்றத்தின் புறவெளியில் இருக்கவில்லை, மாறாக, "அதன் ஆழத்தில் நிகழும் சாமானிய வாழ்வை அவதானித்தார்- சின்னச்சின்ன திட்டங்கள், பெரியபெரிய பேச்சு, பற்றாக்குறை"- மால்குடிய சூழலின் அருமையான சுருக்கம்"
படித்துப் பாருங்கள்- இங்கிலாந்தில் இருக்கும் ஆங்கில நாளேடு ஒன்று நினைவு வைத்துக் கொண்டு ஆர் கே நாராயண் நினைவு நாளன்று அஞ்சலி செலுத்துவது பெருமையாக இருக்கிறது.