20/6/11

களமில்லா கதைகள்

இந்தக் கட்டுரையை நீங்கள் ஆங்கிலத்தில்தான் படித்து மகிழ வேண்டும், மிக நன்றாக எழுதியிருக்கிறார்-

The Millions : On Not Going Out of the House: Thoughts About Plotlessness

கதை என்று சொன்னால் அதில் குறைந்தபட்சம் துவக்கம் என்று ஒன்றும் முடிவு என்று ஒன்றும் இருக்க வேண்டாமா? இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வெளியில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை என்று வைத்துக் கொள்ளலாம். களமில்லா கதைகள் என்று நாம் சொல்லும்போது இப்படி எதுவும் நடக்காத கதைகளைப் பற்றிப் பேசலாம். இதைத்தான் இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

1790ல் Xavier de Maistre என்பவர் எழுதிய Voyage Around My Room என்ற நாவல், வீட்டுக்காவலில் இருப்பவனின் மன ஓட்டத்தைத் தொடர்கிறது.
காதல் தோல்வியாலும் நண்பர்கள் கைவிட்டதாலும் தனி அறையில் அடைந்து கிடப்பவர்களே, என்னோடு வாருங்கள், சக மனிதனின் அற்பத்தனத்தையும் துரோகத்தையும் விட்டு தொலைதூரம் செல்வோம். துக்கப்படுவோரே, நலம் குன்றியோரே, அலுப்பில் இருப்போரே, என்னோடு வாருங்கள்- உலகின் சோம்பேறிகள் அனைவரும் ஒரு பெரிய கூட்டமாக எழுச்சி கொள்ளுங்கள்;- புரட்சி எண்ணங்களில் படுபயங்கர சதித் திட்டங்கள் தீட்டி மூளையை கசக்கிக் கொண்டிருப்பவனே, உலகைத் துறந்து நல்வாழ்வு வாழ உன் ஓய்வறையில் ஆலோசனை நடத்திக் கொண்டிருப்போனே, மாலைப் பொழுதின் துறவிகளே-............... என்னோடு பயணம் வாருங்கள், நாம் சின்னஞ்சிறு பயணங்கள் மேற்கொள்வோம், ரோமையும் பாரிஸையும் பார்த்த பயணிகளைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரித்தபடி நாம் பயணிப்போம்- நமக்குத் தடைகள் இல்லை; மனம்போன போக்கில் சந்தோஷமாக அது நம்மைக் கூட்டிச் செல்லும் இடமெங்கும் செல்வோம்...
ஆனால் இந்த மனம் போகிற போக்கு இருக்கிறதே, இதுதான் பிரச்சினை. மனம் ஓயறு இட்டுக் கட்டும் கருவி. அடுத்தடுத்து நான்கு ஓவியங்களை பக்கத்தில் பக்கத்தில் வைத்துப் பார்த்தால், அவற்றை ஒன்றாக இணைக்க ஒரு கதை செய்து விடுவதே மனதின் இயல்பு. களமில்லா கதை சொல்பவன் மனம் போகும் போக்கைத் தவிர்க்க வேண்டும், இல்லையா?

கட்டுரையில் கொஞ்சாரவ் என்பவர் எழுதிய ஒப்லமோவ் என்ற பாத்திரம்- இவனும் அறையில் அடைந்து கிடக்கிறான், இதில் இப்படி வருகிறதாம்-
வரலாற்றைப் படிப்பது மனிதனை துயரத்தில் ஆழ்த்துகிறது. இன்ன இன்ன ஆண்டில் இப்படிப்பட்ட துயரச் சம்பவங்கள் நிகழ்ந்தன, மனிதன் துன்பப்பட்டான் என்று நீ படிக்கிறாய். அவன் தன் ஆற்றல்கள் அனைத்தையும் திரட்டினான், வேலை செய்தான், இங்கு அங்கும் போனான், கஷ்டப்பட்டு உழைத்து, பிரகாசமான நாட்களை எப்போதும் எதிர்பார்த்திருந்தான். அந்த நாள்தான் வந்துவிட்டதே, வரலாறு ஓய்வெடுத்துக் கொள்ளும் என்று நீ நினைப்பாய். அதுதான் இல்லை, மேகங்கள் சூழ்கின்றன, கட்டிடம் இடிந்து விழுகிறது, மீண்டும் உழைப்பும் அலைச்சலும், பிரகாசமான நாட்கள் நீடிப்பதில்லை; அவை விரைந்து சென்று விடுகின்றன- வாழ்க்கை பெருக்கெடுத்து ஓடுகிறது, எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது, தன் பாதையில் உள்ள அனைத்தையும் உடைத்துத் தள்ளிக் கொண்டு"
இதை ஒரு காரணமாக சொல்லிக்கொண்டு இந்த நாவலின் நாயகன் தன் வீட்டில் அடைந்து கிடக்கிறான். நண்பர்கள் வருகிறார்கள் போகிறார்கள், காதல்கள் ஜெயிக்கின்றன தோற்கின்றன, புரட்சிகள் வெடித்து அடங்குகின்றன- இதெல்லாம் எதற்கு என்று தன் தனியறையில் இவற்றால் தொடப்படாமல் இருக்கிறான் ஒப்லமோவ். ஆனால் அப்படி இருக்க முடியுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. என்னதான் தனித்திருந்தாலும், ஒரு கோர்வையாய் காலத்தின் பாதையில் ஒரு கதையாடலைக் கட்டுவிப்பது வெகு தீவிரமான உந்துதல்.

பாருங்கள், நாம் கூட களமில்லா கதைகள் என்று சொன்னாலும், இந்தக் கதைகள் என்ன சொல்கின்றன என்பதைப் பேசுகிறோம்!

ஒரு சில நாவல்களை எடுத்து விவாதித்திருக்கிறார், கட்டுரையை எழுதியவர். களமில்லா கதைகள் என்று சொல்வது கொஞ்சம் மிகை, வீட்டுக்குள் கிடத்தல், வெளியே போகாதிருத்தல் என்ற வகைப்பாட்டில் வேண்டுமானால் இவர் குறிப்பிடும் கதைகள் வரலாம்.

களமில்லா கதைகளே வேறு.