16/4/11

தெரிந்த விஷயமும் தெரியாத விஷயமும்

சமகால சிறுகதை எழுத்தாளர்களில் வில்லியம் ட்ரெவர் (William Trevor) மிக முக்கியமான ஒருவர். அவரைக் குறித்த ஒரு ப்ரோபைலை ஐரிஷ் டைம்ஸ் என்ற இதழில் படித்தேன். அவர் எவ்வளவு முக்கியமானவர் என்ன ஏது என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், ட்ரெவர் சொல்கிற ஒரு விஷயம் என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது-
ஒருவன் தனக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி எழுதுவதுதான் சிறந்தது என்று எழுத்தாளர்களுக்குத் தரப்படும் மிக அடிப்படையான அறிவுரையை வில்லியம் ட்ரெவர் ஏற்க மறுக்கிறார். கற்பனையிலிருந்து கிளைப்பதே எழுத்து என்பது அவரது நம்பிக்கையாக இருக்கிறது. "கதையில் ஒரு விஷயம் இருக்க வேண்டும். கதைக்கு விஷயம் தேவைப்படுகிறது. எனக்கு எதுவும் நடக்காத, ஆனால் எப்போதும் ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிற வகைக கதைகளைப் பிடிக்கும். அப்படி எதுவுமே நடக்காதபோதும்கூட கதையில் விஷயம் இருக்க வேண்டும். ஏதோ ஒரு விஷயம் இருக்க வேண்டும், சில சமயம் அது கதையின் இறுதி வரிகள், கடைசி சொற்களுக்கு வரும் வரைத் தெளிவாவதில்லை. நீ உன் கதையை எழுதி முடித்ததும் இதில் என்ன விஷயம் இருக்கிறது என்று உனக்கே சந்தேகமாக இருந்தால், ஏன் இந்தக் கதையில் ஒரு விஷயமும் இல்லை என்று நீ உன்னையே கேட்டுக் கொண்டாக வேண்டும். கதை இன்னும் முடிவடையவில்லை, அதுதான் விஷயம்"
வில்லியம் ட்ரெவர் விஷயம் இருக்க வேண்டும் விஷயம் இருக்க வேண்டும் என்று என்னவோ திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறாரே, அப்படி என்னதான் பெரிய விஷயத்தை இவர் சொல்கிறார் என்று பார்த்தால், சொன்னபடியே கடைசி வரியில் விஷயத்துக்கு வந்து விட்டார்.