20/4/11

புனைவும் அபுனைவும்

ஜெப் டையர் (Geoff Dyer) யார், எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்றெல்லாம் தெரியாமல் அவர் எழுதியுள்ள பல புத்தகங்களில் இரண்டைப் படித்திருக்கிறேன்: The Missing of the Somme என்ற புத்தகத்தை அதன் அட்டையைப் பார்த்துதான் எடுத்தேன்- ஆனால் அருமையாக எழுதப்பட்டிருந்த போர் குறித்த அந்தப் புத்தகம் மரணத்தை நோக்கி எவ்வளவு ஆர்வமாக மனிதர்கள் சென்றார்கள் என்று நினைக்க வைத்தது, எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னை நினைவுச் சின்னமாக நினைத்துக் கொண்டு ஒரு தலைமுறையே தன்னை அழித்துக் கொண்டது, என்று மிக அருமையாக எழுதியிருந்தார், அது திகைப்பூட்டும் பார்வையாக இருந்தது. இவர் எழுதி நான் படித்த இரண்டாவது புத்தகம், ஜாஸ் இசை குறித்த "But Beautiful: A Book About Jazz," இதையும் வித்தியாசமாக எழுதியிருந்தார், ஜாஸ் இசையின் துவக்கமும் அதன் இயல்பும் சிறப்பாக இருந்தன, ஆனால் இசை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாதாகையால் அதை அனுபவித்து வாசிக்க முடியவில்லை.

ஆங்கில பதிப்புத்துறையில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஒரு குறிப்பிடத்தக்க புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது என்றால் அதைப் பற்றி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையில் எல்லாரும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அதையெல்லாம் படித்துப் படித்து நாமும்கூட, அப்படி இந்த புத்தகத்தில் என்னதான் இருக்கிறது என்று படித்துப் பார்க்க நினைக்கத் துவங்கி விடுகிறோம்.

அப்படித்தான் அண்மைக்காலமாக ஜெப் டையர் எழுதிய Otherwise Known as the Human Condition. என்ற கட்டுரைத் தொகுப்பைப் பற்றி எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நான் பாரிஸ் ரிவ்யூவில் அவரது நேர்முகமொன்றைப் படித்தேன்- அவர் இவ்வளவு பெரிய ஆள் என்று நான் நினைத்திருக்கவில்லை.

ஏதாவது ஒரு வேலைக்குப் போய் உழைத்து முன்னேறி பிழைப்பதில் இருந்து தப்பிப்பதற்காகவே தான் எழுதுவதாக சொல்லும் டையர், தனக்கு எதைப்பற்றி எழுதத் தோன்றுகிறதோ அதையே எழுதுவதாக சொல்கிறார்- எந்தத் துறையிலும் தனி கவனம் செலுத்துவதைத் தவிர்த்திருக்கிறார் அவர். நாவல்களும் எழுதியுள்ள ஜெப் டையர், புனைவுக்கு அபுனைவுக்கும் பெரிய அளவில் வேறுபாடில்லை என்று சொல்கிறார். நாவல் எழுதுபவன்தான் சிறந்த எழுத்தாளன் என்பதை அவர் ஒப்புக் கொள்வதில்லை: சொல்லப்போனால் அபுனைவிலும் கற்பனை கலக்க வேண்டியிருக்கிறது என்கிறார்.

சுவையான இந்த நேர்முகத்தை இங்கே படிக்கலாம்.