17/4/11

விமரிசனக் குறிப்புகள்

ஒரு விமரிசகனுக்கு பொறுப்புகள் இருக்கின்றனவா, இருப்பின், அவையாவன என்ன? என்று பள்ளி மாணவனிடம் கேட்கிற மாதிரி ஸ்டீபன் பர்ட் (Stephen Burt) என்ற விமரிசகர் கம் கவிஞரிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள், இங்கே. அவர் சொல்கிறார்,
நீ உண்மை என் நம்புவதை மட்டும் சொல். உன் வாசகனை நினைவில் வைத்துக் கொள். ஒரு பெரிய மேதாவி சாமானியர் ஒருவரிடம் பேசுகிற மாதிரி நீ அவரிடம் பேசாதே, அவருடைய அன்புக்காகவும் ஏங்காதே. அவருக்கு ஏற்கனவே என்ன தெரியும், அவர் எதை மதிக்கிறார், என்ன நம்பக்கூடும் என்பதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்: இந்த அடிப்படைகள் வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு வகைகளில் மாறலாம்- ஒரு பத்திரிக்கையின் வாசகர் இன்னொரு பத்திரிக்கையின் வாசகரைப் போலிருக்க மாட்டார். உன் எழுத்தை உன்னிப்பாக கவனி: கவிதை விமரிசனம் என்றால் கவிதைகளை கவனி: கவிஞனின் வாழ்வு பற்றி என்னிடம் சொல்லிக் கொண்டு இருக்காதே. புத்தகங்களின் அட்டை பற்றிப் பேசாதே, அந்த மாதிரி விஷயங்கள் கவிதைகளில் முக்கியமாக இல்லாவிட்டால் (இதில் என்ன ஒரு மர்மமென்றால், புத்தக அட்டைகளைப் பற்றி ஆரம்ப நிலை விமரிசகர்கள் நீளமாக விவரித்து எழுதுகிறார்கள்)

சுவையே இல்லாத எந்த ஒரு புத்தகமும் உயர்ந்த எண்ணத்திலேயே எழுதப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்திரு- அவர் தன் புத்தகம் உயர்ந்து நிற்க வேண்டும் என்றே நினைத்திருப்பார், அது (அந்தோ) வீழ்கிறதெனினும், அது மண்ணைக் கவ்வி விட்டது என்று நீ சொல்வதானால், நீ அப்படி சொல்ல வேண்டிய சூழ்நிலைகளும் வரும், நீ எந்த காழ்ப்பும் எந்த மகிழ்ச்சியும் இல்லாமல் அதை சுட்டிக் காட்ட வேண்டும்.
அவர் சொன்னதில் எனக்கு இது பிடித்திருந்தது-
உனக்குப் பிடித்த எழுத்தைப் படி, அதை நீ ஏன் விரும்புகிறாய் என்று எழுது. உன் வாசகர்கள் உன்னை செவித்ததற்காக சந்தோஷப்படுகிற மாதிரி அதை செய். அவர்களின் காலம் மதிப்புடையது. உன்னுடையதும்தான்.