முன்னாவது பரவாயில்லை, அச்சிட்டு வந்து விட்டால் ஒன்றும் பண்ண முடியாது, இப்போது எல்லாம் மென்பொருள்தானே, நினைத்த திருத்தங்களை நினைத்தபோது செய்து கொள்ளலாமே, நீங்கள் செய்வீர்களா என்று சில எழுத்தாளர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அதில் ஜான் பான்வில் என்பவர் சொன்னது படிக்க நன்றாக இருந்தது-
"
இது ஒரு சுவையான கேள்வி. ஏன், நாம் காகிதத்தில் திருத்தியே மீண்டும் பதிப்பிக்கலாமே என்ற எண்ணம்தான் முதலில் தோன்றியது- ஆடன் தன் கவிதைகளில் பலவற்றைத் திருத்தி மீண்டும் பிரசுரம் செய்திருக்கிறார். எனவே, முன் எப்போதும் இல்லாத ஒன்றை இந்த புதிய தொழில்நுட்பம் நமக்கு சாத்தியப்படுத்தி உள்ளது என்று நான் நினைக்கவில்லை. என்ன ஒன்று, இப்போது திருத்தங்களை செய்வது சுலபமாகவும் செலவு குறைவாகவும் இருக்கிறது.
"என்னைப் பொருத்தவரை என் பழைய ஆக்கங்களுக்குத் திரும்புவது என்பது என்னால் தாள முடியாத ஒன்று. என் பான்வில் புத்தகங்கள் என்னை எதிர்நோக்கி நிற்கும் அவமானங்கள் என்று நான் இதற்கு முன் பலமுறை சொல்லியிருக்கிறேன். இது தவறாக புரிந்து கொள்ளப்படலாம்: நம் எல்லாருக்கும் தெரியும், என் புத்தகங்கள் மற்ற எல்லாருடைய புத்தகங்களையும்விட சிறந்தவை, என் திறமையை நினைத்துப் பார்த்தால் மட்டுமே அவை தோல்விகள். என்னால் அவற்றின் குறைகளை மட்டுமே பார்க்க முடிகிறது. நான் பூரணத்துவத்தைத் தேடிச் செல்கிறேன், அது கிடைக்காத விஷயம். பெக்கட் சொல்கிற மாதிரி, "மீண்டும் விழு, இன்னும் நன்றாக விழு". அதுதான் கலைஞனின் விதி. எனவே என் கடந்த கால தோல்விகளை இனி வரும் தலைமுறைகளுக்குக் கொடையாய் கொடுத்துவிட்டு இனி என்னால் எவ்வளவு நன்றாக விழ முடியுமோ அவ்வளவு நன்றாக விழ நான் முயற்சிக்கிறேன்.