16/8/11

என் எழுத்து முறை - சினுவா அசேபே

இது சென்ற பதிவின் தொடர்ச்சி. சினுவா அசேபே தன் எழுத்து முறை குறித்து பேசுகிறார்.

கேள்வி:
உங்கள் ஆக்கம் உருவாவது குறித்து ஏதேனும் சொல்ல முடியுமா? முதலில் எது வருகிறது? ஒரு பொது எண்ணம், அல்லது குறிப்பாய் ஒரு சூழ்நிலை, கதையோட்டம், பாத்திரம்?

அசேபே:
ஒவ்வொரு புத்தகத்துக்கும் அது ஒரே மாதிரி இருப்பதில்லை. பொதுவாகப் பேசினால், முதலில் வருவது ஒரு பொதுப்படையான எண்ணம் என்றுதான் நான் சொல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து, அதனுடன் என்று சொல்ல வேண்டும், பிரதான பாத்திரங்கள் வருகின்றன. நாம் பொதுப்படையான எண்ணக்கடலில் வாழ்கிறோம், அதில் நாவலாக எதுவுமில்லை, ஏனென்றால் ஏராளமான பொதுக் கருத்துகள் இருக்கின்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட கருத்து ஒரு பாத்திரத்தோடு இணையும் கணம் ஒரு என்ஜின் அதை செலுத்துவது போன்றது, அங்கே நாவல் துவக்கம் பெறுகிறது. குறிப்பாக இறைவனின் அம்பு என்ற நாவலில் வரும் எசூலூ போன்ற தனித்துவம் மிக்க அதிகாரம் செலுத்தும் பாத்திரங்கள் உள்ள நாவல்கள் விஷயத்தில் இப்படித்தான் நடக்கிறது. மக்களில் ஒருவன், அதைவிட, இனிமேலும் சுகவாசம் இல்லை, என்பன போன்ற பேராளுமையாய் இல்லாத பாத்திரங்கள் கொண்ட நாவல்களின் துவக்க கட்டங்களில் பொது எண்ணம் பெரும்பங்காற்றுகிறது என்று நினைக்கிறேன். ஆனால் துவக்க கட்டத்தைத் தாண்டிவிட்டபின் இனியும் பொதுக் கருத்துக்கும் பாத்திரத்துக்கும் வேற்றுமை இருப்பதில்லை- இரண்டும் வேலை செய்தாக வேண்டும்.

(பிளாட் என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன என்று தெரியவில்லை. கதையோட்டம் என்ற சொல்லை அந்தப் பொருளில் பயன்படுத்துகிறேன். )

கேள்வி:
கதையோட்டத்தின் இடம் என்ன? நீங்கள் எழுத எழுத கதையோட்டத்தை உருவாக்கிக் கொள்கிறீர்களா? அல்லது பாத்திரங்களில் இருந்து, கதைக்கருவிலிருந்து கதையோட்டம் வளர்கிறதா?

அசேபே:
நாவல் உருவாகத் துவங்கியதும் அது நிறைவு பெற்றுவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டால் நான் கதையோட்டத்தைப் பற்றியோ கதைக்கருவைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. அவை தாமாகவே உருப்பெறும், இப்போது பாத்திரங்கள் கதையை இழுத்துச் செல்லத் தலைப்படுகிறார்கள். ஏதோ ஒரு கட்டத்தில் கதையும் அதன் நிகழ்வுகளும் நீ நினைத்த மாதிரியில்லாமல் உன் கட்டுப்பாட்டை மீறி விடுகிறது என்பது போலாகிறது. சில விஷயங்கள் ஒரு கதையில் இருந்தாக வேண்டும், அது இல்லாமல் கதை நிறைவு பெறுவதில்லை. அவை தாமாகவே கதைக்குள் வந்து விழும். அவை அப்படி வந்து சேரவில்லை என்றால் உனக்குப் பிரச்சினை வந்து விட்டது என்று பொருள், அப்போது உன் நாவல் நின்று விடுகிறது.

தீவிரமான எழுத்தாளர்களில் யாரும் நேரம் வரட்டும் எழுதுவோம் என்று காத்திருப்பதாகத் தெரியவில்லை. அசேபேயின் ருடீன் இப்படி போகிறது:

பொழுது விடிந்ததும் நான் எழுதத் துவங்கிவிடுகிறேன். நான் இரவு வெகு நேரமும் எழுதுகிறவன்தான். பொதுவாக நான் தினமும் இத்தனை சொற்கள் எழுத வேண்டும் என்று கணக்கு வைத்துக் கொண்டு எழுதுவதில்லை. நிறைய எழுதினாலும் எழுதாவிட்டாலும் தினமும் எழுத வேண்டும் என்ற ஒழுங்கு இருக்க வேண்டும். நீ நிறைய எழுதும் நாளில் நிச்சயம் நன்றாகத்தான் எழுதியிருப்பாய் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. என் மேல் ஒரு கடுமையான டைம்டேபிளை சுமத்திக் கொள்ளாமல் எப்படி தினப்படி ஒழுங்காக எழுதுவது என்பதற்கான முயற்சியைத் தொடர்கிறேன், அப்படி செய்ய முடிந்தால் எனக்கு முழு நிறைவாக இருக்கும்.

(அசெபேயின் புகழ் பெற்ற நாவல் குறித்த நல்ல ஒரு அறிமுகம் இங்கே இருக்கிறது: Things Fall Apart / Invitation to World Literature)