1/8/11

அழகின் சிறு ஒளி

எண்பதாயிரம் யூரோ மதிப்புள்ள கடலூன்யா சர்வதேசப் பரிசைப் பெற்ற ஹரூகி முரகாமி ஆற்றிய, பெருமளவில் அணுசக்திக்கு எதிரான, உரையில் என்னைக் கவர்ந்த பகுதி-
ஜப்பானிய மொழியில் மூஜோ (無常) என்ற சொல் உண்டு. எதுவும் நிலைத்திருப்பதில்லை என்பதே அதன் பொருள். இந்த உலகில் பிறந்தவையனைத்தும் மாறுதலுற்று மறைந்தே போகும். இந்த உலகில் நமக்குச் சாரமாய் நித்தியமாகவோ நிலையானதாகவோ எதுவுமில்லை. உலகைக் குறிந்த இந்தப் பார்வை பௌத்தத்திலிருந்து பெறப்பட்டது, ஆனால் மூஜா என்னும் கருத்துரு ஜப்பானியர்களின் ஆன்மாவில் தீத்தழும்பாய் உருவேற்றம் பெற்றுள்ளது, அது ஜப்பானிய இன பொது புத்தியில் வேர் கொண்ட ஒன்று.

"எல்லாம் இப்போது போயின" என்ற எண்ணம் விரக்தியை வெளிப்படுத்துகிறது. இயற்கைக்கு எதிராகச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம். ஜப்பானிய மக்கள் இந்த விரக்தியில் அழகின் வெளிப்பாட்டைக் கண்டுள்ளனர்.

வேனிற்பருவத்தின் செர்ரி மலர்ச் செறிவை, கோடையின் விட்டில்பூச்சிகளை, இலையுதிர் காலத்தின் செவ்விலைகளை நாங்கள் நேசிக்கிறோம். அவற்றை பேராவலுடன் கூட்டம் கூட்டமாகக் கண்டு ரசிப்பதை ஒரு மரபின் தொடர்ச்சியாக செய்வதை நாங்கள் இயல்பான விஷயமாக நினைக்கிறோம். செர்ரி மலரும் இடங்கள், விட்டில் மற்றும் சிவந்த இலைகள் தத்தம் பருவங்களில் சிறப்பிக்கப்படும் இடங்களில் ஹோட்டல்களில் முன்பதிவு கிடைப்பது எளிதல்ல, அங்கு கூட்டம் கூட்டமாக மக்கள் பயணம் வந்து கூடியிருப்பதை எப்போதும் காண்கிறோம்.

ஏன்?

செர்ரி மலர்கள், விட்டில் பூச்சிகள், செவ்விலைகள் தங்கள் அழகை வெகு விரைவில் இழக்கின்றன. இந்த மகத்தான கணத்தின் தரிசனம் பெற நாங்கள் வெகு தொலைவு பயணம் செய்கிறோம். அவை வெறுமே அழகாக மட்டுமில்லை, இப்போதே அவற்றின் அழகு மறையத் தொடங்கி விட்டது, அவற்றின் சிறு ஒளியையும் அழகின் பிரகாசத்தையும் இழக்கத் துவங்கி விட்டன என்பதை உறுதி செய்து கொள்வதில் சிறிது நிறைவடைகிறோம். அழகின் உச்சம் தொட்டுக் கடந்து செல்லப்பட்டு மறைந்து விட்டது என்ற உண்மை எங்கள் மனதுக்கு சாந்தியளிக்கிறது.