21/8/11

காத்தோடு போயாச்சு!

இப்போது 90களில் இருக்கும் என் கஸின் இரண்டாம் உலகப் போரில் வார்சா கெட்டோவில் இருந்தார். அவரும் கெட்டோவில் இருந்த மற்ற பெண்களும் தினமும் தையல் வேலை செய்தாக வேண்டும். நீ புத்தகத்தோடு மாட்டிக்கொண்டால் ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் மரண தண்டனை தந்து விடுவார்கள். அவருக்கு ‘Gone With the Wind’ன் ஒரு காப்பி கிடைத்திருந்தது. தினமும் தூங்கக் கிடைக்கும் நேரத்தில் மூன்று முதல் நான்கு மணி நேரம் அவர் அதைப் படிப்பதற்கு செலவிடுவார். அடுத்த நாள் தையல் வேலையைச் செய்யும் அந்த ஒரு மணி நேரத்தில் அவர் தான் படித்த கதையை தன்னுடனிருப்பவர்களுக்குச் சொல்வார் . ஒரு கதைக்காக இந்தப் பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்தார்கள். என் கஸின் இதை என்னிடம் சொன்னபோது எனக்கு நான் செய்வது மிகவும் முக்கியமானதெனப் புரிந்தது. கதைகள் ஆடம்பரமல்ல. அவற்றுக்காக நீ வாழவும் சாகவும் செய்கிறாய்.
- நீல் கைமன்

Gone with the wind இலக்கியமா என்ன என்று கேட்டால் நம்மில் பலர் திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி திருதிருவென்று முழிப்போம், பாருங்கள், அதற்காகவும் சாகத் தயாராக இருக்கிறார்கள். வேறெங்கோ வேறொருவர் சொன்ன மாதிரி, சரியான சமயத்தில் உன்னைச் சேர்ந்து உன் வாழ்க்கைக்குப் பொருள் தரும் புத்தகம்தான் இலக்கியம். அதை ஒரு நிறப்பிரிகை போல் பார்ப்பதுதான் நியாயம். ஒரு காலகட்டத்தில் உங்களுக்கு முக்கியமாகத் தெரிந்த புத்தகம் பின்னொரு சமயத்தில் அற்பமாகத் தெரியலாம். ஆனால் நம் உணர்வுகள் உண்மையானவையாக இருந்திருந்தால், அது இன்றைக்கும் வேறொருவருக்கு முக்கியமாக இருக்கக்கூடும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலே மேலே சென்று கொண்டிருக்கிறவர்கள் ஏறிய ஏணியை எட்டி உதைக்கலாம், தவறில்லை, அதை சுமந்து செல்ல முடியாது. ஆனால் அதை அப்படியே விட்டு வைக்கவும் செய்யலாம்- இன்னொருத்தருக்கு உபயோகமாக இருக்கும்.