16/2/11

அழகின் லபிதம்

மரிலின் ராபின்சன் (Marilynne Robinson) குறித்து ஒரு நல்ல கட்டுரை-

"மனிதர்களுக்கு ஆன்மா உள்ளது என்ற உண்மையையே ராபின்சனின் மனித நேயம் தன் தளமாகக் கொண்டுள்ளது. ஆன்மா- அகத்தினுள் அகண்டத்தின் ஆக்கிரமிப்பு- ஒரு புனித மர்மமும் கருணையுமாகும். நமக்கு ஆன்மா இருக்கிறதென்ற உண்மையை மனமறிய ஏற்கும்போது அத்தோடு கூட அதிசயங்களும் கடமைகளும் நம்மைச் சேர்கின்றன. கலையிலும் இசையிலும் தத்துவத்திலும் நமது ஆன்மா தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடும்; "நன்னடத்தை"யால், கவனமான சித்த இயக்கத்தால் அவை பண்படக்கூடும்; அற்ப விஷயங்களின் அழகில் இன்பம் காணக்கூடும்; அன்பு மேலிட்டு மன்னிக்கக்கூடும். நாம் நமது இயல்பு குறித்து ஒரு சிறிய அளவிலேனும் அறிவுற வேண்டுமெனில் நாம் இவற்றை இவ்வண்ணம் செய்தாக வேண்டும்... ராபின்சனின் படைப்புகள் "நாம் இருக்கிறோம் என்ற மர்மத்தின் சிறு துகளையேனும் ஏற்றுகொள்ளக்கூடிய அளவில் அகண்ட ஒரு மானுடத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்" என்று நம்மைக் கோருகின்றன (135, Absence of Mind).

"இதை எப்படி சாதிப்பது? ராபின்சனின் எழுத்தில் நாம் விடை காண முடியுமெனில், நமது எதிர்வினை அழகியல் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவரது நாவல்கள் அழகில் நம் கவனத்தை நிலை நிறுத்தக்கூடியவையாய் இருக்கின்றன. ஒளியில், சாம்பலில், நீல உடையில், இலைகளின் தண்ணீரில், டோஸ்டில் வெண்ணையில் உள்ள தாளவொண்ணா அழகை நின்று நிதானித்து ருசிக்கிறார் அவர் தன் நாவல்களில். ராபின்சன் படைக்கப்பட்ட இந்த உலகை தீவிரமாக நேசிக்கிறார்- அந்த நேசம் ஒரு வலிபோல் உக்கிரமானதாக இருக்கிறது, அவருக்கு உலகும் நம்மைப் போலவே புனிதமானது என்ற உண்மை புலப்பட்ட ஒன்றாயிருக்கிறது.

"அண்மையில் ஒரு நேர்முகத்தில் ராபின்சன் விளக்குகிறார், "நாம் சரியான முறையில் பார்த்தால், எல்லாரும் எல்லாமும் தன்னைச் சுற்றி ஒரு தியான வெளியைக் கொண்டதாய் இருக்கும் என்று நாமறிவோமென நான் நினைக்கிறேன்... இந்த மர்மம் குறித்த அறியாமையே நாமறியாத விழுமியமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. நான் ஒரு மந்திரவாதியின் மர்மத்தைப் பற்றிப் பேசவில்லை, வாழ்வின் அடிப்படை ஆழத்தில் உள்ள மர்மத்தை சொல்கிறேன், மனிதர்களையும் மற்ற விஷயங்களையும் தீர்க்கமாக சற்று நேரம் உள்ளபடியே உற்று நோக்கினால் நாமறியக்கூடிய மர்ம உணர்வைப் பற்றிப் பேசுகிறேன்"

மரிலின் ராபின்சன் எழுதிய கிலியட் என்ற நாவலை நான் படித்திருக்கிறேன்- கதையோட்டமே இல்லாமல் தெளிந்த நீரோடை போல அசைவற்றிருக்கும் அவரது எழுத்தின் அமைதி.

உலகில் எவ்வளவு விவகாரம் இருந்தாலும், மனம் தன்னிலைக்கு வருவது அமைதியில்தானே? அழகின் லயிப்பில் அன்றி வேறெங்கு நமக்கு இந்த அமைதி எளிதில் வசப்படுகிறது? தன்னிருப்பின் அதிசயத்தை உணர அவகாசமில்லாத நமக்கு வெளி உலகம் மற்றும் அந்நிய மனிதர்களை நாட்டத்துடன் கருத காரணம் இருக்கப் போகிறதா என்ன?

கவனம் என்ற ஒன்றை சொல்கிறார்களே, அதில்தான் இருக்கிறது மர்மம் என்று நினைக்கிறேன்- அழகின் லயிப்பில் நம்மை ஆழ்த்தக்கூடிய கலைக்கு இந்த மர்ம உணர்வு தேவை- சொற்களால் சொல்வதற்கில்லாத இருப்பின் மெய்ம்மை குறித்த ஆச்சரியம், நிரதிசயம் எந்த ஒரு நல்லிலக்கியத்துக்கும் இன்றியமையாத ஒன்று என்று தோன்றுகிறது.

இதை அழகு என்றும் சொல்லலாம், கருணை என்றும் சொல்லலாம்.