28/2/11

நான் வெறுக்க மாட்டேன்- ஒரு மருத்துவரின் மகத்தான மானுடம்

நாம் அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் நின்றுக் கொண்டிருக்கிறோம்- இங்கேதான் நான்கு இனிய இளம் பெண்கள் அமந்திருந்தனர், தங்கள் கனவுகளையும் நம்பிக்கைகளையும் உருவாக்கியபடி. நொடிகளில் அவர்களின் அத்தனை கனவுகளும் கொல்லப்பட்டன. இந்த மலர்கள் மரணமடைந்தன. என் பெண்களில் மூவரும், என் சகோதரர் பெண்ணும் ஜனவரி மாதம் பதினாறாம் தேதி மாலை ஐந்தே கால் மணியளவில் ஒரு கணப்போதில் கொலை செய்யப்பட்டனர். நான் அவர்களை விட்டுச் சென்ற சில நொடிகளில் இது நிகழ்ந்தது- அவர்கள் மட்டும் இந்த அறையில் இருந்திருந்தனர். என் இரு பெண்கள் இங்கேயும், ஒரு பெண் இங்கேயும், இன்னொரு பெண் இங்கேயும் இருந்தார்கள்- என் சகோதரர் பெண்ணும் அவர்களுடன் இருந்தாள்.

முதல் ஷெல் அங்கேயிருந்து வந்தது, நாற்காலிகளில் அமர்ந்திருந்த என் இரு பெண்களை ஷெல்லடிக்க வந்தது டாங்கி. ஷெல் விழுந்த சப்தம் கேட்டதும் நான் என்ன நடந்து என்று பார்க்க இந்த அறைக்குள் வந்தேன். என் பெண்களை என்னால் அடையாளம் காண முடியவில்லை. அவர்கள் தலைகள் உடலிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தன. யாருடைய உடல் இது என்று எனக்கே அடையாளம் தெரியவில்லை. அவர்கள் குளம் போல் தேங்கிக் கிடந்த ரத்தத்தில் மூழ்கிக் கொண்டிருந்தனர். இதுதான் அந்த ரத்தக் குளம். இங்கேயும் பாருங்கள். இது அவர்களது மூளை. இவை அவர்களது மூளையின் பகுதிகள். அயா தரையில் படுத்திருந்தாள். ஷதா காயமுற்றிருந்தாள், அவளது கண் வெளியே வந்துக் கொண்டிருந்தது. அவளது விரல்கள் கிழிந்து விட்டன, ஒரு தோல் திரியால் அவை உடலோடு இணைந்திருந்தன. நான் நிராகரிக்கப்பட்ட அன்பை உணர்ந்தேன், வெளியின்றி அலறினேன், "நான் என்ன செய்யட்டும்?"

முதல் ஷெல்லோடு அவர்கள் திருப்தியடையவில்லை- என் மூத்த பெண்ணை அவர்கள் விட்டு வைப்பதாயில்லை. சீக்கிரமே இரண்டாவது ஷெல் அயாவைக் கொல்ல வந்தது, மூன்றாவது மாடியிலிருந்து இறங்கி வந்த என் சகோதரரின் பெண்ணை சிதைக்க வந்தது, சமையலறையில் இருந்து அக்கணத்தில், "அப்பா! அப்பா! அயாவுக்கு அடி பட்டுவிட்டது," என்று அலறியபடி குதித்தோடி வந்த என் மூத்த மகள் பெஸ்ஸானைக் கொல்ல வந்தது அந்த ஷெல்.

இரண்டாவது ஷெல். அது இந்த அறையின் சுவற்றைத் துளைத்துக் கொண்டு அடுத்த அறைக்குள் சென்றது. பாருங்கள். இந்த அறையில்தான் ஆயுதங்கள் இருந்தன, ஆயுதம் நிறைந்து கிடந்த இந்த அறைக்குள்தான் ஷெல் விழுந்தது. இவைதான் இந்த அறையில் இருந்த ஆயுதங்கள். இவைதான் ஆயுதங்கள். இவையேதான் ஆயுதங்கள்: இந்தப் புத்தகங்களும் என் பெண்களின் ஆடைகளும். இதோ பாருங்கள் அறிவியல் பாடங்கள். இதோ. பாருங்கள், அவள் வகுப்புப் பாடப் புத்தகங்கள்- இப்போது ரத்தக் கறை படிந்திருக்கின்றன. என் மகளின் ரத்தத்தில் தோய்ந்திருக்கின்றன. இந்தப் புத்தகங்கள்தான். என் பெண்கள் தரித்திருந்த ஆயுதங்கள் இவைதான்- கல்வி, அறிவு, கனவுகள், நம்பிக்கைகள், நேசங்கள்.

நான் ஒரு மகப்பேறு மருத்துவன். நான் என் பொழுதுகளின் பெரும்பாலான காலத்தை இஸ்ரேலில் பணியாற்ற செலவிட்டேன். நான் பயிற்சி எடுத்துக் கொண்டது இஸ்ரேலில். நான் என் வாழ்வையும் பணியையும் மானுடத்துக்கு, அதன் நலனுக்கு அர்ப்பணித்திருந்தேன். யாரையும் நான் தேர்ந்தெடுத்து உதவவில்லை, நான் என் நோயாளிகளில் பேதம் பார்ப்பவனாக இருந்திருக்கவில்லை. நான் நோயுற்றவர்களுக்கும் மனிதர்களுக்கும் மட்டுமே சிகிச்சை தந்திருகிறேன். நாம் நோயுற்ற அனைவரையும் ஒன்றேபோல் காண வேண்டும், மரியாதையுடன், அவர்களுக்குரிய கௌரவத்தையும் நம்பிக்கையையும் காப்பாற்றித் தர வேண்டும். அரசியல்வாதிகளும் தலைவர்களும் இந்த விழுமியங்களையும் மனப்பாங்கையும் மருத்துவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தப் படையெடுப்பு, துவக்கத்திலேயே நான் சொன்னேன், இதனால் ஒரு பயனுமில்லை என்று. இது பிரயோசனமில்லாத சண்டை. யாரும் இதில் வெற்றி பெற முடியாது. அப்பாவி பொதுமக்கள். காஜாவாசிகள். படையெடுப்பின் விலையை பொதுமக்கள் கொடுத்தார்கள், வேறு யாருமில்லை.

ராணுவ முனைப்புகள் தோற்றுப் போய் விட்டன. நாம் நமக்கு உரிமைகளைக் கொடுத்துக் கொள்ள வேறு வழிகளைக் காண வேண்டும். அமைதியைப் பற்றிப் பேசி எதுவும் ஆகப் போவதில்லை- அதில் நமக்கு இஷ்டமில்லை. அமைதி- அமைதி என்ற சொல் தன் பொருளை இழந்து விட்டது. நாம் வேறொன்றைத் தேடி அடைய வேண்டும்- சமத்துவம், நீதி, கூட்டுச் செயல்பாடு. நாம் அவற்றை நோக்கிச் செல்ல வேண்டும்.

இவ்வாறு பேசிய இஸ்ஸல்டின் அபுஎளிஷ் ஒரு மருத்துவர். இஸ்ரேல் பாலஸ்தீனிய ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இணைந்து நடத்திய பள்ளியில்தான் மாண்ட அவர்களது மகள்கள் படித்திருந்தனர். எல்லாருக்கும் தெரிந்திருந்த அவர், தொலைகாட்சி முதலான ஊடகங்கள் மூலம் அனைவரும் அறிந்திருந்த அவரது இல்லம், இஸ்ரேலிய ராணுவத்தினரால் திட்டமிட்டு குறி பார்த்து ஷெல்லடித்து சேதப்படுத்தப்பட்டது.


அவர் தற்போது ஒரு புத்தகம் எழுதி வெளியாகி வந்துள்ளது- "நான் வெறுக்க மாட்டேன்- அமைதியையும் மானுட சுயமரியாதையும் நோக்கிய ஒரு காஸா மருத்துவரின் பயணம்". இது குறித்த விரிவான கட்டுரை கார்டியனில் இருக்கிறது.


தன் பெண்களின் நினைவாக இணையத்தில் ஒரு வலைத்தளம்.


யூட்யூபில் அவரது நேர்முகம்-