22/2/11

செகாவின் மீது தமிழ் பொழிகிறது....



தமிழில் அண்மைக்காலமாக "எங்கெங்கு நோக்கினும் செகாவடா" என்று பாடத்தக்க சூழல் எழுந்திருக்கிறது- 
செகாவ் சிறுகதையின் எழுத்துக் கலையை சொல்லிக் கொடுத்தால் நமக்குப் படிக்கக் கசக்கிறதா என்ன! இதோ செகாவ்- 

எப்போதும் வெற்றிகளையும் தோல்விகளையும் தவறே இல்லாமல் சரியாக அடையாளம் காண்பவன் கடவுளாக இருக்க வேண்டும்.

இயற்கை வர்ணனைள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அதற்கு அவசியம் வரும்போது மட்டும் அதை செய்தால் போதுமானது. "அந்தி சூரியன், இருட்கடலின் அலைவாயில் விழுகையில் தன் பொற்கிரணங்களை அள்ளி வீசினான் இத்தியாதி," "நீர்பரப்பின் மேல் சிறகடித்துப் பறந்த சிட்டுக் குருவிகள் உற்சாகமாய் சீட்டியடித்தன இத்தியாதி" போன்றவை பழகிப் போன விஷயங்கள்- இந்த வகையான பொது புத்திக்குப் பழகிப் போன விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். இயற்கையை வர்ணிக்கும்போது நீ நுட்பமான குறிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்,  அவற்றை நீ தொகுத்துக் கொடுப்பதை படித்துவிட்டு கண்களை மூடிக் கொண்டால் சொல்லப்பட்ட காட்சி கண்ணுள் விரிய வேண்டும். உதாரணத்துக்கு நிலவொளியில் ஒரு இரவைக் கண்முன் கொண்டுவர வேண்டுமென்றால் அங்கே இருந்த நீரிறைக்கும் யந்திரத்தைச் சுற்றியிருந்த நீர்த்தேக்கத்தில் ஒரு உடைந்த கண்ணாடிக் குப்பி பிரகாசமான நட்சத்திரம் போல் ஒளி பளிச்சிட்டு மறைந்தது, ஒரு நாய் அல்லது ஓநாயின் கரிய நிழல் ஒரு பந்தைப் போல் உருண்டோடியது, என்றெல்லாம் எழுது.

உளவெளி உலகுக்கும் நுட்பமான விபரங்கள் தேவை. அங்கேயும் நீ பழகிப்போன விஷயங்களையே சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து ஆண்டவன் உன்னைக் காப்பாற்றட்டும். எல்லாவற்றுக்கும் மேலே, கதாபாத்திரத்தின் ஆன்மீக நிலை குறித்த வர்ணனனைகளை வெறுத்து ஒதுக்கு. அவர்களின் செயல்களைக் கொண்டு இதைத் தெளிவாக வெளிக் கொணர நீ முயற்சிக்க வேண்டும். அளவுக்கதிகமான பாத்திரங்களை முயற்சி செய்யாதே. கதையின் கனம் இரண்டே பாத்திரங்களில் மையம் கொண்டிருக்க வேண்டும்- அவனும், அவளும்.

நீ கஷ்டப்படுபவர்களையும் அதிர்ஷ்டம் கெட்டவர்களையும் விவரிக்கும்போது, அவர்களுக்காக வாசகர்கள் இரக்கப்பட வேண்டும் என்று நினைப்பாயானால், உணர்ச்சிவசப்படாமல் எழுத முயற்சி செய்- இது இன்னொருவரின் துக்கத்துக்கு ஒரு பின்புலம் தருவதாக இருப்பது போல் தெரிகிறது, இந்த இரக்கமில்லாத எழுத்தின் பின்னணியில் துயரம் தனித்து, தெளிவாய் புலனாகிறது. ஆனால் உன் கதையில் பாத்திரங்கள் அழுகிறார்கள், நீயானால் பெருமூச்சு விடுகிறாய். ஆமாம், நீ உன் உணர்ச்சிகளைத் தணித்துக் கொள்.. நீ எவ்வளவுக்கு எவ்வளவு உணர்ச்சிவசப்படாமல் துல்லியமாக விவரிக்கிறாயோ அந்த அளவுக்கு உன் எழுத்தின் தாக்கமும் இருக்கும்.

என் அனுபவத்தில் கதையை எழுதி முடித்தாகி விட்டபின் அதன் துவக்கத்தையும் முடிவையும் அடித்து விட வேண்டுமென்பதே சரியாக இருக்கிறது. அங்கேதான் நம்மைபோன்ற கதை சொல்லிகள் அதிகமாக பொய் சொல்கிறோம்.

நன்றி: The Recording

இங்கே பொலானோ, யூடோரா வெல்டி, டான் டி லிலோ மற்றும் பலர் இந்த மாதிரி இன்னும் என்னென்னவோ சொல்லியிருக்கிறார்கள்.