24/2/11

உத்தம கலைஞர்களும் அவர்களது ஆராதகர்களும்

வாழ்வின் ஜீவாதார புதிர்களுடன் போராடுகிறது மருத்துவம் என்று சொல்கிறார், ஜெரோம் க்ரூப்மேன்- பிறப்பின் அதிசய கணம், மரணத்தின் திடுக்கிடும் பிரிவு, வேதனையில் வாழ்வின் பொருள் காணப் போராட்டம்.

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஏன் நல்ல இலக்கியம் படைத்தவர்களில் நிறைய பேர் மருத்துவர்களாக இல்லை? செகாவ், கானன் டாய்ல், சாமர்செட் மாம், வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்... இந்த வரிசையில் இன்னும் நிறைய பேர் இருக்க வேண்டும் இல்லையா?

யோசித்துப் பாருங்கள்- நம் வாழ்வில் உன்னதமான, உச்ச கணங்களை நாம் எத்தனை முறை எதிர்கொள்கிறோம்? ஆனால் மருத்துவர்கள் தீவிர உணர்வுகளோடு புழங்குகிறார்கள்- அவர்களுடைய அன்றாட அனுபவங்களைக் கொண்டு அவர்கள் சொல்லக் கூடிய கதை எத்தனை இருக்கும்- வாழ்க்கை குறித்து அவர்கள் நமக்குக் காட்டக்கூடிய படம் எவ்வளவு உக்கிரமாக இருக்கும்!

ஆனால் அவர்களுக்கு இதையெல்லாம் எழுதவோ சிந்திக்கவோ நேரம் கிடைப்பதில்லை என்று நினைக்கிறேன்.

0o0o0o0

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்- செகாவை விட!

அவருக்கு டெனிஸ் லேவேர்தோவ் (சாமானிய கவிஞரல்ல) எழுதிய கடிதம்:

அன்புள்ள வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் அவர்களுக்கு,


நான் உங்களுக்கு எப்போதோ கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஆனால் உங்கள் கையெழுத்தை வேண்டியோ வேறு எதற்காகவோ என்னை நோக்கி உங்கள் கவனத்தை ஈர்க்க நினைத்து நான் உங்களுக்கு எழுதுகிறேன் என்ற எண்ணம் எழக்கூடும் என்று தோன்றியது. அதனால் இதுவரை எழுதவில்லை. இப்போது இது ஒரு முட்டாள்தனம் என்று முடிவு செய்து விட்டேன். ஒருவன் இன்னொருவனுடைய வாழ்வில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால்- நீங்கள் என் வாழ்விலும் என் கணவரின் வாழ்விலும் செய்திருக்கிற மாதிரி-. அவனது படைப்புகள் இன்னொருவனுக்கு சுவையும் ஊக்கமும் தந்து அவனுடைய உணர்வையும் அறிவையும் துளைத்து உட்புகுந்து அவனது படைப்பூக்கத்தை இயக்குவதாக இருந்தால்- அது நிச்சயம் தெரிய வர வேண்டும். நன்றி.


தங்கள் உண்மையுள்ள,
டெனிஸ் லெவெர்தோவ் குட்மான்

இந்த வாசகர் கடிதத்துக்கு வில்லியம் கார்லோஸ் வில்லியம் என்ன பதில் எழுதி இருப்பார் என்று நினைக்கிறீர்கள்? அங்கேதான் நம் டாக்டர் நிற்கிறார்!

அன்புள்ள டெனிஸ் குட்மான்,


தன்னை ஆராதிப்பவர்களிடம் பெரிய அளவில் எதிர்வினையாற்றக் கூடியவனாக மனிதனாகப்பட்டவன் இருக்க வேண்டும். அது ஆராதகர்களது உரிமை, அவர்கள் அலட்சியமாக அங்குமிங்கும் தங்களுடைய போற்றுதலை வீணாக்குவதில்லை. அதனால் நான் என் மண்டைக்குள் பார்க்கும் போதெல்லாம் மிக அற்பமாக என்னை உணர்கிறேன், என்னை நான் எவ்வளவு சின்னவனாகக் காண்கிறேன் தெரியுமா! அவர்கள் நினைக்கிற ஆள் நானல்ல. அவர்கள் நன்மைக்காக நான் யாராக இருக்க வேண்டுமோ அவன் நானில்லை. அவர்கள் என்னைவிட உயர்ந்த ஒன்றுக்குத் தகுதியானவர்கள். இன்னும் சொல்லப்போனால் மகோன்னதமானவனாகத் தோன்ற வேண்டியது ஒரு கலைஞனின் கடமையாகும். ஆனால் அது என்னால் முடியாது. என்ன ஒரு முட்டாள் நான்.


என்னுடைய அருகதை குறித்து நானறிந்த உண்மையைக்கூட என்னால் நம்ப முடியவில்லை. நான் வெளிப்படுத்துவதை வைத்து தான் "வாழ்வதாக" ஒருவர் சொல்லும்போது எனக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. ஆனால் நானும்கூட ஒரு சில செயல்களின் அடிப்படையில் வாழ்கிறேன் என்றால் மற்றவர்களும் ஏன் அப்படி செய்யக் கூடாது? ஆனால் நாம் மிக எளிவர்கள், நம் செயல்கள் அத்தனை மோசமாக விரயம் போவது போல் இருக்கிறது. நான் பாழில் விழத் தயார், ஆனால் அங்கு யாரையும் என்னோடு இழுத்துச் செல்ல எனக்கு விருப்பமில்லை. அதை நான் நினைத்தும் பார்க்க மாட்டேன்.


இதோ இங்கே நான் இருக்கிறேன், என் வளைக்குள் ஒரு தவளை போல். உங்கள் கடிதத்துக்கு நன்றி.


தங்கள் உண்மையுள்ள,
வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்.

0o0o0o0

இங்கே தமிழ் படிக்கத் தெரிந்த அனைவருக்கும் ஆங்கிலமும் தெரியும்- எனது மொழிபெயர்ப்பில் குறைகள் இருக்கின்றன. இங்கே அதை ஆங்கிலத்தில் படிக்கலாம்.

தன் ஆராதகர்களோடு ஒரு கலைஞன் எத்தகைய எதிர்வினையாற்ற வேண்டும் என்று சொல்ல நாம் யார்?

அவர்களை ஒரு ஆதர்ச உலகுக்கு அழைத்துச் செல்ல நினைப்பவன், அவர்களுக்கு வாழ்வின் உயர்ந்த, தீவிரமான கணங்களைக் காட்ட நினைப்பவன், மகோன்னதங்களாலும் பேராளுமைகளாலும் வாழ்வை முத்திரையிட நினைப்பவன் செய்யும் எதிர்வினைகள் ஒரு முனை என்றால், தன் ஆராதகர்களைத் தன் உலகில் நிறுத்த நினைப்பவன், அவர்களுக்கு வாழ்வின் இயல்பான, உண்மையான நிகழ் தளங்களை அதே தீவிரத்துடன் காட்ட நினைப்பவன், எத்தகைய உயரங்களைத் தொட்டாலும் மனிதன் அற்பத்தனமும் சிறுமையும் கொண்டவன்தான் என்ற உண்மையை முன்னிறுத்த நினைப்பவன் செய்யும் எதிர்வினைகள் மறு முனை.

இதில் யார் செய்வது சரி, யார் செய்வது தவறு என்று தீர்ப்பு சொல்வது கடினம். எனக்கு இருவருமே ஏற்புடையவர்கள்தான்- உன்னதங்களை நான் அவர்களைக் கொண்டறிகிறேன், சிறுமைகளையும் அற்பத்தனங்களையும் என்னைக் கண்டறிகிறேன்.

பிகு: வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் "மகோன்னதமானவனாகத் தோன்ற வேண்டியது ஒரு கலைஞனின் கடமையாகும்," என்று சொல்வது வள்ளுவரின் புதிரான "தோன்றில் புகழோடு தோன்றுக" என்ற வாக்கியத்துக்கு புதிய வெளிச்சம் தருவதாக இருக்கிறது, இல்லையா?