25/2/11

மனவெளி மாந்தர்- இயன் மக்ஈவன் ஆற்றிய ஏற்புரை

நாவலுக்கும் நகரத்துக்கும் சில பொதுப் பண்புகள் உள்ளன. நாவல் என்பது அட்டையும் பக்கங்களும் உள்ள புத்தகம் என்ற பருப்பொருள் மட்டுமல்ல. அது ஒரு வகை மனவெளி, மனித இயல்பை பகுத்து, பார்த்தறியும் இடம். அதேபோல், நகரம் என்பது கட்டிடங்களும் சாலைகளும் கொண்ட கூட்டமைப்பு மட்டுமல்ல. அதுவும் ஒரு மனவெளிதான், கனவுகளுக்கும் போட்டிகளுக்கும் களம்தான். இவ்விரண்டிலும், மக்கள், தனி மனிதர்கள், மெய்யோ புனைவோ, "தன்னை வெளிக்கொணரும் உரிமைக்காகப்" போராடுகிறார்கள். 
திரும்பவும் சொல்கிறேன்- தனி மனிதன் மீதான மரியாதை மற்றும் அவனை அறியும் ஆவலில் பிறந்த இலக்கிய வடிவமே நாவல். அதன் மரபு பன்முகத்தையும், ஒளிவு மறைவின்மையையும், மற்றவர்களின் மனங்களை ஒத்திசைந்து அறிவதற்கான ஆவலை நோக்கியும் நாவலை செலுத்துகிறது. பெண்ணாகட்டும் குழந்தையாகட்டும், இஸ்ரேலியாகட்டும் பாலஸ்தீனராகட்டும், அல்லது வேறொரு பின்புலத்தைச் சேர்ந்தவராக இருக்கட்டும்- நாவலில் நேசமுடம் சித்தரிக்கப்பட முடியாத மனமென்று ஒன்றில்லை. 
நாவலின் இயல்பு ஜனநாயகம் சார்ந்த ஒன்று. நான் இந்தப் பரிசை நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறேன், இந்த நம்பிக்கையில்: ஜெருசலேம் ஆட்சியாளர்கள்- இந்நகரம் ஒரு நாள் இரு தேசங்களுக்கும் தலைநகராக இருக்க வேண்டும் - தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும், அவர்களை விழுங்கக் கூடிய போராட்டங்களின் சாத்தியங்களைப் பார்க்க வேண்டும், குடியமர்வுகளையும் ஆக்கிரமிப்புகளையும் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும், இன்று அவர்கள் கௌரவிக்கிற திறந்த புத்தகமாயிருக்கிற, மரியாதையும் பன்முகத்தன்மையும் கொண்ட இலக்கிய வடிவமான நாவலின் இயல்பை நோக்கி ஆக்கப்பூர்வமான வகையில் அவர்கள் விழைவு கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
இயன் மக்ஈவன் பரபரப்பான விமரிசனங்களுக்கிடையே இஸ்ரேல் அரசால் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்கப்படும் ஜெருசலேம் இலக்கியப் பரிசை 20.2.2011 அன்று ஏற்றுக் கொண்டு ஆற்றிய உரையின் நிறைவுப் பகுதி இது.

அவர் ஆற்றிய ஏற்புரை இங்கே இருக்கிறது.