15/2/11

எழுது அல்லது சாவு!

நண்பர் ஒருவர் எனக்கு இந்தத் தளத்தை அறிமுகப்படுத்தினார். யோசிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டு தாமதித்து எழுதாதொழிவதில் இருந்து விடுபட இந்தத் தளம் உதவுகிறது.

எழுதுவதை நிறுத்தினால் கொஞ்ச நேரத்தில் திரை சிவந்து, நாம் எழுதிய எழுத்துகள் அழியத் துவங்குகின்றன- எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். நிறுத்தி நிதானித்து யோசிக்க அவகாசமில்லை.

இது படைப்பூக்கத்துக்கு எதிரானதல்ல. இதனால் அவசர அவசரமாக ஏதேதோ எழுதித் தீர்க்கப்போகிறோம் என்றில்லை. இதோ, இந்தப் பதிவை நான் "எழுது அல்லது சாவு!" என்று தளத்தில்தான் எழுதுகிறேன். எழுதி முடித்ததும் வெட்டி ஒட்டி, இந்த ப்ளாகில் திருத்தப் போகிறேன்.

எழுதத் துவங்க நல்ல இடம். மண்டையில் ஒரு குரல் எழுதும்போதே விரல்களைப் பிடித்துத் தடுத்து நிறுத்துகிறது, இல்லையா? அந்தக் குரலிலிருந்து விடுதலை. நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் துவக்க வெடிப்பு போல எழுத்தின் துவக்கத்தை அமைத்துக் கொள்ளலாம். தங்கு தடையின்றி, தோன்றுவதையெல்லாம் எழுதி முடித்து விட்டு, நிதானமாக திருத்தி அமைத்துக் கொள்ளலாம்.

பிகு-

நம் விருப்பத்துக்கு எதிராக யாராவது நம்மை எழுத வைக்க முடியுமா என்ன? இதோ இப்போதேகூட கொஞ்சம் ஏமாற்றுகிறேன்- யோசிக்க நிதானிக்கும் வேளையில், எதையோ எழுதி மெல்ல அழிக்கிறேன், ஒவ்வொரு எழுத்தாக- நினைவின் தொடர்ச்சி திரும்பக் கிடைத்ததும், எழுத்தின் திரியை விட்ட இடத்திலிருந்து எடுத்துச் செல்கிறேன்.

இனி அடிக்கடி எழுத முடியும் என்று நினைக்கிறேன்- நேரம் கிடைக்கும்போது.