23/2/11

போதும்! இதைப் படிக்காதே!

இங்கிலாந்திலிருந்து ஒரு சுவாரசியமான செய்தி.

லேனோரா ரஸ்தமாவா என்ற நாற்பது வயதான ஆசிரியை புனைவுகளின் எல்லையைத் தாண்டியதால் வேலையிலிருந்து பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம்?

தன் மாணவர்களுக்கு இலக்கியத்தில் ஆர்வம் உண்டாக்கும் நல்லெண்ணத்தில் மெய்யும் பொய்யும் கலந்து எழுதினாராம்!

"கொம்மி பாய்ஸ்" என்று தங்களை அழைத்துக் கொண்ட முரட்டு சுபாவமுள்ள, கெட்ட வார்த்தை பேசுகிற பாலியல் விழைவு மிகுந்த படிப்பில் ஆர்வம் இல்லாத தன் மாணாக்கர்களுக்கு பாடம் போதிக்க வேண்டி, அவர்களில் ஐவரையும் தன்னையும் வைத்து தொண்ணூற்று ஆறு பக்கங்களில் ஒரு புனைவு எழுதினாராம் இவர்- "போதும்! இதைப் படிக்காதே!" என்ற குறுநாவல். அது தன் அருமை மாணவர்களின் விருப்பத்துக்கிணங்க ஏராளமான பாலியல் விவரிப்புகளும் கெட்ட வார்த்தைகளும் சேர்த்து அவர்களில் ஐந்து மாணவர்களும் இந்த நல்லாசிரியையும் இணைந்து போதை மருந்து விற்பவர்களைப் போலீசில் பிடித்துக் கொடுக்கும் சாகசக் கதை.

ஒரு பதினைந்து வயது மாணவனின் தாய், "என் மகன் தன் வாழ்நாளிலேயே முன் அட்டை முதல் பின் அட்டை வரை படித்த முதல் புத்தகம் இது" என்று பெருமை பொங்க சொல்கிறார்.

இந்த ஆசிரியையின் புதினங்கள் வலையேற்றப்பட்டதும் பிரச்சினை பூதாகரமாகி பணி நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறார்- மெய்யையும் பொய்யையும் கலந்து இலக்கியம் படைத்து இணையத்தில் ஏற்றிய குற்றத்துக்காக.

இந்த நல்லாசிரியையின் பணி நிறுத்தத்தைக் கண்டித்து மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளி வளாகத்தில் போராட்டம் நடத்தியிருக்கின்றனர் என்பது நம் நெஞ்சைக் குளிர்விக்கும் நல்ல செய்தி.

இலக்கியம் தழைக்க யாரை வைத்தும் மெய்யும் பொய்யும் கலந்து புனைவு செய்யலாம்- என்னைத் தவிர.

செய்தி இங்கே - கார்டியன்.