1/3/11

சொற்களின் ஓசை

புத்தகங்களால் நாம் சொற்களின் ஓசை இன்பத்தை இழந்து விட்டோமென்று நினைக்கிறேன். முழுதும் இழந்து விடவில்லை, அதன் முக்கியத்துவத்தை மறந்து விட்டிருக்கிறோம்.
சிறந்த கவிதைகளின் மையத்தில் இருப்பது இசையமைதியே- ஓசைகள் ஒன்றை ஒன்று தொட்டு எதிரொலிக்கும் இசையைச் சொல்கிறேன். எவ்வகை எழுத்தாக இருப்பினும் அதன் கவர்ச்சிகளில் மிக முக்கியமானவற்றுள் ஓசை ஒழுங்கும் ஒன்று. ஓசையை நினைக்காமல் உரைநடை எழுதுவது என்பது உன் ரெஸ்யூமைத் தந்து ஒருவனை மயக்க முயற்சிப்பது போன்றது. தகவல்கள் எல்லாம் இருக்கக்கூடும், ஆனால் மின்சாரம் இருக்காது
என்று எழுதுகிறார் மேகன் ஓ'ரூர்க்.

எப்போதும் எழுதிய வரிகளை உரக்க வாசித்துப் படித்துத் திருத்துவதே உசிதம். இறுக்கமான கணங்களில் மொழி அமைதியாகவும், உணர்வுகள் மேலோங்கிய கணங்களில் அதற்குத் தக்க ஒழுங்கோடும் சொற்கள் சீராக அமைய அது உதவும். ஆனால் இப்போதெல்லாம் நம்மில் எத்தனை பேர் அப்படி செய்கிறோம்?

மொழியைப் பூடகமாய் ஓசைகளைக் கொண்டு உட்பொருளைப் போர்த்த நினைப்பவர்கள் மட்டுமே அவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேகப்படுகிறேன். தெளிவாக எழுத நினைப்பவர்களுக்கு சொற்களின் ஓசை மிக முக்கியமான ஒன்று, ஆனால் நாம் அது குறித்து அறியாதவர்களாக இருக்கிறோம்.