8/12/10

எழுத்து முறை- பா ராகவன்

திரு பா ராகவன் அவர்கள் தன் எழுத்து முறை குறித்து ஒரு பதிவு செய்திருக்கிறார். மனம் போன போக்கில் எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்லதொரு உந்துதல் தருவதாகவும், அவர்களது எழுத்துப் பழக்கத்தை நெறிமுறைப்படுத்துவதாகவும் இருக்கிறது அவர் எழுதியிருக்கிற கட்டுரை.

அவர் தனக்கென்று வகுத்துக் கொண்டிருக்கிற நடைமுறையை சொல்லியிருக்கிறார். அதை அப்படியே நாமும் பின் பற்ற வேண்டுமென்பதில்லை- அவரது தேவைகள் வேறு நமது தேவைகள் வேறு: அவர் புத்தகம் எழுதினால், நாம் பதிவுகள் எழுதுகிறோம். மிஞ்சிப் போனால் நாளொன்றுக்கு நானூறு சொற்களுக்கு படித்தது பார்த்தது என்று ஏதாவது எழுதப் போகிறோம்.

இருந்தாலும் கூட, அவர் தனக்கென்று வகுத்துக் கொண்ட முறையில் பருவகாலத்துக்குரிய ஒரு ஒழுங்கு இருக்கிறது. முதலில் தேவையான தகவல்களைத் தேடிப் படித்து சேர்த்து வைத்துக் கொள்கிறார். அதன் பின், எந்த விதமான புறக்காரணிகளுக்கும் இடம் கொடுக்காமல் ஒருமுகப்பட்ட மனதுடன் எழுதுகிறார். எழுதத் துவங்குவதற்கு முன்னும், எழுதிக் கொண்டிருக்கும் காலகட்டத்திலும் தன் எண்ணங்கள் வளர்வதற்கு இசைவான gestation என்று சொல்லப்படுகிற சூல்வளர் சூழலைத் தக்க வைத்துக் கொள்கிறார்.

ஒரு மனிதன் தன் வரைகளைத் தெரிந்து, தன் எழுத்தின் வரைகளைத் தெரிந்து தனக்கு எழுதக்கிடைக்கிற காலத்தை சரியாகப் பயன்படுத்த உதவும் வகையில் அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார் பா ராகவன். மிகவும் கட்டுபடுத்தப்பட்டவராக இல்லாமலும் இஷ்டப்படி எழுதுபவராக இல்லாமலும் இரண்டுக்கும் நெகிழ்வு தந்து இரண்டையும் இணைத்தணைத்துச் செல்லக் கூடிய வழிமுறையைத் தனக்கென ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் இவர்.

இது தொடர்ந்த முயற்சியால் வருவது என்று நினைக்கிறேன். ஒரு துவக்கப் புள்ளியாக பா ராகவன் அவர்கள் எழுதியிருப்பதைப் படித்து, அங்கிருந்து நாம் புறப்படுவது நம் இலக்கை அடையத் துணை செய்யும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

அருமையாக கட்டுரை. புக்மார்க் செய்து வைத்து அடிக்கடி படித்து, யோசிக்க வேண்டிய ஒன்று.

"எனக்கென்ன தோன்றுகிறது என்றால், எழுதுவது என்பது ஒரு மனப்பயிற்சி. அதைச் செய்து பார்ப்பதைத் தள்ளிப்போடத்தான் நேரத்தைக் குறையாகச் சொல்லிவிடுகிறோம். அபாரமான எழுத்துத் திறமையும், அதைவிட அபாரமான சோம்பேறித்தனமும் படைத்த என் இனிய இணைய நண்பர்கள் சிலர் இதைப் படித்துவிட்டு, வருகிற வருடத்தில் இருந்தாவது இதை முயற்சி செய்து பார்க்கலாம். ஐந்நூறு கூட வேண்டாம். ஒரு நாளைக்கு முன்னூறு சொற்கள் என்ற இலக்கு வைத்து தினமும் தவறாமல் எழுத ஆரம்பித்தாலே போதும். ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கும்போது கிடைக்கும் பேரானந்தத்துக்கு நிகராக இன்னொன்று கிடையாது."