15/12/10

விவாதமும் வசையும்

தமிழில் அழியாச் சுடர்கள் என்ற தளத்தில் அருமையான தமிழ் கதைகளை தினமும் பதிவிடுகிறார்கள் அல்லவா, அந்த மாதிரி அமெரிக்காவின் சிறந்த ஆங்கில சிறுகதைகளை ஒரு தளத்தில் பதிவிடுகிறார்கள், புக்மார்க் செய்து வைத்துக் கொள்ளலாம். அங்கு ஷிர்லி ஜாக்சன் (Shirley Jackson) எழுதிய "லாட்டரி" (The Lottery) என்ற அருமையான கதையை முதலில் படித்து விட்டு பின் வருவனவற்றைப் படியுங்கள். நெஞ்சை உலுக்கும் கதை. இந்த ஒரு கதைக்காகவே ஷிர்லி ஜாக்சனின் பெயர் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்று விட்டது என்று சொல்கிறார்கள், அது உண்மைதான், சந்தேகமேயில்லை.

ஷிர்லி ஜாக்சன் அடித்தல் திருத்தல் இல்லாமல் ஒரே மூச்சில் இந்தக் கதையை எழுதினாராம். ந்யூ யார்க்கர் இதழின் ஹரால்ட் ராஸ் (Harold Ross), "இந்தக் கதைக்கு என்ன அர்த்தம்?" என்று கேட்டாராம். ஷிர்லி ஜாக்சன் சொல்ல மறுத்துவிட்டார். ந்யூ யார்க்கரில் அடுத்த வாரமே வெளிவந்தது. அந்தக் கதைக்குக் கிடைத்த கவனமும் அது எழுப்பிய சச்சரவும் ந்யூ யார்க்கரின் வரலாற்றில் முன்னும் பின்னும் காணாத ஒன்றாம்.

ஷிர்லி ஜாக்சன் இந்தக் கதையை எழுதியது 1948ஆம் ஆண்டில். கதை எப்படிப்பட்ட வரவேற்பைப் பெற்றது என்று சொல்கிறார் பாருங்கள், காலம் மாறினாலும், ஊடகம் மாறினாலும் மக்கள் மாறவில்லை என்பது தெரிகிறது.

ஜாக்சனின் முகவரிக்கு முன்னூறு கடிதங்கள் வந்தனவாம், அதில் பதின்மூன்று மட்டும்தான் அவருக்கு இணக்கமாக இருந்தன, அவற்றில் பெரும்பாலானவை நண்பர்களிடமிருந்து வந்தவை. ஷிர்லி ஜாக்சன் இது பற்றி இப்படி சொல்கிறார்-

அத்தனை கடிதங்களும் இன்னமும் என்னிடம் இருக்கின்றன, பொது வாசகர்களில் அனைத்து தரப்பினரின் இயல்பு குறித்தும் இதைக் கொண்டு துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியும்... இப்போதானால் எழுதுவதை நிறுத்தி இருப்பேன்.... இந்தக் கடிதங்களைப் படித்தால் கதை படிக்கிறவர்கள் ஏமாளிகளாக இருக்கிறார்கள், மரியாதை தெரியாதவர்களாக, எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக, தங்களைப் பார்த்து யாராவது சிரித்து விடுவார்களோ என்று பயங்கரமாக அச்ச்சப்படுபவர்களாக இருக்கிறார்கள்....

கதை வெளியான காலத்தில் எனக்கு வந்த கடிதங்களில் மூன்று மைய விஷயங்கள் பெரிதளவில் காணப்பட்டன- குழப்பம், மிகை கற்பனை, பச்சை வசவு என்று அவற்றை வகை பிரிக்கலாம். முதலில் வந்த கடிதங்கள் கதையின் பொருள் குறித்தல்ல- அவர்கள் இந்த லாட்டரிகள் எங்கு நடத்தப்படுகின்றன, மற்றவர்கள் வந்து பார்க்க அனுமதிக்கப்படுவார்களா என்று கேட்டிருந்தார்கள்.

(இது எல்லாம் இங்கிருந்து எடுத்தது.)

அன்று முதல் இன்று வரை மாற்று கருத்து, மாற்று பார்வை உடையவர்களை, அவர்கள் தன்னம்பிக்கையோடு அதை முன்னெடுத்து வைத்தால் வசைமாரி பொழிவதுதான் வழக்கமாக இருக்கிறது போல. தன்னால் புரிந்து கொள்ள முடியாததைத் தாண்டிச் செல்ல முயல்வதுதான் நம் இயல்பு. தப்பில்லை. ஆனால் சில புரியாத விஷயங்கள் புரியாமலே இருந்த போதும் அதில் இருக்கிற உயிர்ப்பு அதை நாம் எத்தனை வைதாலும் வலுக்குறையாமல் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு விடும். நாம் மனம் மாறி ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தாலும், நம் பிள்ளைகள் ஏற்றுக் கொண்டு விடுவார்கள், தடுக்க முடியாது. அதற்கு ஷிர்லி ஜாக்சனின் லாட்டரி ஒரு நல்ல உதாரணம்.

இதனால் அறியப்படுவது யாதெனில், வைவது மனிதனின் பலவீனம். சரக்கு இருக்கிற விஷயம் மலை மாதிரி, அதை வசவுகள் ஒன்றும் பண்ண முடியாது. சுயமாய் யோசித்து எழுதுபவன், தன் எழுத்து நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கை இருப்பவன், வசைகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை, காலப்போக்கில் படைப்பின் உன்னதத்தின் முன் அவை நீர்த்துப் போய் விடும். எதுவும் எழுதத் தோன்றாமல், கற்பனை வரண்ட வெட்டிப் பொழுதில் வேண்டுமானால வசவுகளைப் படித்து பதில் வசை பாடலாம். ஆனால் அதுவும் ஒன்றும் கட்டாயமல்ல. ஒரு டைம் பாசாக வேண்டுமானால் அதை வைத்துக் கொள்ளலாம். அதை செய்வதாலோ செய்யாததாலோ பெரிதாக ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. அதுதானே உண்மை?