17/12/10

எழுத்துக் கலை என்பது எதிர்பாரா கூட்டணி



இந்த ஆண்டின் சிறந்த புத்தகங்களில் ஒன்றை எழுதியிருப்பதாக பாராட்டப்படும் ஸ்டீவன் ஜான்சன் எழுத்துக் கலை குறித்து சொன்னதாக ஆலிவர் பர்க்மேன் தந்திருக்கும் குறிப்புகள் இவை-

உங்களுக்கு முக்கியமானதாகத் தோன்றும் கருத்துகளை எல்லாம் ஒரு நோட்டுப் புத்தகத்திலோ வர்ட் டாக்குமெண்ட்டிலோ டெக்ஸ்ட் கோப்பிலோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த கருத்துகள் எதுவாகவும் இருக்கட்டும். இந்த குறிப்புகளை அடிக்கடி படித்துப் பார்ப்பது என்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். ஐடியாக்கள் தனித்தனியாக வருவதில்லை, கூட்டம் கூட்டமாக வருகின்றன. நீங்கள் தொடர்பே இல்லை என்று நினைத்து கொண்டிருக்கிற இரு விஷயங்கள் திடீரென்று ஒன்றாகக் கூடி ஒரு புதிய கருத்தை உருவாக்கக் கூடும். சொல்லப்போனால் ஐடியாக்கள் தோன்றுவது இது போன்ற நினைக்காத கூட்டணி அமைந்த தருணங்களில்தான்.

தகவல்களைத் திரட்டுவது, அதற்கப்புறம் அது பற்றி எழுதுவது என்று வைத்துக் கொள்ளாதீர்கள். எழுத ஆரம்பித்து அதன் கூடவே தகவல்களைத் திரட்டும் வேலையையும் வைத்துக் கொள்ளுங்கள். எழுத ஆரம்பித்தால்தான் புதுப் புது தகவல்களின் முக்கியத்துவம், அவற்றின் இடம் தெரிய வரும். வெறுமே தகவல்களைத் திரட்டிக் கொண்டிருந்தால் அதுவே ஒரு மேனியா மாதிரி ஆகி எழுத்து வேலையைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கும். ஒரு புத்தகத்தின் முதல் வரைவை எழுதும்போது அதன் இருநூற்றாம் பக்கத்தை எழுதி முடித்தபின்னும் கூட இந்தப் புத்தகம் இதைப் பற்றிதான் இருக்க வேண்டும் என்ற உணர்வு புதிய ஒரு தகவல் அல்லது தெரிந்த தகவல்களின் புதிய கூட்டணியால் ஏற்படலாம் என்கிறார் இவர்.

தினமும் குறைந்த பட்சம் ஐநூறு சொற்களாவது எழுதுங்கள். ஐநூறு சொற்கள் என்பது ஒன்றுமேயில்லை. ஆனால் இப்படி எழுதினாலே ஆறு மாதங்களில் ஒரு புத்தகத்தை எழுதி முடித்துவிடலாம்.

நிறைய நேரம் எழுதுவதற்கு ஒரு பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்- ஒரு குறிப்பிட்ட நேரம் போன பின் மூட் மாற்றிக் கொண்டு எழுத ஏதாவது சம்பிரதாயம் வைத்துக் கொள்ளுங்கள். பீர் குடிப்பது, சினிமா பாட்டு கேட்பது என்று மனநிலையைத் தளர்த்திக் கொண்டு எழுத்து வேலையைத் தொடர்ந்தால் புதிதாக எழுத இப்போதுதான் உட்கார்ந்த மாதிரி உற்சாகம் பெருகக் கூடும்.

வாழ்த்துகள்.



via Kottke.org