11/12/10

சொற்றொடர்கள் நடை போடும் ஓசை

இன்றைக்குப் படித்ததில் மனதில் நின்ற விஷயங்கள் இவை: நிறைய சலுகைகள் எடுத்துக் கொண்டு மொழிபெயர்க்கிறேன்-

1. Yvor Winters என்பவர் எழுத்து குறித்து சொன்னது-
ஒரு கவிஞனை, எழுத்தாளனை நாம் அடையாளம் காண உதவும் லட்சணங்கள் இரண்டு- எந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தையும் முழுமையாகப் புரிந்து கொண்டு அதைத் தனித்துவமிக்க பொருளாகவும் பொது அனுபவத்துக்குட்பட்ட குறியீடாகவும் உணரும் வகையில் படைக்கக்கூடிய திறன். இரண்டாவது, மொழியின் சாத்தியங்களின் மீதான ஆளுமை- அதன் ஓசை இசைவுக்கான சாத்தியங்கள் உட்பட சொற்றொடர் சொற்றொடராக மொழியைக் கையாள்வதில் அவனுக்குரிய மேதமை. இந்த இரு திறன்களுமே தாமாக வளரக் கூடியவையல்ல; பொதுமைப்படுத்தி திருப்திகரமான விளக்கம் அளிக்கப்படக்கூடிய விஷயமுமில்லை இவை; விவரமாக விளக்கம் தரப்பட்டாலன்றி, ஒரு மொழியைக் கொண்டு, சொற்றொடர் சொற்றொடராக பெரிதாக ஒன்றும் சொல்லி விட முடியாது, கவிஞனுக்குத் தான் என்ன சொல்ல முயற்சிக்கிறோம் என்பது குறித்த தெளிவு இருந்தாலொழிய.

இவர் இப்படி சொல்கிறாரா, இதுவும் சரியாகத்தான் தெரிகிறது.

இந்தத் தெளிவு ஒரு எழுத்தாளனின் பிரக்ஞையில் இருக்கக் கூடியதில்லை. எழுத்து தன்னை எழுதிக் கொள்கிறது என்று சொல்கிறோமில்லையா, அது போல் தன் படைப்பின் ஓட்டத்துக்கு எழுதுபவன் தன்னைத் தளர்த்திக் கொண்டானெனில் அடுத்து என்ன எழுதப்போகிறோம் என்பது குறித்த கருத்துகள் எதுவும் இல்லாதபோதும், அதன் லயம் பிடிபட்டிருக்கும். இது எழுத்தாளனின் திறன்கள் உச்சத்தில் இருக்கையில் நிகழ்வது என்று நினைக்கிறேன்.  Philip Henscher சொல்வது சரியா பாருங்கள் -

Flaubert எழுதிய Madame Bovary என்ற புகழ் பெற்ற நாவல் ஆங்கிலத்தில் இருபதாவது முறையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாம். பொதுவாக எந்த ஒரு மகோன்னதமான நாவலும் ஓரிரு தடவைகளுக்கு மேல் மொழிபெயர்க்கப்படுவதில்லை. இந்த நாவலில் மட்டும் ஏன் என்ன ஈர்ப்பு என்று கேட்டு விடை சொல்கிறார் Philip Henscher.
"இந்த நாவலுடன் எவ்வளவு காலம் கழித்தாலும் இது உறைபனிபோல் சில்லிட்டே கிடக்கிறது, மானுடம் உடைத்தெழும் கணங்கள் முக்கியமில்லாத விந்தை நிகழ்வுகளாக இருக்கின்றன. அந்த காலத்து விமரிசனப் பதத்தைப் பயன்படுத்துவதானால் Flaubert மானுட உணர்வுகளுக்குப் புலப்படும் வாழ்க்கையில் ஆர்வமற்றிருந்தார் என்று சொல்ல வேண்டும். அவருக்கு அதை விட வாக்கியங்களின் இசையில் அதிக கவனம் இருந்தது. இனி எழுதப்போகும் சொற்களை தான் அறியும் முன்னரே, பல பக்கங்கள் கடந்து வரப்போகும் வாக்கியங்களின் இசையை இந்த நாவலை எழுதிக்கொண்டிருக்கும்போது தன்னால் முன்கூட்டியே உணர முடிந்தது என்று அவர் சொல்லியிருக்கிறார்."
இதற்கு என்ன சொல்வீர்கள்?