10/12/10

கதைக்கும் சிறுகதைக்கும் உள்ள வேறுபாடு- கேள்விகள்.

அழியாச் சுடர்கள் என்ற தளத்தில் சுந்தர ராமசாமி சிறுகதை குறித்து சொன்ன ஒரு விஷயம் பதிவாகி இருக்கிறது. மிக நுட்பமான, அடிப்படையான ஒரு விஷயத்தை சொல்கிறார், அது கவனிக்கத்தக்கது- ஒரு கதைக்கும் சிறுகதைக்கும் என்ன வேறுபாடு?

நான் இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டதேயில்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன். அதே சமயம், அவர் இது குறித்து சொல்லும் விஷயங்கள் விவாதத்துக்குரியவை என்றும் நினைக்கிறேன்-
"சிறுகதை என்பது சமூக மதிப்பீடுகளை ஆதரிக்க மறுக்கிற ஒரு இலக்கிய உருவம். அது சமூக விமர்சனம் சார்ந்தது. அது அப்படித்தான் இருக்கும். உண்மை வெல்லும் என்பதை வலியுறுத்தும் என்பது ஒரு கதையாக இருக்கும்போதுகூட அது ஒரு சிறுகதையாக இருப்பதில்லை. இது அறவியல் சார்ந்த ஒரு கதை. ஆனால் சிறுகதை அறவியலை வற்புறுத்தாது. நேற்றைய நம்பிக்கைகளை அது வற்புறுத்தவில்லை. வாழ்க்கை சம்பந்தமான போதாமைகளைச் சொல்கிறது அது. நெருக்கடிகளைச் சொல்கிறது அது. உண்மையைச் சொல்லியும் தோற்றுப் போனேனே என்று முடிவடைவது ஒரு சிறுகதையாக இருக்க முடியும். ஆனால் உண்மை இறுதியில் வெல்லும் என்று முடிவடைவது பெரும்பாலும் சிறுகதையாக இராது. கதையின் முடிவாக அது இருக்கலாம். சிறுகதையினுடைய முடிவாக அது இருக்க முடியாது. பழைய சம்பிரதாயங்கள், பழைய மரபுகள் இவற்றை யார் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறாரோ, யார் எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துகிறார்களோ, இதுவரை நாம் சரி என்று நம்பிய ஒன்றை, இதுக்கு மேல் உண்மை கிடையாது என்று சொல்லப்பட்டு வந்த ஒன்றை, மேலானது என்று சொல்லபட்டு வந்ததை இன்றைய வாழ்க்கை ஏற்கவில்லை என்ற உண்மையை யார் வெளிப்படுத்துகிறார்களோ அவர்கள் சிறந்த சிறுகதை என்ற உருவத்தை அறிந்தவர்கள்."
யோசிக்க வேண்டிய விஷயம், இல்லையா? அவர் தான் படித்த சிறந்த சிறுகதைகளை நினைத்துப் பார்த்து அவை ஏன் சிறந்த சிறுகதைகளாக இருக்கின்றன என்று தீர்மானித்து இதை சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். சிறுகதை என்பதே புரட்சி வடிவமாக மாறுகிறது, அவரது பார்வையில்.

இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறார், அதிலும் முக்கியமாக சிறுகதை எழுதுபவன் தனக்கென்று ஒரு குரலை உருவாக்கிக் கொள்வது குறித்து அவர் தந்திருக்கும் குறிப்புகள் நமக்கு முக்கியமானவை.

மேலும் படிக்க- "சிறுகதை - அதன் அகமும் புறமும்" - சுந்தர ராமசாமி