19/12/10

துவக்கமே எழுத்தின் தோற்றுவாய்

செய்வதை சொல்வோம், சொன்னதை செய்வோம். இது அரசியலில் வெற்றி பெற்ற கோஷம், இல்லையா? இதைப் பயன்படுத்திய கட்சியின் தலைவர் ஒரு எழுத்தாளராக இருந்ததில் ஆச்சரியமில்லை. நல்ல எழுத்தின் தாரக மந்திரமும் இதுதான்- உங்கள் துவக்கத்தில் இருக்கிறது எழுத்தின் சாரம் என்கிறார் ஜான் மக்ஃபீ.

காரணம், துவக்கம் என்பது கட்டுரையின் நுழைவாயில் மட்டுமல்ல, அதன் வெளிச்சமும்கூட. முன்னே சொன்னப்பட்டதன் வெளிச்சத்தில்தான் பின்வருவனவற்றை அறிகிறோம், எனவே துவக்கம் சரியானதாக இருந்து விட்டால் பாதி கிணறு தாண்டியது போல. அதனால்தான் அது எழுத்தின் கடினமான பகுதியாகவும் இருக்கிறது, இல்லையா? ஒரு கட்டுரையின் துவக்கத்தை அதன் தோற்றுவாய் என்று சொல்வது சரியாக இருக்கும்.

ஒரு போதும் துவக்கங்கள் முட்டுச் சந்துக்கு கொண்டு போய் வாசகனை நிறுத்திவிடக் கூடாது. என்ன சொல்கிறோமோ, அதையே செய்ய வேண்டும். விளையாட்டு போல. "மாப்பி, நான் இன்னிக்கு காலைல ஒரு கவிதை எழுதினேன் பாரு, என்னை அழ வெச்சிடுச்சி. படிக்காம எஸ்ஸாயிடாதீங்க மக்கா..." என்று எதையாவது சொல்லிவிட்டு, அடுத்த பத்தியில் "அர்த்த யாமத்தின் இருண்மையில் பகற்பொழுதின் நினைவுகள் திரண்டு, குவியாடியின் வழி விழும் ஒற்றைக் கதிர் போல் நினைவு கூடிய வலியின் உக்கிர நிகழ்வு இந்தக் கவிதை" என்ற அவதானிப்பைத் தொடராதீர்கள். இப்படி எழுதுவதானால் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும், எஸ்ஸாகும் பெருமக்கள் திட்டாமல் போயிருப்பார்கள், இப்போது திரும்பிப் பார்ப்பார்கள் என்கிறீர்கள்?

துவக்கம் என்பது வாக்குறுதி மாதிரி. அதை நிறைவேற்றியே ஆக வேண்டும். அரசியல்வாதிகள் வேண்டுமானால் புதுப் புது வாக்குறுதிகள் தருவதை பிழைப்பாக வைத்துக் கொண்டு தினம் ஒரு துவக்கம் நிகழ்த்தலாம். ஆனால் எழுத்தாளனுக்கு அந்த சௌகரியம் கிடையாது.

மரத்தின் விதை போல், கட்டுரையின் ஜீவன் அதன் துவக்கத்தில் இருக்கிறது. அது சரியானதாக அமைந்துவிட்டால், அதை நூல் பிடித்துக் கொண்டு போனாலே போதும், சிறப்பாக எழுதி முடித்து விடலாம் என்கிறார் ஜான் மக்ஃபீ,

ஆங்கில கட்டுரை இங்கே இருக்கிறது- The Wall Street Journal