21/12/10

வணங்குகிறேன்- நாஞ்சில் நாதனுக்கு சாஹித்ய அகாடமி விருது

இவ்வாண்டு சாஹித்ய அகாதமி நாஞ்சில் நாடன் அவர்களை விருதளித்து கௌரவித்திருக்கிறது. அகாதமி தன்னைத் தானே கௌரவித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்வதெல்லாம் மிகைப்படுத்தல். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்புகள் என்ற வரிசையில் ஒரு எழுத்தாளரின் படைப்பும் அங்கீகரிக்கப்படுவது மிகப் பெரிய சாதனை என்பதில் சந்தேகமே இல்லை. இதில் அரசியல் செய்து அங்கீகாரம் பெறுபவர்கள் தங்கள் சிறுமையை வரலாற்றில் பதிவு செய்கிறார்கள், அவ்வளவுதான். அவர்களுக்குதான் அவமானம்.

ஜெயமோகன் சென்ற ஆண்டு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டபோது வேதனையோடு சில விஷயங்களை எழுதியிருந்தார். இப்போது அத்தகைய வேதனைகளுக்கு ஓரளவுக்கு ஆறுதல் கிடைக்கும் சூழல் உருவாகி வருவது போல் தெரிகிறது.

நாஞ்சில் நாடன் அவர்கள் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் என்பதையும், விற்பனைத் துறையில் பணியாற்றினார் என்பதையும் அவரது எழுத்துகளின் வாயிலாக அறிந்திருந்தேன். ஆனால் இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அவர் கணித பாடத்தில் முதுகலைப் பட்டதாரி என்றறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது தவிர தன் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது கிளை மேலாளராக இருந்திருக்கிறார்.

முதுகலைப் பட்டம் பெற்ற ஒருவர், உள்ளூரில் வேலை கிடைக்காமல் மும்பை சென்று அங்கு கலெக்டர் அலுவலகத்தில் பியூனாகவும், தனியார் நிறுவனங்களில் தினக்கூலியாகவும் வேலை செய்து இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார். தன் உழைப்பு மற்றும் உயர்வு குறித்து கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாமல் இருக்கிறார்- இவரது எழுத்தில், தன் எழுத்து குறித்த நியாயமான பெருமிதம் இருந்தாலும் இருக்குமே தவிர, தனி மனிதனாக பெர்சனல் வாழ்வில், "நான் அதை சாதித்தேன், இதை சாதித்தேன்," என்ற பெருமையை எங்கேயும் நானறிந்தவரை பார்த்ததில்லை. அவரது கசப்புக்கும் கோபத்துக்கும் எந்த அளவுக்கு தார்மீக நியாயங்கள் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அவர் பெருமைப்படுவதற்கும் தன்னைத் தானே மெச்சிக் கொள்வதற்கும் நியாயங்கள் இருக்கின்றன. ஆனால் அவர் அதில் ஈடுபட்டுக் களிப்படையவில்லை.

தகுதியுள்ள எழுத்தாளர் என்ற வகையில் மட்டுமல்ல, தகுதியுள்ள மனிதருக்குதான் இந்த ஆண்டு விருது கிடைத்திருக்கிறது. அவருக்கு எனது தாழ்மையான வணக்கங்கள்.