15/12/10

கோழி சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை!

தலைப்புக்கும் பதிவுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. சும்மா ஜில்லுன்னு இருக்கட்டுமேன்னுதான் இப்படி வைத்தேன்.

விஷயத்துக்கு வருவோம்.

நான் ஆறாவதோ ஏழாவதோ படித்துக் கொண்டிருக்கும்போது பள்ளி ஆண்டுமலருக்கு மாணவர்களிடம் படைப்புகளைக் கேட்டார்கள். நான் என் அப்பாவின் நண்பர் ஒருவர் எழுதிய கதையை பிரதி எடுத்து கொடுத்தேன் (ஆமாம், அப்போதே இந்த பழக்கம் ஆரம்பித்து விட்டது). கதையில் லாரியின் டயர்கள் பேசிக் கொள்ளும் என்று நினைவு.

கதையைப் படித்ததும் என் ஆசிரியர், ஒரு கேள்விதான் கேட்டார்- "இதை நீதான் எழுதினாயா?"

"ஆமாம்" என்று சொன்னேன்- உண்மைதானே?

"சரி, இங்கு ஆள் அரவம் இல்லாத ரோடு என்று எழுதியிருக்கிறாயே, அரவம் என்பதற்கு என்ன அர்த்தம்?"

"பாம்பு"

அவர் எதுவும் பேசவில்லை. ஆனால் எனக்கு ஏதோ தப்பு செய்து விட்டோம் என்று தெரிந்து விட்டது. அந்தக் கதையை என் பெயரில் போட்டுக் கொள்வது ஒரு திருட்டு என்பது அப்போதுதான் உரைத்தது. சத்தியமாக சொல்கிறேன், நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

யோசித்துப் பார்க்கும்போது, ஆள் அரவம் இல்லாத ரோடு என்பது மனிதர்களோ பாம்புகளோ இல்லாத ரோடு என்று பொருளல்ல (அடிக்குறிப்பைக் காண்க)- ஒரு சிறு சலசலப்பும் இல்லாத நிசப்தமான சாலை. இங்கு அரவம் என்பது பாம்பைக் குறிக்கவில்லை, அரவம் ஏற்படுத்தக்கூடிய சிறு சரசரப்பைக் குறிக்கிறது (சாலையில் அதுகூட கேட்குமா என்ன?).

கதையை/ கவிதையை கதை/ கவிதையாகப் படித்தால் அரவம் என்பதை பாம்பு என்றுதான் படிக்க வேண்டும். அப்படி படிக்கும்போது, நாம் படிக்கிற நுட்பமான விஷயங்கள் உள்ளீடற்ற வார்த்தைகளாகத்தான் பெரும்பாலான சமயம் இருக்கும்- "அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா!" என்பன போன்ற கவிதைகளை வேண்டுமானால் அலசாமல் ரசிக்கலாம்.

ஆனால் அதுவேகூட, துக்ளக் அல்லது இட்லி வடையில் XXX (இவர் பெயரைக் குறிப்பிட்டு எதிரிகளை சம்பாதித்துக் கொள்ளும் ஆசை எனக்கில்லை. ஆனால், உங்களுக்கு இவரைத் தெரிந்திருக்குமோ தெரியாதோ- இவர் ஒரு மாஸ் ஹீரோ. அரசியலில் கால் வைக்கப் போகிறார், ஆனால் அந்தக் கால் யார் தோளில் நிற்கப் போகிறது என்பன போன்ற ஹேஷ்யங்கள் இப்போது பரபரப்பான டாபிக்), எங்கு விட்டேன், இட்லி வடையில் XXX "அம்மா இங்கே வா வா! ஆசை முத்தம் தா தா!" என்று பாட்டுப் பாடுகிற மாதிரி யாராவது வரைந்தால் அவர் தன் தாயிடம் முத்தம் கேட்கிறார் என்று யாரும் புரிந்து கொள்ள முடியாது- ஆட்டோ வீட்டு வாசலுக்கு வந்து நிற்கும்போது கார்ட்டூன் வரைந்தவர் அப்படியெல்லாம் கோட்பாடு பேசினால் வந்தவர்கள் அதை ரசிக்க மாட்டார்கள்.

உட்பொருள் குறித்து அலசிப் படிக்காவிட்டால் வாசிப்பு என்பது இந்த கணினியிலிருந்து ஒலிக்கக்கூடிய computer generated reading of a text என்ற அளவில்தான் இருக்கும்: உள்ளீடற்ற வார்த்தைகள் என்று அதை சுருங்க சொல்லுவார்கள்.

சரி, வேறு வழியில்லை, நீ உன் வசதிக்கு வாசித்துவிட்டுப் போ. ஆனால் அப்படி நீ படித்ததை போது இடத்தில் எழுதி ஏன் எழுத்தாளனை வதைக்கிறாய்? என்று கேட்பார்கள். இது எழுதப்படுவது சக வாசகனுக்காக, படைப்பாளிக்காக அல்ல.

ஒரு படைப்பை அலசுதல் என்பது குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்ற தோற்றம் வரும். அது அப்படியல்ல. பூக்கூடையில் இருக்கிற உதிரிகளை வீசி எறிந்த பின் மிஞ்சி இருக்கிற கோர்வைதான் பூமாலை. வெறும்பேச்சாக இருப்பதை இத்தகைய அலசலுக்கு உட்படுத்தி சிதைத்து விடக் கூடும். ஆனால் உன்னதமான படைப்புகளை அலசும்போது, அதில் மாலை போல் உள்ள கோர்வையை கண்டு பிடிக்க முடியும், அவ்வளவு ஏன், அதை மறைக்கவே முடியாது.

என்ன செய்தாலும் சில பூ மாலைகளை பிய்த்துப் போட முடியாது என்பதுதான் உண்மை- அது அந்தக் குரங்குக்குத் தெரியாவிட்டாலும்கூட.


அடிக்குறிப்பு:
நான் கோணங்கியின் கதையைத் திருடியிருந்தால் வேண்டுமானால் அந்த அர்த்தம் தந்திருக்கலாம், ஆனால் நான் பிரதி எடுத்திருந்தது ஒரு சாமானியர் எழுதிய கதையை-: "கோணங்கி சிரித்தார் ”பாம்பு வந்துட்டே இருக்கணும்டா… அதுதான் நமக்கெல்லாம் வழிகாட்டணும்…இந்த நகரத்திலே பாம்போட நெழல் கூட வர்ரதில்லை…” நான் சிரித்துக்கொண்டு ”வேற ஒரு காலத்திலே அது படுத்திருக்கு…அங்க எல்லாமே ரொம்ப மெதுவா நடந்திட்டிருக்கு… நகந்து போனதுகூட மெதுவா தண்ணி ஓடுறமாதிரித்தான்” ”பாம்புகள் வரணும்…நம்மள அப்பப்ப வழிமறிக்கனும்” என்றார் (http://www.jeyamohan.in/?p=7670).