13/12/10

டால்ஸ்டாயின் கொடை

முழுக்க முழுக்க சரி என்று சொல்ல மாட்டேன், ஆனால் நன்றாக எழுதி இருக்கிறார்.
டால்ஸ்டாய் குறித்து படித்தது- தமிழில் இப்போது எழுதிக் கொண்டிருப்பவர்களில் யாரைக் குறித்து அவர் காலமாகி நூறாண்டுகள் சென்ற பின் இப்படி சொல்ல முடியும் என்று யோசித்தேன். ஒருவருக்கு மட்டுமே இது சாத்தியம் என்று தோன்றுகிறது- அவர் தன் கலையே கண்ணாக இனியேனும் இருந்தாரெனில்.


***=> டால்ஸ்டாய் என்ன எப்படியென்று சொல்வது இயலாத காரியம். நம்மால் அதிகபட்சம் ஆகக் கூடியது அவரது படைப்புகளின் தொகுப்புகளும் அவரைக் குறித்த நினைவுகளாய் மற்றவர்கள் எழுதியதுமான நூற்றுக்கணக்கான நூல்களை சுட்டுவதுதான்- இவற்றைப் படிக்க சொல்லலாம், சிறிது தெளிவு கிடைக்கக் கூடும்.

ஆனால் ஒரு விஷயம் இப்போதே தெளிவாகத் தெரிகிறது- டால்ஸ்டாய் யார் என்பதற்கு பதில் கிடையாது, இருக்கவும் முடியாது. டால்ஸ்டாய் பற்றி மதிப்பிடுவதென்பது உயிர், புவி, மானுடம் போன்ற மாபெரும் கருதுகோள்களை மதிப்பிடுவது போன்றது: நீ எவ்வளவு நுட்பமாக இவற்றை ஆய்ந்தாலும், இவற்றை சுற்றி உன் கற்பனையை வளைக்க எவ்வளவு முயன்றாலும், இந்த ஒரு விஷயம் உனக்குத் தெளிவாகத் தெரிகிறது- எந்த ஒரு சட்டகத்திலும் அவரை அடக்க முடியாது என்பதே அது.

****=> டால்ஸ்டாய்க்கும் கடவுளுக்கும் இடையிலான உறவு "ஒரே குகையில் இருக்கும் இரு கரடிகளது போன்றது" என்று சொல்கிறார் கார்க்கி தன் சுயசரிதையில். இதற்கு நாம் பல்வேறு வகைகளில் அர்த்தம் செய்து கொள்ளலாம், ஆனால் மிகப் பொருத்தமானது இதுவாகவே இருக்கும்- கடவுள் எதைக் கொண்டு படைக்கிறானோ, அதே ஆட்களைக் கொண்டு தன்னாலும் படைக்க முடியும் என்ற உணர்வு டால்ஸ்டாய்க்கு முழுமையாக இருந்தது. மானுட இயல்பை தான் பரிபூரணமாக உணர்ந்த காரணத்தால், அதன் கொடூரம், முட்டாள்தனம், கீழ்மை, அகங்காரம், இவை அனைத்தையும் அறிந்திருந்தும் அவர் தனது நம்பிக்கையை மானுடத்தின் இன்னொரு முகத்தில் வைத்திருந்தார்- அதன் இரக்கம், கருணை, சுயநலமின்மை, மன்னிக்கும் குணம் என்பனவற்றில். தன் வாழ்நாளை அப்படியொரு சமுதாயத்தை மண்ணில் படைக்க முயற்சிப்பதற்கென அர்ப்பணித்தார் அவர்.

டால்ஸ்டாய் ரஷ்யாவுக்கும்- உலக முழுமைக்கும்- விட்டுச் சென்றது, நம்பிக்கையை. அவரால் மானுட இயல்பை மாற்ற முடியவில்லை என்றாலும், அதில் ஒரு நெகிழ்வை ஏற்படுத்தினார். அவர் இறந்து நூறாண்டுகள் கழிந்து விட்டன. அவர் தனது கோட்பாடுகள் மற்றும் உழைப்பைக் கொண்டு உருவாக்கியனவற்றை தன்னை நினைவுபடுத்தும் வகையில் ஒரு கல் கூட இன்று இல்லாமல் எல்லாம் அழிந்து போய் விட்டன. ஆனால் அவரது புத்தகங்கள் இருக்கின்றன: War and Peace, Anna Karenina, Hadji Murat, “The Death of Ivan Ilych”, மற்றும் பிற- அவர் விட்டுச் சென்றிருப்பது ஒரு மகோன்னதமான கொடை. ஆனால் அது கலையின் சாசனம் மட்டுமே.

அவரது ஆளுமையும் அழியாமல் உயிர்ப்புடன் இருக்கிறது. அதைக் கொண்டு மனிதன் எப்படி இருக்க முடியும் என்பதை நாம் அறிந்து கொள்ளும் வகையில்.

இதை சரியாகப் படிக்க- The Moscow News.

கலையின் சாத்தியங்கள் அவ்வளவு சாதாரணமானவையா என்ன!