12/12/10

இலக்கியமும் வணிக எழுத்தும்

வணிக எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு நமக்கு அவ்வளவு எளிதில் பிடிபடுவதில்லை. விறுவிறுப்பாகவும் சுவையாகவும் நேர்த்தியாகவும் எழுதப்பட்ட வணிக எழுத்து ஏன் இலக்கியமாக அங்கீகரிக்கப்படக்கூடாது என்ற கேள்வி திரும்பத் திரும்ப நம் மனதில் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கான விடை காண்பது எளிதல்ல. இருந்தாலும், ஒரு விடையை நோக்கி கார்டியன் இதழில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதை சுருக்கித் தருகிறேன்:
வணிக எழுத்து எவ்வளவு நன்றாக இருந்தாலும் அதன் சாத்தியங்கள் மிகக் குறைவானவையே. கதையில் என்ன சொல்லலாம், எப்படி சொல்லலாம் என்பதற்கான எல்லைகள் மதிக்கப்பட்டாக வேண்டும். ஒரு கொலையும், அந்தக் கொலையின் முடிச்சை அவிழ்க்கும் துப்பறிவாளனும் கதையில் அவசியம் இருந்தாக வேண்டுமென்றால், கதைக்களம் சில இழப்புகளை ஏற்றாக வேண்டும்- கதையின் சில தீர்மானங்கள் அது எழுதப்படுமுன்னரே ஏற்கப்பட்டு விடுகின்றன.
இதனால்தான் ஒரு மோசமான துப்பறியும் கதை நல்ல இலக்கியத்தைவிட சுவையாகவும் வாசகர்களால் போற்றப்படத் தக்கதாகவும் இருக்கிறது- ஒரு கொலை செய்யப்பட்டிருக்கிறதென்றால், கதை எவ்வளவு மட்டமாக எழுதப்பட்டிருந்தாலும் அது எந்த திசையில் செல்லும் என்பது வாசகனுக்குத் தெரியும்- இது போன்ற மற்ற கதைகளைப் படித்ததால் எழுப்பப்பட்டிருக்கிற ஆவல் நிறைவு காணும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது. ஆனால் இலக்கியப் படைப்புக்கு இந்த மாதிரியான உத்தரவாதங்கள் கிடையாது.
ஒரு போளி ஸ்டாலையும் உயர் ரக ஹோட்டலையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். போளி ஸ்டாலில் மசாலா போளி, தேங்காய் போளி, கார போளி, ஸ்வீட் போளி என்று வகை வகையான போளிகள் விற்றாலும் நமக்கு போளி ஸ்டால் சரக்குகளில் பெரிய அளவில் சுவையிலோ தரத்திலோ எதிர்பார்ப்புகள் கிடையாது. அதனால் நாம் போளி அப்படி இப்படி இருந்தாலும் சந்தோஷமாக அடுத்த நாள் அந்தக் கடைக்குப் போவோம். ஆனால் தரமான, சுவையான, சுகாதாரமான உணவை அழகாகப் பரிமாறுவதாய் சொல்லிக் கொள்கிற ஹோட்டலில் உப்பு குறைவாக இருந்தால்கூட நமக்கு எரிச்சல் வருகிறது, அங்கு வழக்கமாக தோசைக்குத் தருகிற நான்கு வகை சட்னிகளில் தேங்காய் சட்னி மட்டும் தீர்ந்து விட்டது என்று சொன்னால் கொதித்தெழ மாட்டோம்? போளி கடை சரக்கை விட இங்கு நாம் எதை சாப்பிடுகிறோம் என்பதைக் குறித்து ஆர்வமாக இருக்கிறோம்- மற்ற விஷயங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் ஒரு சிறு ஏமாற்றத்தையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இப்படிப்பட்ட ரிஸ்க் எடுத்துதான் இலக்கியம் படைக்கிறார்கள்.
வணிக எழுத்தாளர்கள் கூட்டம் சேர்க்கட்டும், காசை எடுத்துக் கொண்டு போகட்டும், தப்பில்லை. ஆனால் அதை ஒரு அளவுகோலாக வைத்துக் கொண்டு தங்கள் எழுத்தின் தகுதிக்கு மீறிய மரியாதையையோ களத்தையோ நம் மனதில் நிறுவ முயற்சி செய்யக் கூடாது.

இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நாம் இலக்கிய புத்தகம் என்று நினைத்து ஒன்றைப் படித்துப் பார்க்கிறோமா என்ன? ஆனால் நல்ல ஒரு இலக்கிய நூல் புதிய பாதையில் பயணிக்கிறது என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அதன் களமும் வணிக எழுத்தைவிட நோக்கத்திலும் வெளிப்பாட்டிலும் விரிந்த ஒன்றே.

கட்டுரை இங்கே இருக்கிறது- The Guardian.