1/3/11

துயர் மேவும் எரிதழல்

தன் கணவரின் இழப்பு குறித்து ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் அவர்களும், தன் தாயின் இழப்பு குறித்து மேகன் ஓ'ரூர்க் அவர்களும் இவ்வாண்டு வாழ்க்கைக் குறிப்பு எழுதி அஞ்சலி செலுத்துகிறார்கள். இவர்கள் இடையே நிகழ்ந்த அஞ்சல் உரையாடலின் சில பகுதிகள்-

ஓட்ஸ்: மேகன்- நீ சொல்வது சரி என்றுதான் நானும் நினைக்கிறேன். எழுதுவதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம். ஒரு குழந்தையைப் போல் நிகழ்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறோம். நமக்கு நேர்ந்த நிகழ்வுகளால் துவண்டு போய், அவற்றைப் புரிந்து கொள்ள முடியாமல் நாம் இருக்கும் நிலையில் பேசாப் பொருளை சொல்லுக்குள் கொணர்வதால் நிகழ்வுகளை ஏதோ ஒரு வகையில் நமக்குரியனவாக மாற்ற முடியும் என்று கற்பித்துக் கொள்ள விரும்புகிறோம்.

"ஒரு விதவையின் கதை"யின் பெரும்பகுதியை சமகால நிகழ்வுகளே தீர்மானித்தன- அவற்றின் உட்பொருள் குறித்த இறுகிய சிந்தனை அல்ல. எழுதிய பின்னரே "ஒரு விதவையின் கதை"யைத் தொகுக்க நினைத்தேன். அது என்னைபோல் வேகுளியாகவும் தயாராய் இல்லாமலும் இருப்பவர்களுக்கு அறிவுரை அளிக்கும் என்று நினைத்தேன். ஆனால் இவை அனைத்திலும் எஞ்சி நிற்பது முடிவில் வரும் சுருக்கமான ஒற்றை வரி அத்தியாயம்தான். எப்பாடுபட்டாயினும் நீ உயிரைப் பிடித்துக் கொண்டிருக்க ஒரு வழி கண்டாக வேண்டும்.- இதுவே வைதைவ்யத்தின் சாரமாகும்.

எனக்கு இது எந்த வகையிலும் ஆறுதல் அளிப்பதாக இருந்திருக்காது என்று நினைக்கிறேன். சடங்குகள் முரண்நகை மிகுந்து இருக்கின்றன- ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட ஒரு மரணத்தின் அச்சுறுத்தலைத் தவிர்க்க சடங்குகள் ஒரு கருவியாக இருக்கின்றன.

ஓ'ரூர்க்: சடங்குகள் என்றதும் நான் ஒப்பாரிகளை நினைத்துப் பார்க்கிறேன். விதவைகள் தங்கள் முடியை விரித்துப் போட்டுக் கொள்வதும், ஆடைகளைக் கிழித்துக் கொள்வதும் நினைவுக்கு வருகின்றன. துக்கிப்பவர் சங்கடமின்றி தன் துக்கத்தின் பருண்ம உக்கிரத்தை வெளிப்படுத்த இவை உதவுகின்றன. எனக்கு உங்களைப் பற்றித் தெரியாது, நான் துக்கத்தின் முதல் சில மாதங்களில் அவ்வப்போது இந்த சங்கட நிலையில் இருந்தேன்- சப்வேயில் வேற்றார் ஒருவர் நிஷ்டூரமாக நடந்து கொள்ளும்போது அழுது விடப்போகிறேன் என்று கலங்குவேன். எனது இழப்புக்கும் அப்பால், "எப்படி இருக்கிறாய்?" என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று நான் யோசிக்க வேண்டியிருக்கிறதே என்ற கோபம் இருந்தது. "ஹாம்லட்"டைத் திரும்பத் திரும்பப் படித்தேன். திடீரென்று அவனது பாத்திரம் எனக்குப் பிடிபட்டது. அவனது அப்பா அப்போதுதான் இறந்திருக்கிறார், ஆனால் அவன் அதைப் பேசுவதை யாரும் விரும்புவதாயில்லை. உலகம் "களைத்துப் போய், சலிப்பு தட்டி, சுவை குன்றிய, பயனற்ற ஒன்றாக இருக்கிறது" என்று அவன் உணர்ந்ததில் ஆச்சரியமில்லை.

துக்கத்தை ஏன் எழுதுகிறோம்? அதைவிட்டு நீங்கவா அல்லது அதை நமக்கு உரியதாக்கிக் கொள்ளவா? இரண்டும்தான் என்று நினைக்கிறேன். நம் உணர்வுகளை எழுதும்போது அது நமக்கு மட்டும் உரியது என்ற நிலையைத் தாண்டி அது நம் அனைவருக்கும் உரிய ஒன்று என்ற பொதுமையை நாம் உணர்கிறோம்- ஆனால் அத்தகைய பகிர்தல் நம் இழப்பின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில்லை: அது முன்னைவிட இப்போது கூடுதல் மதிப்பு கொண்டதாக இருக்கிறது. இழப்பின் வலிமை மிகுந்திருந்தாலும், பகிர்தல் நம் மன உறுதிக்கு உரம் சேர்ப்பதாய் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இந்தக் கட்டுரையின் முடிவில், மேகன் ஓ'ரூர்க் சொல்கிறார்,

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் எழுதிய "வேனில் காலத்தில் ஒரு விதவையின் புலம்பல்" என்ற கவிதையைப் பாருங்கள்-


"துக்கம் எனக்குரிய படுகை
அங்கு புதிய புல்கள்
கங்குகளாய் முன்னே போல்
இக்கங்குகள் இருந்ததில்லை
சில்லென்ற நெருப்பு
இவ்வாண்டென்னைச் சூழ்ந்தாற் போல்"


இந்த சில்லென்ற நெருப்பு வித்தியாசமான கணப்பு தருகிறது, இல்லையா? நாளெல்லாம் நாம் எரிகிறோம், நினைவென்னும் எரிதழலை அடுத்தடுத்த கைமாற்றித் தருகிறோம்.