6/3/11

மொழிபின் வாக்கியார்த்தம்

517 பக்க நாவல்- ஒற்றை வாக்கியத்தில். கிரேக்க யுத்தத்தில் துவங்கி அண்மைக்கால யுத்தங்கள் வரை ஐரோப்பாவை உலுக்கிய போர்களின் நினைவுகள், ரயிலில் பயணிக்கும் ஒருவனின் மனதில். போர் மனிதனின் தவிர்க்க முடியாத நிழலாக நீண்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டால், அவன் வரலாறு ஒற்றை வாக்கியத்தில் எழுதப்படுவதைக் குறை சொல்ல முடியாதுதானே?

சிசிலியின் மரணத் தீவில் லவ்ரியும் அவன் மனைவியும் எட்டு நரக ஆண்டுகளை அவர்களுடைய இரண்டாவது எரிமலையின் நிழலில் வாழ்ந்தார்கள், ஒவ்வொரு நாளும் கிராமத்தினர் மால்கமைத் தங்கள் முதுகில் சுமந்து வீட்டுக்குக் கொண்டு சேர்க்க வேண்டியிருந்தது, அவனை மீனவர்கள் விடியல் பொழுதில் ஒரு சாலையில் கண்டெடுத்தார்கள், உயர்ந்தெழும் சரிவும் உறக்கமும் அவனை தோற்கடித்திருந்தன, அவன் மயக்கத்தில் விழுந்துக் கிடந்தான், கடைசியில் பார்த்தால் நான் சைரக்யூசுக்கான ரயிலில் ஏறாதது நல்லதுக்குதான், அவனை சிசிலிய இரவில் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பேன், சாராய புட்டியோடும் என் காட்டுமிராண்டித்தனத்தோடுமான போராட்டத்தில்- நான் என் இளம் வயதில் எதை உடைத்தாலும் அல்லது என் சகோதரி லேடாவைப் படுத்தி எடுத்தாலும், என் அப்பா, அவர் நீ ஒரு காட்டுமிராண்டி என்று என்னிடம் சொல்வார் ஆனால் என் அம்மா அவள் குறுக்கிட்டு அவரைக் கடிந்து கொள்வாள் இல்லை உன் பிள்ளை ஒரு காட்டுமிராண்டியில்லை, அவன் உன் மகன் என்று, இப்போது ஒரு உலகின் முடிவை இன்னும் நெருங்கிய நிலையில் நான் ஆச்சரியப்படுகிறேன், என் பிதா, அந்த மாபெரும் இளைத்தவர், அவர் சொன்னது சரிதானோ என்று, ரெக்கியோ, எமிலியாவின் தலைநகர், எவ்வளவு மென்மையான சொல், அதை ரயில் நெருங்குகையில் தோன்றுகிறது, நான் ஒரு காட்டுமிராண்டி, கொடூரமானவன், நாகரிகமில்லாதவன்...

ரயிலில் பயணிக்கும் நம் நாயகனின் நினைவுகள் ரயிலின் பயணம் போலவே நீண்டு செல்கிறது, மூச்சு விடாமல், தொடர்ந்து, 516 பக்கங்களுக்கு ஒற்றை வாக்கிய நாவலாய்.



"ஸோன்" என்ற Mathias Énardன் நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெருமளவில் பேசப்படத் துவங்கியுள்ளது.

இலக்கண வரைகள் இல்லாமை இந்த நாவலுக்கு ஒரு திறந்த பார்வையைத் தருகிறது. மனிதன் படைத்துப் போரிடும் மற்ற எல்லைகள் - தேசங்கள், நாடுகள், இனங்கள் என்பன போன்ற பிரிவெல்லைகள் குறித்த கதாநாயகனின் தீவிர ஒற்றைச் சிந்தனைக்கு நாவலின் வடிவம் பதில் தருகிறது. அவனது மனவோட்டத்துக்கு எதிராக இந்த நாவலின் இலக்கணத்தில் மொழிகளும் எண்ணங்களும் இடங்களும் தடையின்றிப் புழங்குகின்றன.

என்று ந்யூ யார்க் டைம்ஸில் அருமையான மதிப்புரை செய்திருக்கிறார்கள். அதே போல் நரேடிவ், செண்டன்ஸ் ஆகிய இரு சொற்களும் அறிதல் மற்றும் தீர்ப்பளித்தல் ஆகிய இரு பொருளும் தருவதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். தமிழில் இப்படி சொல்ல முடியுமா என்று தெரியவில்லை - ஒரு பிரச்சினையை தெய்வ சந்நிதியில் வைக்கும்போது "வாக்கு கிடைத்துவிட்டது" என்று நாம் சொல்லும்போது தீர்ப்பாகி விட்டது என்ற பொருள் வருமென்று நினைக்கிறேன்.

வாக்கியம், மொழிபு, உரை- இவை உட்பொருளை வெளிப்படுத்துவதாகவும் அதன் தன்மை குறித்து மறை தீர்ப்புகளைத் தம்முள் கொண்டு தீர்மானிப்பதாகவும் இருக்கின்றன என்று சொல்ல முடியும், இல்லையா?

ஒற்றை வாக்கிய புதினம் என்பது ஒரு ஸ்டண்டாக இல்லாமல், பொருள் பொதிந்த உத்தியாக இருக்கிறது என்பது வியப்பளிக்கிறது.