4/3/11

நிகழ்கலையின் நிழலுருவங்கள்

நான் இந்தக் கட்டுரையை விரும்பிப் படித்தேன்- சில முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றார் ஆசிரியர்-
இந்தக் கதையைப் பாருங்கள்: நடுத்தர வயதான ஒரு நாகரிக மனிதர் தன்னைப் பித்தாக்கிய காதலை (amour fou) நினைத்துப் பார்க்கிறார். அவரது வெளிநாட்டுப் பயணங்களில் ஓரு வீட்டில் அறை எடுத்துத் தங்கும்போது ஆரம்பிக்கிறது அவரது கதை. அந்த வீட்டுகாரர்களின் மகளைக் கண்டதும் அவர் தன்னை இழக்கிறார். அவள் பதின்ம வயதுகளையும் அடையாதவள், அவளது ஈர்ப்புகளுக்கு அவர் அக்கணமே அடிமையாகிறார். அவளது வயது குறித்து பயப்படாமல் அவர் அவளோடு நெருங்கிப் பழகுகிறார். முடிவில் அவள் இறக்கிறாள். கதை சொல்லி என்றென்றும் அவள் நினைவுக்குரியவராய்- தனித்திருக்கிறார். அந்தப் பெண்ணின் பெயர் அவரது கதையின் தலைப்பாகிறது : லோலிடா ( Lolita).

நான் விவரித்துள்ள கதையின் ஆசிரியர், ஹீன்ஸ் வோன் லிச்பர்க் (Heinz von Lichberg) தன் லோலிடாவின் கதையை 1916ல் பதிப்பித்தார். விளாடிமிர் நபகோவின் ( Vladimir Nabokov) நாவல் வெளிவருவதற்கு நாற்பது ஆண்டுகள் முன். லிச்பர்க் ஒரு பிரபல பத்திரிக்கையாளராக பின்வந்த நாஜி காலகட்டத்தில் அறியப்பட்டார், அவரது இளமைக்கால எழுத்து காணாமல் போனது. 1937 வரை பெர்லினில் இருந்த நபகோவ் லிச்பர்கின் கதையை அறிந்தே தானும் கையாண்டாரா? இல்லை முன் எழுதப்பட்ட கதை மறைந்திருந்த அறியப்படாத நினைவாக நபகோவின் மனதில் இருந்ததா? க்ரிப்டம்னீசியா ( cryptomnesia) என்றழைக்கப்படும் இத்தகைய நிகழ்வுகளுக்கு இலக்கிய வரலாற்றில் எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. மற்றொரு விளக்கம் இப்படிப் போகிறது : நபகோவுக்கு லிச்பர்கின் கதை நன்றாகவே தெரிந்திருக்கிறது, மேற்கோள் கலையில் தேர்ந்தவரான தாமன் மான் (Thomas Mann) "உயர்நிலை பிரதியாக்கம்" என்றழைத்த உத்தியை தானும் கையாள நபகோவ் முனைந்திருக்கிறார். இலக்கியம் என்பது எப்போதும் அறிந்த விஷயங்கள் வேறு வடிவம் கொண்டெழும் உலைகலனாகவே இருந்திருக்கின்றது. நாம் நபகோவின் லோலிதாவை ஏன் கொண்டாடுகிறோமோ அந்த விஷயங்களில் வெகு சிலவே முந்தைய படைப்பில் இருக்கின்றன; முந்தையதன் தழுவல் பிந்தையது என்று சொல்ல வழியில்லை. இருப்பினும்: நபகோவ் தெரிந்தே கடன் வாங்கி மேற்கோள் காட்டினாரா?
கலை எவ்வளவுக்கு தனி முயற்சி, எவ்வளவுக்கு கூட்டு முயற்சி என்பதை விவாதிக்கும் கட்டுரை. பொறுமையாகப் படித்தால் பல திறப்புகள் நிகழக்கூடும்.