17/3/11

சிறுகதையின் வடிவமும் குவிமையமும்

சில எழுத்தாளர்கள் தங்கள் சிறுகதை எப்படி தோற்றம் கொள்கிறது என்பதையும் அதன் வடிவமைப்பு அமையும் விதத்தையும் இங்கே விவாதித்திருக்கிறார்கள். சுவாரசியமாக இருக்கிறது.

டேனியலா ஈவான்ஸ் ஏதோ ஒன்று மாற்றம் கண்ட அல்லது மாற மறுத்த கணத்தை நோக்கி கவனம் குவிதலே சிறுகதையின் வடிவம் என்று சொல்கிறார். எந்த இடத்தில் இந்த மாற்றத்துக்கான அழுத்தம் மிகுகிறதோ அதுதான் சிறுகதையின் வடிவத்தைத் தீர்மானிக்கிறது என்று அவர் சொல்கிறார். மிக எளிமையான கருத்தாக இருந்தாலும், இது விரிவான சிந்தனைக்குரிய ஒன்றாகத் தோன்றுகிறது.

ஆலன் ஹீத்காக் நமக்குப் பழக்கப்பட்ட ஒரு கருத்தை முன் வைக்கிறார்- கதை எழுதும்போது எழுத்தாளன் பாத்திரத்தோடு ஒத்துணர்வு மிகுந்து அவனுக்கு இசைவாக- பாத்திரமாகவே மாறி- கதையை சொல்ல வேண்டும் என்று சொல்கிறார் அவர். எழுத்தாளைனின் உணர்வுகளும் கற்பனையும் பாத்திரங்களின் தன்மையைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஒரு எழுத்தாளனின் வேலை தன் கதாபாத்திரத்தின் புத்தி, கற்பனை, மனப்பாங்கு மற்றும் உணர்ச்சிகளைக் கூட்டி, அவனது வாழ்வின் நிதர்சனத்தை விவரிக்கக்கூடிய மொழியை அடைவதுதான் என்கிறார் அவர். எழுத்து என்பது அவருக்கு ஒத்திசைவு (எம்பதி) நிறைத்த இடமாக இருக்கிறது- எழுத்தாளனும் வாசகனும் இங்கு மட்டுமே இணைகிறார்கள்.

வாலரி லேகன் ஏதோ ஒரு அத்துமீறல், ஏதோ ஒரு எல்லைக் கோடு மீறப்படும் இடத்தில்தான் சிறுகதை நிற்கிறது என்று சொல்கிறார். எது அனுமதிக்கப்பட்டதாக இருக்கிறதோ, எது பழகிப் போன ஒன்றாக இருக்கிறதோ அது மீறப்படும்போது ஒரு புதிய தரிசனம் கிடைக்கிறது. இதுவே சிறுகதையின் குவிமையம் என்கிறார்.

படித்துப் பாருங்கள்.