15/3/11

இயற்கைப் பேரழிவுகள்


நாம் பார்த்த ஜப்பானிய ராட்சத திரைப்படங்களுக்கு அளவே இருக்காது- காட்ஜில்லாவில் துவங்கி எத்தனை எத்தனை விந்தை மிருகங்கள்!- இவை இன்று ஒரு கிடையாகவே (genre) மாறி விட்டன.

ந்யூ யார்க் டைம்ஸில் உலகில் வேறு எவரையும் விட ஜப்பானியர்களுக்கு ஏன் விந்தை உருவ ராட்சத மிருகங்களின் மேல் ஈர்ப்பு இருக்கிறது என்று சுவையாக எழுதியிருக்கிறார்கள். எல்லா நாடுகளும் வெவ்வேறு வகையில் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன, ஆனால் ஜப்பானியர்களின் கற்பனை மட்டும் ஏன் இந்த திசையில் விரிகிறது என்பதை சரியாக விளக்கவில்லை. வேறெங்காவது இது பற்றி விவரம் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

1954ல் அமேரிக்கா ஒரு அணு ஆயுத சோதனை செய்தது. அது எதிர்பார்த்ததைவிட ஒன்றரை மடங்கு வீரியமுள்ளதாக இருந்திருக்கிறது. தூரத்தில் கடலில் எங்கேயோ போய்க் கொண்டிருந்த ஜப்பானிய மீன்பிடி படகொன்றை அதன் கதிர் வீச்சு தாக்கவே, மீனவர்கள் உரிந்த தோளும் கதிரியக்க மீன்களுமாக கரை திரும்பியிருக்கிறார்கள். அந்த மீன்கள் சந்தையில் விற்பனையும் ஆயினவாம். இதைத் தொடர்ந்து எழுந்த பீதியில் கொஜிரா என்ற முதல் காட்ஜில்லா படம் வெளியானது- அதை அச்சமும் அழுகையுமாக ஜப்பானியர்கள் பார்த்தார்களாம்.

அதைத் தொடர்ந்து சுரங்கம் தோண்டும்போது விழித்துக்கொண்ட ரோடான் என்ற அரக்க மிருகங்கள், அணுகுண்டு சோதனையில் பிறந்த மோத்ரா, கமெரா என்ற ராட்சத கடல் ஆமை, வாரன் என்ற ராட்சத பறக்கும் அணில் என்று மனிதனின் கவனமில்லாத சேட்டைகளால் உயிர்பெற்ற இயற்கையின் சீற்றங்கள் ஜப்பானியர்களின் அச்சங்களை எதிர்கொள்ளும் புனைவுகளாய் வெற்றி பெற்றன.

கனவுகள் நம் உள்ளத்தின் உட்கிடைகளை அச்சு அசலாக வெளிப்படுத்துகின்றன என்றால் ஒரு பண்பாட்டில் வெற்றி பெரும் கலைப் படைப்புகள் அதன் அச்சங்களையும் ஆவல்களையும் பேசுகின்றன என்று கொள்ளலாம். அப்படி பார்க்கும்போது ஜப்பானின் மான்ஸ்டர் மூவிகள் தனி கவனத்துடன் பார்க்கப்பட வேண்டியவை- ஜப்பான் தன் அச்சுறுத்தல்களை ராட்சதத்தனமானவையாக, இயற்கையின் அதிபயங்கர ஆற்றல் கொண்டனவாக எதிர்கொள்கிறது.

அதற்கேற்றார் போலவே சுனாமி, அணு உலை வெடிப்பு போன்ற துயர் நிகழ்வுகளும் ஜப்பானியர்களுக்கு ஏற்படுவது வருந்தத்தக்கதே. அவர்களுக்கு நம் அனுதாபங்கள்.