20/3/11

துயருக்கில்லை மருந்து

ஜூலியன் பார்ன்ஸ் (Julian Barnes) இழப்பையும் மரணத்தையும் குறித்த தன் இருண்ட சிந்தனைகளாய் "அஞ்சுவதற்கில்லை" (Nothing to be Frightened of) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். கூர்மையான நகைச்சுவையுடன் எழுதப்பட்டிருந்தாலும் அது ஒரு துயர்கூடிய புத்தகமாகவே என் நினைவில் இருக்கிறது.

ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் தன் விதவத்துவம் குறித்து எழுதிய புத்தகத்துக்கு நூலுரை எழுத அவரைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது. ந்யூ யார்க் ரிவ்யூ ஆப் புக்ஸ்சில் அவரது நூலுரை மிக அருமையாகத் துவங்குகிறது-
"துயரத்தை ஆற்றுப்படுத்தத்தக்க முறைகள்" என்ற தன் கட்டுரையில் டாக்டர் ஜான்சன் மனித உணர்ச்சிகளில் துக்கத்துக்குள்ள அச்சுறுத்தும் தனித்தன்மையை அடையாளம் காட்டுகிறார். புண்ணியமோ பாபமோ, சாமானிய ஆசைகள் தமக்குள் தத்தமது நிறைவுக்கான வாய்ப்புகளைப் பேச்சளவிலேனும் வைத்திருக்கின்றன. 
தனது இதயத்தை விளிம்பு வரை நிறைக்கத்தக்க ஒரு குறிப்பிட்ட தொகை உள்ளதென்று கருமி மீண்டும் மீண்டும் கற்பனை செய்தி கொள்வான்; பிர்ரஸ் மன்னனைப் போல, வெற்றி பெறத் தவிக்கும் எந்தவொரு மனிதனும் தன் பாடுகள் முடிவடைதலை தன் உள்ளத்தில் பாதுகாத்து வைத்திருப்பான், அதன் பின் தன் வாழ்வின் மிச்ச நாட்களை சுகமாகவோ ஆனந்தமாகவோ, அமைதியாகவோ துதிப்பாகவோ தான் கழிக்க முடியுமென்று நம்புவான்.
ஆனால், துக்கம், "துயரம்,' வேறு வகைப்பட்டது. வலிமேவும் உணர்ச்சிகள்- அச்சம், பொறாமை, கோபம்- இவற்றுக்கும் இயற்கை ஒரு தீர்வை வைத்திருக்கிறது, அத்தீர்வோடு உளைச்சல் முடிவுக்கு வருகிறது.
ஆனால் துயரத்துக்கு இயற்கை மருந்தெதுவும் படைக்கவில்லை; அது பெரும்பாலும் சரி செய்யப்பட முடியாத விபத்துக்களால் நேர்கிறது, தொலைந்த அல்லது உருக்குலைந்தனவற்றைத் தொக்கி நிற்கிறது; அது நம்ப முடியாததை நாடி நிற்கிறது, அண்ட விதிகள் மாற்றப்பட வேண்டும்; இறந்தவர்கள் திரும்ப வேண்டும், அல்லது கடந்த காலம் திரும்பப் பெறப்பட வேண்டும்.

படித்துப் பாருங்கள். ஜூலியன் பார்ன்ஸ் எவ்வளவு அழகாக எழுதுகிறார்...