24/3/11

சிறுகதையின் லட்சியம்

இந்த உலகை ஒரு மணல் துகளில் காணவும்
காட்டு மலரில் சுவர்க்கத்தை அறியவும்
உள்ளங்கையில் காலமின்மையை ஏந்தவும்
ஒரு மணித் தியாளத்தில் நித்தியத்தை உணரவும்.

என்று கவிதை எழுதினார் வில்லியம் ப்ளேக்.

வாழ்க்கை கணத்துக்குக் கணம் வாழப்படுவதால், நாம் அதன் மெய்ம்மையை அறிவதானால் அது கணப்போதின் அனுபவமாகவே இருக்க வேண்டும், இல்லையா? காலத்தின் எல்லைகளை நிகழ் கணம் தன் சாத்தியங்களாக வைத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத எல்லைகளைக் கொண்ட காலமனைத்தின் ஆற்றலும் நிகழ் கணத்தில் அடக்கம். நிகழ் கணம் குறுகியதாக இருப்பினும், இதுவே நிரந்தரம், காலமின்மைக்கு நம்மை அழைத்துச் செல்லும் சன்னல். காலம் மறைத்து வைத்திருக்கும் உண்மைகளை உணர நமக்கிருக்கும் திறவுகோல்.

ஸ்டீவன் மில்ஹாசர் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? அவர் சிறுகதையையும் நாவலையும் ஒப்பிட்டு எழுதிய பழைய கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது. இரண்டில் எது சக்தி வாய்ந்தது என்று விவாதிக்கிறார் மில்ஹாசர்.

"அடங்காப் பசியுடையது நாவல், அது அனைத்தையும் விழுங்க விரும்புகிறது," என்கிறார் அவர். "நாவல் விஷயங்களை நாடுகிறது. அது மண்ணாசை பிடித்தது. அதற்கு உலகம் முழுதும் வேண்டும்." மலைகள், கடற்கரைகள், கண்டங்கள் என்று கண்ணில் கண்ட அனைத்தையும் தன் மகோன்னத அணைப்பில் இறுக்கிப் பிடிக்கத் துடிக்கிறது நாவல் என்கிறார் மில்ஹாசர்.

ஆனால் அவர் சிறுகதைகளின் சார்பில்தான் வாதாடுகிறார்-
தன்னியல்பில் நாவல் அனைத்தையும் விளக்கித் தீர்க்க வல்லது; ஆனால் இந்த உலகை விளக்கி மாளாது; எனவே பாஸ்டிய தேடலில் உள்ள நாவல், தன் ஆவலை என்றும் அடைய முடியாது. மாறாக சிறுகதையின் இயல்பு தேர்ந்தெடுக்கும் தன்மை கொண்டது. ஏறத்தாழ அனைத்தையும் விலக்கி வைப்பதால், அது எஞ்சியிருப்பதற்கு நிறைவான வடிவம் தர முடியும். நாவலுக்கில்லாத ஒரு வகை முழுமை தனக்கு உள்ளதென்று சிறுகதை உரிமை கோரவும் முடியும்- தன் முதல் புரட்சிகர மறுதலிப்புக்குப் பின் மிச்சம் இருப்பது அத்தனையயும் தான் ஏற்றுக் கொள்ள முடியும்.
மில்ஹாசர் சொல்வது இன்னும் அழகாகத் தொடர்கிறது-
.. சிறுகதை தன் சிறு மணல் துகளில் தன் முழு கவனத்தையும் குவித்து வைத்திருக்கிறது. அங்கே, அந்த இடத்திலேயே, தன் உள்ளங்கையில் உலகம் இருக்கிறது என்று உக்கிரமாக நம்புகிறது. தன் காதலியின் முகத்தை அறிந்தடைய விரும்புகிற காதலனைப் போல அந்த மணற்துகளை அது அறிய நாடுகிறது. சிறுகதை அந்த மணல் துகள் தன் மெய்யியல்பை வெளிப்படுத்தும் கணத்துக்காகக் காத்திருக்கிறது. அந்த அமானுட விரிதலின் கணத்துக்காக, சின்னஞ்சிறு வித்திலிருந்து மாபெரும் மலர் வெடிக்கும் தருணத்துக்காக, சிறுகதை காத்திருக்கிறது. அந்த கணத்தில்தான் சிறுகதை தன் ஆற்றலை அறிகிறது. அது தன்னினும் பெரிதாகிறது. அது நாவலைவிடவும் பெரிதாகிறது. அது இந்தப் பேரண்டத்துக்கிணையான உருவம் கொள்கிறது. இங்குதான் இருக்கிறது சிறுகதையின் அடக்கமின்மை, அதன் ரகசியத் தாக்குதல். திறப்பே அதன் நெறி. எளிமையே அதன் ஆற்றலின் கருவி.
பாதி தூக்கக்கலக்கத்தில் இதை எழுதுவதால் சரியாக வரவில்லை. ந்யூ யார்க் டைம்ஸில் படித்துக் கொள்ளுங்கள், தவற விடக் கூடாத இந்தக் கட்டுரையை.