30/3/11

கவிதை கையேடாவது எப்போது...

“Once in a lifetime / The longed-for tidal wave / Of justice can rise up / And hope and history rhyme.”
- The Cure at Troy, Seamus Heaney 



இந்தக் கட்டுரை நேர்த்தியாக எழுதப்பட்ட ஒன்றல்ல- ஆனால் நேர்மையாக எழுதப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இதை எழுதியிருப்பவர் ஒரு பத்திரிக்கை நிருபர்- இவர் கேட்கும் கேள்வி காலமெல்லாம் நாம் கேட்டுக் கொண்டிருக்கிற ஒன்று- புனைவின் பயனென்ன?- எது மகத்தான உண்மையை சொல்லவல்லது- செய்திகளா, கவிதையா? இதற்கு பதில் தரும்போதே, செய்திகளின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடாமல் கவிதைக்கு உரிய உயர் இடத்தை இவர் தந்திருக்கிறார்.

Seamus Heaney (இனி ஹீனி), அயர்லேந்தில் உள்நாட்டு போர் (விடுதலைப் போர்- இதுதான் செய்திகளின் பிரச்சினை: ஒருசார்பற்றுப் பேச முடியாது, நீ விரும்பினாலும் மொழி உன் தரப்பைக் காட்டிக் கொடுத்துவிடும்) நடந்து கொண்டிருந்தபோது ஒரு கவிஞனாகவும் மனிதனாகவும் ஹீனி என்ன செய்தார், அவரது தாக்கம் எத்தகையதாக இருந்தது என்று கட்டுரையில் எழுதியிருக்கிறார்- படித்துப் பாருங்கள், நான் இலக்கியம் தொடர்பான பத்திகளை மட்டும் எடுத்திருக்கிறேன், இதில் அரசியல் இருக்கிறது, அறம் இருக்கிறது. அதை எல்லாம் பேசுவதானால் மிகப் பெரிய பதிவாகப் போய் விடும். நீங்கள் கட்டுரையைப் படிப்பதுதான் சரி.

ஒரு பத்திரிக்கையாளராய் தன்னால் இயலாத ஒன்றை ஒரு கவிஞரால் மட்டுமே செய்ய முடியும் என்று இவர் சொல்கிறார், அதை மட்டும் தற்போதைக்கு பார்க்கலாம்- இதுதான் செய்திகளுக்கு புனைகலையின் வழி பூரணத்துவம் தருகிறது என்று நினைக்கிறேன்:

"சிறப்பாக செயல்படுகையில் பத்திரிக்கைத்துறையும் கவிதையும் உண்மையை வெளிப்படுத்துவது குறித்தவை என்று நான் முதலில் சொல்லியிருந்தேன். ஹீனி செய்வது என்னவென்றால் கவிதை மட்டுமே வெளிப்படுத்தக் கூடிய உண்மையை அவர் தருகிறார் என்பதே. நமக்கு கைக்கெட்டும் தூரத்தில் உண்மையைத் தள்ளி வைத்து அதை அச்சமில்லாமல் நாம் பார்த்து புரிந்து கொள்ள வகை செய்து தருகிறார் என்பதை சொல்ல வேண்டும். வடக்கு நிகழ்வுகளை செய்திகளாகத் தருகையில் நான் அவ்வப்போது ஹீனியின் கவிதையைப் படிப்பது உண்டு, என் பிரச்சினை நான் அதை அமைதியாக அணுகும் வகையில் அவரது கவிதைகளில் சொல்லப்பட்டிருப்பதை அப்போது உணர்வதுண்டு.
கவிதையின் இயல்பில் இது சாத்தியப்படுவது குறித்து ஹீனி எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது- வாலஸ் ஸ்டீவன்ஸை மேற்கோள் காட்டுகிறார் அவர் தன் கவிதையின் நீதி என்ற புத்தகத்தில். கவிஞன் வல்லமை பொருந்திய ஒருவன்- அவன், "நாம் நம்மையும் அறியாமல் திரும்பத் திரும்பத் திரும்பி வருகிற  உலகத்தை அவன் ஆக்கம் செய்கிறான்... அந்த உலகை நாம் நினைத்தும்கூட பார்ப்பதற்கு இன்றியமையாதிருக்கிற மகோன்னதமான புனைவுகளுக்கு அவன் உயிர் தருகிறான்," என்பதே அதன் காரணமாகிறது.

நமது அனுபவம் ஒரு புதிர்ப் பாதையைப் போன்றதெனின் அதன் வழிகளின் பிடிபடாத்தன்மை கவிஞன் அதன் உண்மைத்தன்மைக்கு இணையான ஏதோ ஒன்றைக் கற்பனை செய்து தனக்கும் நமக்கும் அதன் தீவிரமான அனுபவத்தை முன் வைத்து எதிர்கொள்ள முடியும் என்று ஹீனியே சொல்கிறார். நம் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் கவிதை அத்தகைய பணியாற்றுகிறது.
இன்னும் நிறைய இருக்கிறது- அதிலும் முக்கியமாக, ஒரு கவிஞன் எப்படி ஒரு இடத்தையும் அது சார்ந்த பண்பாட்டையும் தன் வாசகரகளுக்குரியதாக உணர்த்துகிறான், என்பது கவனிக்கத்தக்கது. கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.