19/3/11

இலக்கியமும் மருத்துவமும்

"ஒரு எழுத்தாளனாக நான் மருத்துவனின் வேலையை செய்திருக்கிறேன், ஒரு மருத்துவனாக எழுத்தாளனின் வேலையை செய்திருக்கிறேன்; பிறந்த இடத்தை விட்டு அரை மைல் கூட அப்பாலில்லாத இடத்தில் அறுபத்தெட்டு ஆண்டுகளாக சம்பவங்கள் அதிகமில்லாத சாதாரண வாழ்க்கை வாழ்ந்து ஒரு எழுத்தாளனாகவும் மருத்துவனாகவும் இந்த என் வேலையை நான் செய்திருக்கிறேன்" என்று சொல்கிற வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் தன் எழுத்து முறை பற்றி இப்படி சொல்கிறார்-
"ஐந்து நிமிடங்களோ பத்து நிமிடங்களோ அது எப்போதும் கிடைக்கும். நான் என் ஆபிஸ் டெஸ்கில் டைப்ரைட்டர் வைத்திருந்தேன். செருகியிருந்த காகிதத்தை இழுத்து விட்டால் போதும், எழுதத் தயார்- அவ்வளவே எனக்குத் தேவையாக இருந்தது. நான் மிக வேகமாக வேலை செய்வதை வழக்கமாக வைத்திருந்தேன். வாக்கியத்தின் மத்தியில் இருக்கும்போது ஒரு நோயாளி கதவைத் திறந்து கொண்டு வந்தால் என் மெஷின் தடால் என்று மூடப்படும்- நான் இப்போது ஒரு மருத்துவன். நோயாளி போனதும், மெஷின் வெளியே வரும். என் புத்தி ஒரு உத்தியை வளர்த்துக் கொண்டது: எனக்குள் வளரும் ஏதோ ஒன்று தன்னை அறுவடை செய்ய வேண்டுமென நிர்பந்தித்தது. அதை நான் கவனித்தேயாக வேண்டியதாக இருந்தது. கடைசியில், இரவு பதினோரு மணிக்குப் பின், என் கடைசி நோயாளியும் உறங்கப் போனதும், என்னால் எப்போதும் பத்து பன்னிரெண்டு பக்கங்களை அடித்துப் போடத் தேவையான அவகாசம் காண முடிந்தது. உண்மையைச் சொல்வதானால் என்னை நாளெல்லாம் துளைத்து சித்திரவதை செய்து கொண்டிருந்த தீவிர எண்ணங்களில் இருந்து என் மனதை விடுவித்துக் கொள்ளாமல் என்னால் ஓய முடியவில்லை. அந்த வதையிலிருந்து சுத்திகரிக்கப்பட்டவனாய், கிறுக்கி முடித்ததும், எனக்கு ஒழிவு கிடைத்தது.
வில்லியம் கார்லோஸ் வில்லியம்சை எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கொண்டாடுவதில் நான் பெருமை கொள்கிறேன்.

--------------

இலக்கியம் எவ்வளவுதான் புனிதமானதாக இருக்கட்டுமே, அது கண்ணில்லாதவர்களுக்கு வண்ணங்களையும், காது கேளாதவர்களுக்கு இசையையும், பேச வராதவர்களுக்கு குரலையும், கல் நெஞ்சர்களைக் கனிவித்து அவர்களுக்குக் கருணையையும்தான் கொடுக்கட்டும்: இலக்கியவாதிகள் ஆண்டவனால் ஆகாத அதிசயங்களையும் நிகழ்த்திக் காட்டட்டும்- அதனாலெல்லாம் அவர்கள் மருத்துவர்களை விட உயர்ந்தவர்கள் ஆகி விடுவார்களா என்ன? உலகை உய்விக்க வந்த தோரணைதான் என்ன, சிறுமை கண்டு பொங்கல் படைக்கிற சாகசம்தான் என்ன!: எழுத்தை மறைத்துப் பார்த்தால் பெரும்பாலான எழுத்தாளர்கள் சிறுமைகளால் வீணாய்ப் போன அற்பர்களாக மட்டுமே அறியப்படுவார்கள் என்று நினைக்கிறேன்.

நான் ஏன் இப்படி உளறுகிறேன்?

இந்த மருத்துவர் சொல்வதைக் கேளுங்கள்- ஐந்து நிமிடங்கள்தான் பேசுகிறார். ஆனால் எந்த இலக்கியவாதியாலும் எளிதில் தொட முடியாத புள்ளியைத் தொடுகிறார்: அவர் தன் தொழிலில் மிக முக்கியமான விஷயமாக எதை நம்புகிறார் தெரியுமா? தன் நோயாளியின் படுக்கைக்குப் போய் அவனுக்குப் போர்த்து விடுவதைத்தான். உனக்குப் போர்வை கொண்டு வரட்டுமா, உன்னை போர்த்து விடட்டுமா என்றெல்லாம் கேட்கும்போது நான் அவனது நலனை நாடுகிறேன், அவனுக்கு சுகமளிக்க முனைகிறேன் என்ற நிலையில் அவனது உள்ளத்தைத் தொடுகிறேன். இந்த ஆற்றுப்படுதலே மருத்துவனின் முக்கிய கடமை என்று நான் நம்புகிறேன், என்கிறார் டாக்டர் டேவிட் அடினாரோ.

அவசர சிகிச்சை கொடுக்கும் மருத்துவன் தன் நோயாளியை கொஞ்சம் நன்றாக உணரச் செய்ய வேண்டும், அந்த சமயத்தில் மோசமான எதுவும் நடந்து விடாதபடிக்கு அவனை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும், அவனது நோய்க்குறிகளுக்கான காரணங்களை அவனுக்கு விளக்க வேண்டும் என்று சொல்கிறார் டாக்டர் டேவிட் அடினாரோ- இவையே அவனது கடமைகள்.

இலக்கியம் பற்றி பேசுகிறவர்கள் இந்த அளவுக்கு செய்தாலே பெரிய சாதனை என்று நினைக்கிறேன்.