5/3/11

சும்மா கொடுத்தால் கோடி புண்ணியம்

கிழக்கு பதிப்பகத்தின் கிளியரன்ஸ் சேல் குறித்து சிலபல எதிர்மறை விமரிசனங்கள் இணையத்தில் எழுந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். பொதுவாக பெரும்பாலானவர்கள் பாராட்டு தெரிவித்தாலும், ஒரு சிலர் கிழக்கின் இச்செயல் குறித்த தங்கள் அவநம்பிக்கைகளையும் சந்தேகங்களையும் வெளிப்படுத்தியிருந்தனர். நானேகூட சில புத்தகங்களை கொள்ளை மலிவாக வாங்கியிருந்தாலும் இது குறித்து அதிருப்தியில்தான் இருந்தேன்.

ஆனால் இத்தகைய வணிக உத்திகள் வியாபாரத்துறையில் லாபம் தருகிறது என்று சொல்கிறார்கள். இது புத்தகங்களுக்கும் பொருந்துமா என்று சந்தேகப்பட்டேன், பொருந்தும் போல்தான் தெரிகிறது.

பாருங்கள், உலக புத்தக இரவை ஒட்டி இன்று இங்கிலாந்தில் தேர்ந்தெடுத்த இருபத்தைந்து புத்தகங்களின் ஒரு மில்லியன் காப்பிகளை (பத்து லட்சம் பிரதிகள் என்று நினைக்கிறேன்) இலவசமாகக் கொடுக்கிறார்கள். இருபதாயிரம் பேர் இந்த இருபத்தைந்து புத்தகங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தலைக்கு நாற்பத்தெட்டு நபர்களுக்கு இலவசமாகக் கொடுக்க இருக்கிறார்கள். எஞ்சிய புத்தகங்கள் சிறைச்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்குக் கொடுக்கப்பட இருக்கின்றன.

இதனால் இந்த 'இலவச' புத்தகங்களில் மதிப்பும் விற்பனையும் குறையும் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை.

இங்கே உள்ள செய்தியின்படி இலவசம் அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்தில் இந்த இருபத்தைந்து புத்தகங்களும் ஐம்பத்து ஆறாயிரம் பிரதிகள் கூடுதலாக விற்றிருக்கின்றன! இந்தக் கூடுதல் விற்பனை ஓரிரு புத்தகங்களின் விற்பனையை மட்டும் ஒட்டி நிகழ்ந்ததல்ல, பரவலாக பதினாறு புத்தகங்கள் கூடுதல் விற்பனை கண்டிருக்கின்றன.

நல்ல செய்திதானே?

போன வாரம் இந்த மாதிரி ஒரு அமெரிக்க எழுத்தாளரின் இரண்டாவது புத்தகம் சரியாக விற்பனையாகாததால் அதன் பதிப்பாளர் நாவலின் பிரதிகளை இலவசமாக விநியோகம் செய்ய முடிவு செய்திருப்பதாக செய்தி ஒன்று படித்து அதிர்ந்தேன். அவர் கூறிய காரணம் என்னவென்றால், அந்த ஆசிரியர் எழுதிய முதல் புத்தகம் விமரிசகர்களால் பாராட்டப்பட்டு நல்ல விற்பனை கண்டது, இந்தப் புத்தகமும் சிறப்பாக இருந்தாலும் எந்த காரணத்தாலோ விமரிசகர்களால் கவனிக்கப்படவில்லை, அதனால் புத்தகங்கள் படிக்கப்படாமல் போய் விடக்கூடாது என்ற அக்கறையேயாகும். துரதிருஷ்டவசமாக நான் இந்த செய்தியை எங்கு படித்தேன் என்று குறித்து வைத்துக்கொள்ள மறந்துவிட்டேன்.

இந்த செய்தியைப் பார்த்ததும் அவர் செய்தது சரிதான் என்று தோன்றுகிறது. கிழக்கு பதிப்பகம் செய்ததும் புத்திசாலித்தனமான காரியம் என்ற எண்ணம் எழுகிறது.

சில சுட்டிகள்-




அண்மையில் சொல்வனம் இணைய இதழில் Half of a Yellow Sun என்ற நாவலை ஏழுதிய Chimamanda Ngozi Adichie அவர்களின் பேட்டி ஒன்றைப் படித்திருப்பீர்கள். அந்தப் புத்தகம் தற்போது இலவசமாகக் கொடுக்கப்படும் இருபத்தைந்து புத்தகங்களின் பட்டியலில் இருக்கிறது. இதன் பிடிஎப் கோப்பை World Book Night தளத்தின் இந்த பக்கத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.