3/3/11

மேகன் ஓ'ரூர்க்

சென்ற பதிவில் மேகன் ஓ'ரூர்க் (Meghan O’Rourke) அவர்களின் அஞ்சலைப் படித்திருப்பீர்கள் - தன் தாய் குறித்து அவர் எழுதிய குறிப்புகள் ந்யூ யார்க்கரில் இங்கே- 

என் அம்மா மரணமடைவதற்கு ஒரு வாரம் முன்னர் என் அப்பா ஒரு கிருஸ்துமஸ் மரத்தை வீட்டுக்குக் கொண்டு வந்தார். அதை விளக்குகளால் அலங்கரித்தார். அது என் அம்மாவின் படுக்கையிலிருந்து ஐந்தடி தொலைவில் இருந்தது. வண்ண விளக்குகளின் வெம்மையான சோபையில் அவள் வெயில் பூசிய மாநிறம் சேர்ந்தவளாயிருந்தாள்.

ஓய்வறையில் நான் “The Hound of the Baskervilles,” நாவலின் பழைய பிரதி ஒன்றை எடுத்துக் கொண்டேன். அவள் அதை நான் நான்காம் கிரேட் படிக்கும்போது எனக்கு கிருஸ்த்மஸ் பரிசாகத் தந்திருந்தாள். நான் அவள் அருகே படுத்துக்கொண்டு அதைப் படித்தேன். அவள் கண்விழிக்குமுன் நான் எழுந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. ஒரு போல் கஞ்சி (bowl of cereal) செய்வேன். ஸ்லீப்பிங் பேக்கில் நுழைந்து என்னை ஜிப் செய்து கொள்வேன். அவள் எழுந்ததும் சமையலறைக்குள் உறக்கம் கலைக்காத ஆடைகளுடன் வருவாள், "ஹி மெக்," என்றென்னை அழைப்பாள். அவளுடனான என் பிணைப்பைத் தளர்த்திக் கொள்ள முயற்சிக்கையில்தான் நான் அவள் எனக்கு இன்னும் இன்னும் வேண்டும் என்ற என் பசியை உணர்வேன். தாய் துவக்கமில்லாக் கதை. அதுவே அவள்.

ஒரு இரவு. நான் இருளில் விழிக்கையில் என் அப்பா கீழே வந்திருப்பதைக் கண்டேன். அவர் என் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது சட்டையின் பாக்கெட்டுகளில் முஷ்டியிட்டு, தோள்கள் வளைந்து நின்றார் பல நிமிடங்கள், அவளது உறங்கும் முகத்தை வெறித்திருந்தார்.

அந்த அவளது இறுதி நாட்களில் என் அம்மா மிக இளமையாகத் தோற்றமளிக்கத் துவங்கினார். அவளது முகம் அவ்வளவு எடை குறைந்திருந்தது, ஒரு குழந்தை போல் எலும்புகள் தென்பட்டன. அவளது புருவங்களும் கண்ணிமைகளும் அடர் கரும் நிறம் கொண்டன. நான் அவளது கைகளைப் பற்றி நின்றேன். அவளது முகத்தைத் தடவித் தந்தேன். அவளது சருமம் மெழுகு போல் தோற்றம் கொள்ளத் துவங்கிய நாட்கள், சிறு கரடுகள் அதில் தென்பட்டன, அவளது செதில்கள் உதிரும் காலம் போல்.

அந்த கிருஸ்துமஸ்ஸில் அவள் இறந்த போது நாங்கள் அனைவரும் அவளருகே இருந்தோம். அவள் சுவாசம் தொய்வடைந்தது, அவள் எங்களைப் பார்க்கத் தன் கண்களைத் திறந்தாள். எங்களிடம் சொல்வதற்கிருந்த விஷயங்களை நாங்கள் சொன்னோம். அவள் எங்களை நீங்கிப் போனாள்.